டெல்லி: அமெரிக்கா தும்மினால், உலகத்துக்கு ஜல தோசம் பிடித்துக் கொள்ளும் என வேடிக்கையாகச் சொல்வார்கள். ஆனால் தற்போது இந்த வார்த்தைகள் உண்மையாகி இருக்கிறது.
நேற்று மார்ச் 05, 2020, அமெரிக்காவின் நாஸ்டாக் சந்தை சுமாராக 3 சதவிகிதத்துக்கு மேல் சரிந்து இருக்கிறது.
என்ன ஆச்சு, ஏன் இப்படி சந்தை சரிகிறது. இந்த சந்தை சரிவால் முதலீட்டாளர்கள் எவ்வளவு இழந்து இருப்பார்கள் என விரிவாகப் பார்ப்போம்.
அமெரிக்கா & ஐரோப்பா சந்தைகள்
நேற்று (மார்ச் 05, 2020) அமெரிக்காவின் நாஸ்டாக் 3.10 % சரிவு, லண்டனின் எஃப் டி எஸ் இ 1.62 % சரிவு, பிரான்ஸின் சி ஏ சி 1.90 % சரிவு, ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் 1.51 % சரிவு என ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சந்தைகள் எல்லாமே சரிந்து இருக்கின்றன. அவர்களே சரியும் போது ஆசிய சந்தைகளும் சரியத் தானே செய்யும்.
ஆசிய சந்தைகள் இன்று
இன்று மார்ச் 06, 2020, ஆசியாவில் அனைத்து சந்தைகளும் சரிவில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதிகபட்சமாக சிங்கப்பூரின் எஸ் ஜி எக்ஸ் நிஃப்டி 3.35 % சரிந்து இருக்கிறது. குறைந்து அளவு சரிவு கண்டு இருக்கும் சந்தை என்றால், அது சீனாவின் ஷாங்காய் காம்பொஸைட் தான். இந்த சந்தை -0.98% சரிந்து இருக்கிறது.
என்ன ஆச்சு
அமெரிக்க பொருளாதாரம், கொரோன வைரஸால் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அதிபர் ட்ரம்பே ஒப்புக் கொண்டதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அதோடு அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெட்ரல் வங்கி தன் வட்டி விகிதத்தை 0.5 சதவிகிதம் குறைத்து இருக்கிறது. இது இரண்டுமே சந்தையை நேரடியாக பாதித்து இருக்கின்றன. அதோடு வரும் மார்ச் 17 - 18-ல், Federal Open Market Committee கூட்டத்தில், இன்னும் பல பொருளாதார பிரச்சனைகள் வெளி வரும் என்கிறார்கள் அனலிஸ்ட்கள்.
ஏன் சந்தை சரிவு
உலகின் மிகப் பெரிய பொருளாதாரமான, அமெரிக்காவே சரியும் போது, அதைச் சார்ந்து மற்ற பல நாட்டு சந்தைகளும் சரியத் தானே செய்யும். அதனால் தான் தொடர்ந்து ஐரோப்பிய நாட்டு சந்தைகள் மற்றும் ஆசிய நாட்டுச் சந்தைகள் சரிந்து கொண்டு இருக்கின்றன. இது போல இந்திய காரணிகளும் சென்செக்ஸை சிதைத்துக் கொண்டு இருக்கின்றன.
வங்கி இண்டெக்ஸ் அடி
இந்தியாவின் பங்குச் சந்தையில் யெஸ் பேங் சுமார் 14 %, இண்டஸ் இண்ட் பேங்க் 11 %, எஸ் பிஐ 8 சதவிகிதம் என சரிவில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. சென்செக்ஸ் காலையில் வர்த்தகமாகத் தொடங்கிய போதே சுமாராக 1,450 புள்ளிகள் சரிந்து இருக்கிறது.
நஷ்டம்
சென்செக்ஸ் வர்த்தகமாகத் தொடங்கிய அடுத்த 60 நொடிகளுக்குள் சுமார் 4.42 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்பு நஷ்டம் அடைந்தது. நேற்று மாலை சென்செக்ஸில் 147.59 லட்சம் கோடியாக இருந்த சொத்து மதிப்பு இன்று காலை வர்த்தகமாகத் தொடங்கிய நிமிடத்தில் 143.17 லட்சம் கோடியாக சரிந்தது குறிப்பிடத்தக்கது. இன்று வர்த்தகம் முடிவதற்குள் எத்தனை லட்சம் கோடி காலியாகப் போகிறதோ தெரியவில்லை.