மும்பை பங்குச்சந்தை அமெரிக்கச் சந்தை சரிவை கடந்து, ஒமைக்ரான் வைரஸ் எதிரொலியை தாண்டி, இந்தியாவில் பல மாநிலங்களில் பல்வேறு பயணக்கட்டுப்பாடுகள் விதித்துள்ளதைக் கடந்து இன்று சென்செக்ஸ் 620 புள்ளிகள் வரையில் உயர்ந்து முதலீட்டாளர்களுக்குப் பெரும் லாபத்தைக் கொடுத்துள்ளது.
மும்பை பங்குச்சந்தையின் இன்றைய வர்த்தகம் தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்ததுள்ளது. இந்நிலையில் இன்றைய வர்த்தகத்தில் டெலிகாம் துறை பங்குகள் அதிகப்படியான வளர்ச்சியை அடைந்துள்ளது. குறிப்பாக வோடபோன் ஐடியா பங்குகள் சுமார் 20 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது.
இந்திய டெலிகாம் சந்தை
இந்திய டெலிகாம் சந்தையில் மிகவும் மோசமான நிதி நிலையில் இருக்கும் வோடபோன் ஐடியா நிறுவன பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் 20 சதவீதம் வரையில் உயர்ந்து பங்கு விலை 13.25 ரூபாய் வரையில் உயர்ந்து தனது 52 வார உயர்வான 13.80 ரூபாயை நெருங்கியுள்ளது.
வோடபோன் ஐடியா
இன்றைய வர்த்தகத்தில் வோடபோன் ஐடியா பங்குகள் சுமார் 10 மாத உயர்வை பதிவு செய்துள்ளது. குறிப்பாக வோடபோன் ஐடியா தனது டெலிகாம் சேவை கட்டணத்தை 20-25 சதவீதம் வரையில் உயர்த்திய பின்பு கடந்த 5 நாட்களில் சிறப்பான வர்த்தக வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
4 வருட மோரோடோரியம்
இந்திய டெலிகாம் நிறுவனங்கள் அதிகப்படியான நிலுவைத் தொகையை அரசுக்கு செலுத்த வேண்டும், இதனால் இந்நிறுவனங்களின் நிதிநிலை மிகவும் மோசமான நிலைக்குச் சென்றது. இதைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு பல கட்ட ஆலோசனைக்குப் பின்பு 4 வருட மோரோடோரியம் கொடுத்துள்ளது.
5ஜி சேவை
இந்த இடைப்பட்ட காலத்தில் அதிகப்படியான வருமான ஈட்டுவது மட்டும் அல்லாமல் 5ஜி சேவை வழியாகப் பெரிய அளவிலான வர்த்தகத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக ஏர்டெல் போட்டி மிகுந்த சந்தையில் ரிஸ்க் எடுத்துக் கட்டணத்தை உயர்த்தியது.
கட்டண உயர்வு
ஏர்டெல் நிறுவனத்தைத் தொடர்ந்து வோடபோன் ஐடியா மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் கட்டணத்தை உயர்த்தியது. இதன் மூலம் ஏர்டெல், ஜியோ நிறுவனத்திற்கு மட்டும் வருடத்திற்கு 7500 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் கிடைக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
சாதகமாகச் சூழ்நிலை
ஒருபக்கம் அரசின் சலுகைகள் மறுபக்கம் கட்டண உயர்வு மூலம் அதிகப்படியான வருமானம், இதுமட்டும் அல்லாமல் 5ஜி சேவை அறிமுகம் என டெலிகாம் நிறுவனங்களுக்கு அடுத்த 4 வருடம் பொற்காலமாக உள்ளது.
பங்கு விலை
இதன் காரணமாகத் தான் கடந்த ஒரு வாரமாக டெலிகாம் நிறுவனங்கள் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது. இன்றைய வர்த்தக முடிவில் வோடபோன் ஐடியா பங்குகள் 14.45 சதவீதம் உயர்ந்து 12.67 ரூபாயும், ஏர்டெல் இன்று 737.40 ரூபாய் அளவில் உயர்ந்தாலும் முதலீட்டாளர்கள் லாபத்திற்காகப் பங்குகளை விற்பனை செய்த காரணத்தால் 1 சதவீதம் சரிந்து 721.00 ரூபாய்க்கு குறைந்துள்ளது.