நடப்பு ஆண்டில் இந்திய பங்கு சந்தைகள் இதுவரையில் கணிசமான அளவு ஏற்றத்தினையே கண்டுள்ளது. எனினும் இந்த ஏற்றத்திலும் சில பங்குகள் சரிவினைக் கண்டுள்ளன.
இவை 2021-ஐ மறக்க முடியாத ஆண்டாக முதலீட்டாளர்களுக்கு மாற்றியுள்ளது. அதெல்லாம் சரி அப்படி என்னென்ன பங்குகள் சரிவினைக் கண்டுள்ளன. எவ்வளவு வீழ்ச்சி கண்டுள்ளன? ஏன் இந்த சரிவு? 2022ல் ஆவது மீளுமா?
பங்கு சந்தையில் சரிவு என்பது சகஜமான விஷயமாக பார்க்கப்பட்டாலும், நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் கொரோனாவின் காரணமாக லாபத்தில் உள்ள நிறுவனங்களும் கூட சரிவினைக் கண்டன. அப்படி சரிந்த சில பங்குகளைத் தான் பார்க்க இருக்கிறோம்.
உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கி
இந்த ஸ்மால் பைனான்ஸ் வங்கியின் மோசமான வருவாய், வட்டி வருவாய் சரிவு, மோசமான சொத்தின் தரம் உள்ளிட்ட பல காரணிகளினால் இந்த பங்கானது பாதிக்கப்பட்டது. மேலும் இதன் உயர் அதிகாரிகள் மட்டத்தில் அட்ரிஷன் பிரச்சனையையும் எதிர்கொண்டது. இதுவும் சரியான பாதையில் வழி நடத்தி செல்ல வழிவகுக்கவில்லை. இதற்கு கொரோனாவும் ஒரு வகையில் காரணம் எனலாம். ஏனெனில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட துறைகளில் வங்கித் துறையும் ஒன்று. எனினும் இனி வரும் காலகட்டத்தில் இது மீண்டு வரலாம் என்ற எதிர்ப்பார்ப்புகள் நிலவி வருகின்றது. நடப்பு ஆண்டில் 53% வீழ்ச்சி கண்டுள்ளது.
ஸ்ட்ரைட்ஸ் பார்மா சயின்ஸ்
நடப்பு ஆண்டில் பார்மா பங்குகளின் விலையானது உச்சம் தொட்ட நிலையில்,ஸ்ட்ரைட்ஸ் பார்மா சயின்ஸ் பங்கின் விலையானது 50.5% வீழ்ச்சி கண்டுள்ளது. இது குறைவான வருமானம், தொடர்ந்து அமெரிக்காவில் எதிர்கொண்டு வரும் பல சவால்கள், விலை குறித்தான பிரச்சனைகள் என பலவும் இந்த பங்கின் விலை குறைய காரணமாக அமைந்துள்ளது. அதோடு அதிகளவிலான லாகிஸ்டிக்ஸ் செலவுகள், கொரோனாவுக்கு பிறகு தேவையானது சரிவினைக் கண்டுள்ளது சரிவுக்கு காரணமாக அமைந்துள்ளது. எனினும் 2022ம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் இருந்து அமெரிக்க பிரச்சனைகள் குறையத் தொடங்கும் என கூறப்படுகின்றது.
ஸ்பந்தனா ஸ்பூர்த்தி
இந்த நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப குழுவில் உள்ள உயர்மட்ட குழுவில் ஏற்பட்ட மாற்றங்கள், அதிகாரிகள் வெளியேற்றம் உள்ளிட்ட சில காரணிகளால் இந்த நிறுவனம் பெரும் தாக்கத்தினை எதிர்கொண்டது. மேலும் இந்த நிறுவனத்தின் கையகப்படுத்தல் குறித்த சில பிரச்சனைகள் இந்த நிறுவனத்தின் பங்கு விலை சரிய காரணமாக அமைந்தது. இதற்கிடையில் தான் நடப்பு ஆண்டில் 40% வீழ்ச்சி கண்டுள்ளது.
ஆர்பிஎல் வங்கி
இந்த வங்கியின் பங்கு விலையும் நடப்பு ஆண்டில் 38% வீழ்ச்சினை கண்டுள்ளது. இது இந்திய ரிசர்வ் வங்கி யோகேஷ் கே தயாளை கூடுதல் இயக்குநராக நியமித்ததில் இருந்து ஆர்பிஎல் வங்கி உயர் நிர்வாக மட்டத்தில் தொடர்ச்சியாக மாற்றங்களைக் கண்டு வருகின்றது. அதன் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான விஸ்வவீர் அஹுஜா உடனடியாக விடுமுறையில் செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இதை வங்கி குழுமம் ஏற்றுக்கொண்டது நினைவுகூறத்தக்கது.
ஆர்பிஎல் நலனுக்கு தான்
ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையானது அதன் தொடர் லாப சரிவு, வாராக்கடன் அதிகரிப்பு, பாதுகாப்பற்ற கடன் விகிதம், பணப்புழக்க விகிதம் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையினை எடுத்திருக்கலாம் என கூறப்படுகின்றது. ஆக இது இவ்வங்கியின் நலன் கருத்தி எடுக்கப்பட்ட நடவடிக்கை தான் என்றாலும், இந்த அறிவிப்புகள் வெளியான நேரத்தில் இப்பங்கின் விலை மோசமான சரிவினை கண்டது.
அமர ராஜா பேட்டரீஸ்
அமர ராஜா பேட்டரீஸ் பங்கின் விலையானது நடப்பு ஆண்டில் 33% வீழ்ச்சியினை கண்டுள்ளது. இது மோசமான நிதி அறிக்கை, குறிப்பாக கொரோனா காலத்தில் மோசமான சரிவினைக் கண்டது. மேலும் சப்ளை செயினில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக உற்பத்தியிலும் பாதிப்பினை கண்டது. இதன் காரணமாக இந்த பங்கின் விலையானது சரிவினைக் கண்டுள்ளது. ஆக கொரோனாவின் தாக்கம், சப்ளை செயின் சரியாகும் பட்சத்தில் இந்த நிறுவனத்தின் வளர்ச்சியானது மீண்டு வரலாம்.
Responsive Industries
இந்த நிறுவனத்தின் பங்கு விலையும் நடப்பு ஆண்டில் 36% வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் அதன் பலவீனமான நிதி நிலை அறிக்கையே. ஆக இது மீண்டு வரும் பட்சத்தில் இந்த பங்கின் விலையானது விரைவில் மீண்டு வரலாம்.
ஹீரோமோட்டோ கார்ப்
இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது நடப்பு ஆண்டில் இதுவரையில் 21% சரிவினைக் கண்டுள்ளது. இதற்கு இந்த நிறுவனத்தின் குறைவான விற்பனை காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் மூலதன பற்றாக்குறைக்கு மத்தியில், உற்பத்தியில் பாதிப்பினையும் கண்டுள்ளது. இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் உற்பத்தி செலவும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இந்த நிறுவனத்தின் லாபமும் சரிவினை கண்டுள்ளது. இந்தியாவில் மட்டும் அல்ல சர்வதேச அளவில் இருந்து சிப் பற்றாக்குறை என்பது, இந்தியா ஆட்டோமொபைல் துறையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.
பந்தன் வங்கி
இன்று நாம் பார்த்த இந்த பட்டியலில் நிதி நிறுவனத்தினை சேர்ந்த நிறுவனங்கள் தான் அதிகம். ஏனெனில் கொரோனாவினால் மோசமாக பாதிக்கப்பட்ட துறைகளில் வங்கி மற்றும் சிறு நிதி வங்கிகளும் அடங்கும். இந்த வங்கியின் வட்டி வருவாயும் சரிவினைக் கண்டுள்ள நிலையில், சொத்தின் மதிப்பும் சரிவினைக் கண்டுள்ளது. இதற்கிடையில் இந்த பங்கின் விலையானது நடப்பு ஆண்டில் 38% வீழ்ச்சியினை கண்டுள்ளது.