மும்பை: நாட்டின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான விப்ரோ, வெள்ளிக்கிழமை அமெரிக்கப் பங்குச்சந்தையிடம் சமர்ப்பித்த வருவாய் அறிக்கையில் தனது வர்த்தக வளர்ச்சிக்கு அதிபர் டொனால்டு டிரம்ப் அச்சுறுத்தலாக இருக்கிறார் என வெளிப்படையாக அறிவித்திருந்தது.
இதுவரை எந்த ஒரு இந்திய நிறுவனம் செய்யாத ஒரு செயலை விப்ரோ செய்துள்ளது எனச் சந்தையில் கருத்து நிலவி வந்த நிலையில், இன்று அதன் விளைவுகள் வெளிப்படையாக இந்திய சந்தையில் தெரிந்துள்ளது.
என்ன ஆனது...
திங்கட்கிழமை வர்த்தகம்..
விப்ரோ நிறுவனத்தை விடவும் அமெரிக்காவில் அதிகளவிலான வர்த்தகத்தைக் கொண்டுள்ள டிசிஎஸ், இன்போசிஸ் வர்த்தகப் பாதிப்புகள் குறித்து எவ்விதமான கருத்தையும் வெளிப்படையாகத் தெரிவிக்காமல் அமைதியாக இருந்த நிலையில் விப்ரோ உண்மையை உடைத்தது.
இதன் எதிரொலியாகத் திங்கட்கிழமை வர்த்தகத்ததில் விப்ரோ நிறுவனத்தின் பங்குகள் சுமார் 3 சதவீதம் வரை சரிந்து முதலீட்டாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
விப்ரோ நிறுவன பங்குகள்
இன்றைய வர்த்தகத்தில் விப்ரோ நிறுவனத்தின் பங்குமதிப்பு 3 சதவீதம் வரை சரிந்து 521.40 ரூபாய் என்ற அளவிற்குக் குறைந்து இந்நிறுவனத்திற்கும் முதலீட்டாளர்களுக்கும் சோகத்தை அளித்துள்ளது.
விப்ரோ நிறுவனத்தைப் போல டிசிஎஸ் நிறுவனமும் சரிந்து காணப்படுகிறது. இன்று காலை வர்த்தகத்தில் இன்போசிஸ் நிறுவனம் 0.81 சதவீதம் வரை சரிந்த நிலையில் 2 மணியளவில் 1.20 சதவீத உயர்வுடன் காணப்படுகிறது.
பிரிட்டன் தேர்தல்
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் பிரிந்த பிறகு, முதல் முறையாகப் பிரிட்டன் நாட்டில் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் ஆசிய சந்தையில் மந்தமான நிலை உருவாகியுள்ளது.
இதன் காரணமாக இன்று மும்பை பங்குச்சந்தையும் மந்தமான வர்த்தகத்தை மட்டுமே பதிவு செய்துள்ளது.
டாப் 30 நிறுவனங்கள்
மதியம் 2 மணியளவில் மும்பை பங்குச்சந்தையின் எஸ் அண்ட் பி பிஎஸ்ஈ குறியீட்டில் இருக்கும் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் விப்ரோ, டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ, ஐசிஐசிஐ வங்கி, ரிலையன்ஸ் ஆகியவை அதிகளவில் சரிவை சந்தித்துள்ளது.
தரவுகள் வெளியீடு
அதுமட்டும் அல்லாமல் இன்று மத்திய அரசு மே மாதத்திற்கான சில்லறை பணவீக்கம் தரவு மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான தொழிற்துறை உற்பத்தி தரவு இன்று மாலை வெளியாக உள்ள நிலையில் முதலீட்டாளர்கள் இன்று குறைவான அளவிலேயே வர்த்தகம் செய்து வருகின்றனர்.
பெட்ரோல் விலை மாற்றம்
நாட்டில் நகரங்களில் மட்டும் தங்கத்தைப் போலப் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றம் செய்யும் முறையை மத்திய அரசு கொண்டு வரும் நிலையில் , பெட்ரோல் பங்கு உரிமையாளர்கள் இதற்குக் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இதன் காரணமாக இன்று பங்குச்சந்தை வர்த்தகத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது.