சென்செக்ஸ் நேற்று திடீரென இறக்கத்தில் வர்த்தகம் நிறைவடைந்தது. அது போக, அடுத்த அடுத்த நாட்களிலும் சென்செக்ஸ் இறக்கத்தில் வர்த்தகமாக வாய்ப்பு இருப்பதாகச் செய்திகள் வெளியாயின.
ஆனால் இன்று எல்லா கணிப்புகளையும் தவிடு பொடியாக்கி, ஏற்றத்தில் கம்பீரமாக வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது சென்செக்ஸ்.
இன்று காலை வர்த்தக நேரத்திலேயே சென்செக்ஸ் 794 புள்ளிகள் ஏற்றம் கண்டு வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது.
சென்செக்ஸ் நிலவரம்
தற்போது சுமாராக 500 புள்ளிகள் ஏற்றத்தில் 33,728 புள்ளிகளில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. சென்செக்ஸில் பட்டியலிடப்பட்டு இருக்கும் 30 பங்குகளில் 24 பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. 6 கம்பெனிகள் மட்டுமே இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. 1 %-க்கு மேல், 2 பங்குகள் மட்டுமே விலை சரிவில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. சரி இன்றைய சென்செக்ஸ் ஏற்றத்துக்கு என்ன காரணம்..? 3 காரணங்களைச் சொல்கிறார்கள் அனலிஸ்ட்கள்.
1. அமெரிக்க ஃபெடரல் வங்கி
அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ், பங்குச் சந்தைகளில் கார்ப்பரேட் பாண்டுகளை வாங்க இருப்பதாகச் சொல்லி இருக்கிறது. இது முதலீட்டாளர்களுக்கு ஒரு பெரிய உத்வேகத்தைக் கொடுத்து இருக்கிறது. எனவே பங்குச் சந்தையைவிட்டு போன முதலீட்டாளர்கள் கூட மீண்டும், முதலீடு செய்யத் தொடங்கி இருக்கிறார்கள். இந்த பாசிட்டிவ் செண்டிமெண்டால், சென்செக்ஸும் ஏற்றம் கண்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
2. சீனாவில் நோய் தொற்று
ஒட்டு மொத்தமாக உலகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80 லட்சம் பேரைத் தாண்டிவிட்டது. இருப்பினும், சீனாவில் புதிதாக மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 36 ஆக இருந்தது. இன்று 27 ஆக குறைந்து இருக்கிறது. இது இந்தியா போன்ற ஆசிய சந்தைகளில் ஒரு பாசிட்டிவ் செய்தியாக பார்க்கப்படுகிறதாம். இதுவும் இந்திய சந்தைகள் ஏற்றம் காண ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது என்கிறார்கள் அனலிஸ்ட்கள்.
3. உலக சந்தைகள்
அண்ணன் தம்பிகள், பங்காளிகள் எல்லாம் நன்றாக இருந்தால் ஒட்டு மொத்த குடும்பமும் நன்றாகத் தானே இருக்கும். அது போல, ஆசிய சந்தைகள் தொடங்கி அமெரிக்க சந்தைகள் வரை, எல்லா சந்தைகளும் ஏற்றத்தில் வர்த்தகமாவதால், இந்திய சந்தைகளும் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன என்கிறார்கள் அனலிஸ்ட்கள்.