நாடு முழுவதும் கொரோனாவின் ருத்ரதாண்டவம் குறைந்து தற்போது தான் சற்று இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கியுள்ளது.
கடந்த ஆண்டில் கொரோனா பரவலை தடுப்பதற்காக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் லாக்டவுனை அமல்படுத்தின. இதனால் பங்கு சந்தைகள் மிக மோசமான சரிவினை கண்டன.
இது இன்னும் எவ்வளவு தான் சரியுமோ என்ற அச்சத்தினை அந்த சமயத்தில் ஏற்படுத்தியது. ஆனால் அதன் பிறகு சந்தையானது யாரும் எதிர்பாராத அளவு ஏற்றம் கண்டது. இது கடந்த ஆண்டு சரிவில் அச்சம் கொள்ளாமல் வாங்கி வைத்தவர்களுக்கு நல்ல லாபம் எனலாம்.
தெரியாதவற்றில் முதலீடு வேண்டாம்
பங்கு சந்தையில் முதலீடு என்றாலே பத்தடி தள்ளி நிற்கும் பலரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவெனில், உலகின் பங்கு சந்தையின் தந்தை என்று அழைக்கப்படும் வாரவ் பஃபெட், 11 வயதிலேயே பங்கு சந்தையில் முதலீடு தொடங்கினார் என்பதனை தெரிந்து கொள்ள வேண்டும். அவரின் தாரக மந்திரமே புரியாத தொழில் முதலீடு செய்ய வேண்டாம் என்பது தான்.
தெரிந்தவற்றில் முதலீடு செய்யுங்கள்
ஆக உங்களுக்கு தெரிந்த, நன்கு புரிந்து கொண்ட துறையில் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். ஏனெனில் நீங்கள் நன்றாக புரிந்து கொண்ட, தெரிந்து கொண்ட துறையில் முதலீடு செய்தால் மட்டுமே, உங்கள் முதலீட்டின் நெளிவு சுளிவுகளை தெரிந்து கொள்ள முடியும். அப்போது தான் உங்கள் முதலீட்டில் நடக்கும் மாற்றங்களை உங்களால் தெரிந்து கொள்ள முடியும்
எப்போது பேராசை பட வேண்டும்
எல்லோரும் பேராசைப்படும் போது கவனமாக இருக்க வேண்டும். எல்லோரும் பயப்படும்போது பேராசைப் பட வேண்டும்.( Be Fearful When Others Are Greedy and Greedy When Others Are Fearful) என்பது பங்கு சந்தையின் தந்தை என்று அழைக்கப்படும் வாரன் பஃபெட்டின் வரிகள்.. இதன் அர்த்தம் சந்தையில் எல்லோரும் பேராசைப்படும் போது, எதை பற்றியும் கவலைப்படாமல் அனைவரும் பங்குகளை வாங்குவார்கள். ஒரு பங்கை அதற்கு உரிய விலையை விட மிக அதிக விலை கொடுத்து வாங்குவார்கள்.
யூகத்தில் வாங்குவார்கள்
ஏனெனில் பங்கின் விலை அதிகரித்து வருகிறது. அனைவருக்கும் தங்களின் முதலீட்டை குறுகிய காலத்தில் நல்ல லாபம் பார்க்கலாம் என்ற பேராசை. ஆக அந்த குறிப்பிட்ட பங்கு உயர்ந்து கொண்டே போகும் என்ற ஆசையில், யூகத்தில் அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு, வியாபார வளர்ச்சிக்கான வாய்ப்புக்கள் என எதை பற்றியும் கவலைப் படாமல் வாங்கி விடுவார்கள்.
டேட்டாவினால் சரியலாம்
உதாரணத்திற்கு ஒரு டேட்டா ஒன்று சாதகமாக வெளியானால் பங்குகள் விலை அதிகரிக்கும் என்ற ஊகத்தில் அனைவரும் வாங்குவார்கள். ஆனால் எதிர்பாராதவிதமாக அந்த டேட்டா சந்தைக்கு எதிர்மாறாக வந்தால், பங்குகள் சந்தையில் மடமடவென சரிய ஆரம்பித்து விடும். அந்த நேரத்தில் அப்படி தேவையற்ற பயத்தினால் நல்ல பங்குகளும் அந்த நேரத்தில் சரியலாம்.
இது தான் காரணம்
ஆனால் நிறுவனத்தின் மோசமான செயல்பாடு காரணமாக பங்கு விலை சரியவில்லை, வேறு காரணங்களால் பங்கு விலை வீழ்ச்சி கண்டது. இது ஒரு தற்போதைய நிகழ்வு. இதிலிருந்து பங்கின் விலை கண்டிப்பாக மீண்டு வரும், ஏனென்றால், அடுத்த காலாண்டில் நிறுவனத்தின் லாப கணக்கு எதிர்பார்த்தபடியே அல்லது அதை விட அதிகமா இருக்கும் போது பங்கு விலை அதிகரிக்கும். ஆக இது வாங்க சரியான இடம் தான்.
இன்று எந்த நிறுவனம்?
ஆக ஒரு பங்கினை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு, அதன் பிறகு முதலீடு செய்யலாம். அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருக்கும் பங்கானது கல்பதாரு பவர் டிரான்ஸ்மிஷன் லிமிடெட். இது கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 112% லாபம் கொடுத்துள்ளது. இந்த பங்கின் விலையானது கடந்த ஆகஸ்ட் 3, 2020ல் 228.6 ரூபாயாக இருந்த நிலையில், இன்று அதன் விலை 485.75 ரூபாயினை தொட்டுள்ளது.
எவ்வளவு ஏற்றம்?
கடந்த 12 மாதங்களில் இந்த பங்கின் விலையானது 112% ஏற்றம் கண்டுள்ளது. அதே காலகட்டத்தில் சென்செக்ஸ் 41% மட்டுமே ஏற்றம் கண்டுள்ளது. இந்த காலகட்டத்தில் நீங்கள் சுமார் 1 லட்சம் முதலீடு செய்திருந்தால், கடந்த ஆண்டில் 1 லட்சத்திற்கு 229 ரூபாய் என்ற விலையில் இந்த பங்கினை வாங்கியிருந்தால், உங்களால் 400 பங்குகளை வாங்கியிருக்க முடியும்.
லாபம் எவ்வளவு?
இன்றைய அதன் விலை 485 ரூபாய் என்று வைத்துக் கொண்டாலும் கூட, 1 லட்சம் முதலீடு இன்று 1,94,000 ரூபாயாக இருக்கும். இதே 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் இன்றைய அதன் மதிப்பு, 10 லட்சம் ரூபாய்க்கு மேல். மொத்தத்தில் சில லட்சங்கள் லாபமாக கிடைத்திருக்கும்.
ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகிறது?
இந்த பங்கின் விலையானது தற்போது 5 நாள், 10 நாள், 20 நாள், 50 நாள், 100 நாள், 200 நாள் மூவிங் ஆவரேஜுக்கு மேலாக காணப்படுகிறது. இந்த நிறுவனத்தின் கடன் விகிதம் என்பது மிக குறைவாகவே உள்ளது. ஆக இதுவே இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மிக உறுதுணையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு டெக்னிக்கலாகவும் இந்த பங்கின் விலையானது ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகிறது.
லாப விகிதம்?
இந்த நிறுவனத்தின் லாபமானது மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 174 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 31 கோடி ரூபாயாக இருந்தது. இதே வருவாய் 16% அதிகரித்து, 4,086 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 3,527 கோடி ரூபாயாக இருந்தது.
இபிஎஸ் விகிதம்
கடந்த மார்ச் 2021ல் இபிஎஸ் விகிதம் (EPS) விகிதமானது மார்ச் 2021ல் 11.68 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் வெறும் 2 ரூபாயாக மட்டுமே இருந்தது.
இந்த கல்பதாரு நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜேஎம்சி புராஜெக்ட்ஸ் 1624 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ஆர்டர்களை பெற்றுள்ளது.
பங்கினை வாங்கலாமா?
நடப்பு ஆண்டில் இதன் ஆர்டர் புத்தகத்தில் நல்ல வளர்ச்சியினை கண்டுள்ளதாகவும், இது இந்த பங்கு இனி வரவிருக்கும் ஆண்டுகளிலும் வளர்ச்சிக்கு உந்துதலாக அமையும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
மொத்தத்தில் இந்த பங்கின் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
குறிப்பு: இந்த பங்குகளை வாங்கலாம் என நிபுணர்கள் கூறினாலும், உங்களின் முடிவே இறுதி முடிவாக இருக்கட்டும்.