கடந்த 12 ஜூன் 2020 வெள்ளிக் கிழமை அன்று, சென்செக்ஸ் சந்தை, சுமாராக 1,400 புள்ளிகள் ரீபவுண்ட் ஆகி இருப்பதாகச் சொல்லி சந்தோஷப்பட்டோம்.
ஆனால் இன்று காலையில் இருந்தே சென்செக்ஸ் பல்வேறு காரணங்களால் இறக்கத்தில் தான் வர்த்தகமாயின. வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ், 552 புள்ளிகள் சரிந்து நிறைவடைந்து இருக்கிறது. இதற்கான காரணங்கள் என்ன..?
வாருங்கள் ஒவ்வொன்றாகப் பார்ப்போம். முதலில் கொரோனாவில் இருந்து தொடங்குவோம்.
1. கொரோனா வைரஸ்
உலகிலேயே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் வாழும் நாடுகள் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்து இருக்கிறது இந்தியா. இந்தியாவில் சுமாராக 3.33 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இது இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களின் செண்டிமெண்டை பாதித்து இருக்கிறது. எனவே முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று வெளியேறத் தொடங்கிவிட்டார்கள்.
2. உலக காரணிகள்
ஐரோப்பிய பங்குச் சந்தைகள் எல்லாம் ரத்தக் களரியில், சரிவில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதே போல ஆசியாவிலும், பங்குச் சந்தைகள் இறக்கத்தில் தான் வர்த்தகமாயின. இப்படி பல நாட்டு பங்குச் சந்தைகளும் பயங்கர சரிவைக் காணும் போது இந்திய பங்குச் சந்தையான சென்செக்ஸும் சரியத் தானே செய்யும்..?
3. பொருளாதார காரணிகள்
மார்ச் 2020 மாதத்துக்கான தொழில் துறை உற்பத்தி இண்டெக்ஸ் (IIP) 18.5 சதவிகிதம் சரிந்து இருக்கிறதாம். அதே போல ஏப்ரல் மாதத்துக்கான தொழில் துறைகள் உற்பத்தி 55.5 % சரிந்து இருக்கிறதாம். அதே போல மொத்த விலைப் பணவீக்கமும் மே 2020 மாதத்துக்கு 3.21 சதவிகிதமாக இருக்கிறது. இந்த தரவுகளும் சந்தை சரிவுக்கு முக்கிய காரணமாக இருந்து இருக்கிறது.
4. நிதித் துறை
இன்று நிஃப்டி வங்கி இண்டெக்ஸ் சுமாராக 4 சதவிகித வீழ்ச்சி கண்டிருக்கிறது. நிஃப்டி தனியார் வங்கி இண்டெக்ஸும் 4 % இறக்கம் கண்டு இருக்கிறது. நிஃப்டி நிதி சேவைகள் துறை சுமாராக 3.5 % இறக்கம் கண்டு இருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில், டெலிகாம் துறையின் ஏ ஜி ஆர் வழக்கு மற்றும் கடன் தவணை ஒத்திவைப்பு காலத்தில் வட்டி வசூலிப்பது தொடர்பான வழக்கு தீர்ப்புகள் இந்திய வங்கித் துறையை பாதிக்கலாம். இவைகள் எல்லாம் சேர்ந்து சென்செக்ஸை இன்று வழியாக்கி இருக்கின்றன.