கொரோனா பாதிப்பால் இந்திய பொருளாதாரம், வர்த்தக சந்தை, வேலை வாய்ப்பு சந்தை என சகலமும் பாதிக்கப்பட்ட நிலையில், இந்தியப் பங்குச்சந்தை மிகப்பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொண்டது என்றால் மிகையில்லை. முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டைப் பாதுகாக்க பல்வேறு முயற்சிகளைச் செய்துள்ளனர். இதன் விளைவாக இந்த வருடத்தில் வர்த்தகமே இல்லாத ஒரு நிறுவனத்தின் பங்கு மதிப்பு சுமார் 4,300 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
ஆம் வெறும் எந்த ஒரு விற்பனையும் இல்லாமல் லாபத்தை மட்டுமே பதிவு செய்து வந்த நிறுவனங்கள் முதலீட்டாளர்களைப் பெரிய அளவில் ஈர்த்துள்ளது வியப்படையும், அதிர்ச்சியும் அளிக்கிறது.
அப்படி எந்த நிறுவனம் வர்த்தகமே இல்லாமல் 4,300 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது தெரியுமா..?
2 நிறுவனங்கள்
டிரான்ஸ்குளோப் புட்ஸ் லிமிடெட், இது ஒரு ஜாம் தயாரிக்கும் நிறுவனம், இந்த ஆண்டு மட்டும் இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு சுமார் 4,300 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதேபோல் ரியல் எஸ்டேட் சேவை நிறுவனமான ஸ்ரீ ப்ரீகோட்டட் ஸ்டீல்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் 1,300 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
இவ்விரு நிறுவனங்களும் இந்த வருடம் எவ்விதமான வர்த்தகத்தையும் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரிஸ்க்
இந்த கொரோனா காலத்தில் இந்தியப் பங்குச்சந்தையில் ஏற்பட்ட மோசமான வர்த்தக சூழ்நிலையில் முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டைக் காப்பாற்றிக்கொள்ள ஆபத்து நிறைந்த முதலீடுகளைச் செய்து வருகின்றனர். இதன் வாயிலாகவே டிரான்ஸ்குளோப் புட்ஸ் லிமிடெட், ஸ்ரீ ப்ரீகோட்டட் ஸ்டீல்ஸ் லிமிடெட் போன்ற முன்பின் தெரியாத நிறுவனங்களில் முதலீட்டாளர்கள் அதிகளவிலான முதலீட்டைச் செய்து வருகிறனர்.
இதன் மூலமாகவே பங்கு மதிப்பு ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது.
ஆபத்து
ஆனால் இதுபோன்ற நிறுவனங்களில் அதிகளவில் முதலீடு செய்வோர் சிறு குறு முதலீட்டாளர்களாகவே இருப்பார்கள். அப்படி அதிகப்படியான தொகையை முதலீடு செய்த நபர் திடீரென விலக்கிக்கொண்டால் மொத்த பங்கு மதிப்பு தரையைத் தட்டிவிடும்.
எப்போதும் முதலீட்டாளர்கள் தரமான, நிலையான நிறுவனங்களில் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும் என ஸ்மார்ட்சன் கோபிட்டல் நிறுவனத்தின் பண்ட் மேனேஜர் சுமித் ரோரா தெரிவித்துள்ளார்.
ஸ்மால் கேப்
மார்ச் மாத சரிவிற்குப் பின் இந்தியாவில் ஸ்மால் கேப் பங்குகள் மீதான வர்த்தகம் 69 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதேபோல் வருடாந்திர கணக்குப் படி ஸ்மால் கேப் பங்கு வர்த்தக சந்தை 9.3 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
ஆனால் சென்செக்ஸ் மார்ச் மாத சரிவில் இருந்து வெறும் 50 சதவீதம் மட்டுமே மீண்டு உள்ளது.
ரீடைல் முதலீட்டாளர்கள்
கொரோனா லாக்டவுன்-க்கு பின் இந்தியாவில் பெரும் பகுதி ரீடைல் முதலீட்டாளர்கள் பென்னி ஸ்டாக்ஸ் மீது அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர். ஆனால் பலர் இதில் ஒரு நிறுவனத்தின் price-to-earnings ratio, Ebitda, வருமானம் மற்றும் வர்த்தக நிலை ஆகியவற்றைப் பற்றி எதுவும் தெரியாமல் முதலீடு செய்து வருகின்றனர்.
அது ஒரு வகையில் பெரிய ஆபத்தாகவே பார்க்க வேண்டிய கட்டாயத்தில் தற்போது முதலீட்டாளர்கள் உள்ளனர்.