கடந்த சில வாரங்களாக சென்செக்ஸ், மேல் நோக்கி பிரமாதமாக வர்த்தகமாகி வந்தது. ஆனால் இன்று திடீரென முரட்டு சரிவில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.
சென்செக்ஸ் தன் இன்றைய உச்சப் புள்ளியான 41,048 புள்ளியில் இருந்து 1,320 புள்ளிகள் சரிந்து 39,728 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.
நேற்றைய குளோசிங் புள்ளியான 40,794 புள்ளியில் இருந்து 1066 புள்ளிகள் சரிந்து இருக்கிறது. இப்படி உச்சத்தில் இருந்து 1,320 புள்ளிகள் சரியக் காரணம் என்ன? எந்த பங்குகள் சென்செக்ஸ் சரிவுக்கு முக்கிய காரணமாக இருந்தன? வாருங்கள் பார்க்கலாம்.
அதிக வெயிட்டேஜ் கொண்ட பங்குகள் சரிவு
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச் டி எஃப் சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க், இன்ஃபோசிஸ், டிசிஎஸ் ஆகிய ஐந்து கம்பெனி பங்குகள் கொஞ்சம் பலத்த விலை சரிவில் இருக்கின்றன. இந்த 5 பங்குகள் மட்டுமே சென்செக்ஸின் கணிசமான சரிவுக்கு காரணமாக இருக்கிறது என மும்பை பங்குச் சந்தை வலை தளத்தில் இருக்கும் Index Contribution தரவுகள் சொல்கிறது.
முரட்டு அடி வாங்கிய வங்கிப் பங்குகள்
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இண்டெக்ஸ்களை தூக்கி நிறுத்திக் கொண்டு இருக்கும் ஹெச் டி எஃப் சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க், கோட்டக் மஹிந்திரா பேங்க், ஆக்ஸிஸ் பேங்க் போன்ற முன்னணி தனியார் வங்கிப் பங்குகள் 1.01 - 3.17 சதவிகிதம் வரை விலை சரிந்து வர்த்தகமாகி வருகின்றன. அதே போல எஸ்பிஐ வங்கிப் பங்குகளும் 3.7 % விலை இறக்கம் கண்டு இருக்கின்றன. சென்செக்ஸ் இண்டெக்ஸில் அதிக வெயிட்டேஜ் உள்ள வங்கிப் பங்குகள் பலத்த அடி வாங்கி இருப்பது ஒட்டு மொத்த சென்செக்ஸையும் ஆட்டம் காண வைத்திருக்கிறது.
உலக பங்குச் சந்தைகள் தடுமாற்றம்
இன்று (15 அக்டோபர் 2020, வியாழக்கிழமை), லண்டனின் எஃப் டி எஸ் இ 2.23 % இறக்கத்தில் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 2.32 % இறக்கத்திலும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 3.02 % இறக்கத்திலும் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கின்றன. ஆசியாவில் எந்த ஒரு முக்கிய நாட்டுப் பங்குச் சந்தையும் ஏற்றத்தில் இல்லை. ஐரோப்பிய & ஆசிய பங்குச் சந்தைகளின் சரிவு, இந்திய பங்குச் சந்தைகளில் பலமாக எதிரொலித்துக் கொண்டு இருக்கிறது.
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. கொரோனா வைரஸுக்கான மாற்று மருந்து எப்போது கிடைக்கும் என உறுதியாக யாராலும் சொல்ல முடியவில்லை. அதோடு ஜான்சன் & ஜான்சன் கம்பெனியின் கொரோனா மருந்து சோதனைகள் நிறுத்தப்பட்டு இருப்பது, பங்குச் சந்தைகளில் நெகட்டிவ் செய்தியாக பார்க்கப்படுகிறது. இதுவும் சந்தை சரிவுக்கு ஒரு முக்கிய காரணம்
விற்று வெளியேறுதல்
கடந்த சில நாட்களில் பங்குச் சந்தைகளில் செய்து இருந்த முதலீடுகள் ஓரளவுக்காவது விலை ஏற்றம் கண்டு இருக்கும். பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள், தாங்கள் செய்த முதலீடுகளை விற்று லாபத்தோடு வெளியேறத் தொடங்கி இருக்கிறார்கள். இதனால் பங்குச் சந்தை தட தடவென சரிந்து கொண்டு இருக்கிறது.