கொரோனா வைரஸ் பிரச்சனைக்குப் பின், சென்செக்ஸ் தொட்ட உச்சப் புள்ளி என்றால் அது 38,617 தான்.
கடந்த ஒரு வார காலத்துக்குப் பிறகு சென்செக்ஸ் இன்று 38,350 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
இதோடு சில பெரிய கம்பெனி பங்குகளும் நல்ல விலை ஏற்றம் கண்டு பட்டையைக் கிளப்பிக் கொண்டு இருக்கின்றன. சென்செக்ஸ் நிலவரம் என்ன? எந்த பங்குகள் என்ன காரணங்களால் விலை ஏற்ற்றம் கண்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன? வாருங்கள் பார்ப்போம்.
யெஸ் பேங்க்
இந்தியாவின் மிகப் பெரிய லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனமான எல் ஐ சி, யெஸ் பேங்கின் 4.23 சதவிகித பங்குகளை வாங்கி இருக்கிறது. இந்த செய்தியால் கடந்த வெள்ளிக்கிழமையே யெஸ் பேங்க் பங்கு விலை சுமாராக 5 % வரை அதிகரித்தது. இன்றும் அந்த செய்திக்கான மொமெண்டத்தால் 4.9 % விலை ஏற்றம் கண்டு 14.80 ரூபாயைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது யெஸ் பேங்க்.
மஹிந்திரா & மஹிந்திரா
சமீபத்தில் தான் மஹிந்திரா & மஹிந்திரா கம்பெனியின் ஜூன் 2020 காலாண்டுக்கான, கன்சாலிடேடட் நிகர லாபக் கணக்குகள் வெளியாயின. அதில் மஹிந்திரா & மஹிந்திரா குழுமத்தின் நிகர லாபம், கடந்த ஜூன் 2019 காலாண்டை விட 97 % சரிந்து இருப்பது தெரிய வந்து இருக்கிறது. இருப்பினும் இந்த பங்கின் விலை இன்று சுமாராக 5.6 % ஏற்றத்தில் 636 ரூபாயைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
பி ஸ் இ பங்குகள்
சென்செக்ஸின் 30 பங்குகளில் 26 பங்குகள் ஏற்றத்திலும், 04 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 2,508 பங்குகள் வர்த்தகமாகின்றன. அதில் 1,628 பங்குகள் ஏற்றத்திலும், 741 பங்குகள் இறக்கத்திலும், 144 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஒட்டு மொத்தமாக, மும்பை பங்குச் சந்தையில், 161 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு இருக்கின்றன.
பங்கு விலை நிலவரம்
சிப்லா, மஹிந்திரா & மஹிந்திரா, லார்சன் அண்ட் டியூப்ரோ, டாடா மோட்டார்ஸ், சன் பார்மா போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஹிண்டால்கோ, பி பி சி எல், ஹீரோ மோட்டோகார்ப், ஏஷியன் பெயிண்ட்ஸ், நெஸ்ட்லே போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகின்றன.
ஆசிய சந்தைகள்
இன்று 10 ஆகஸ்ட் 2020, ஆசியாவில், ஜப்பானின் நிக்கி, சிங்கப்பூரின் ஸ்ட்ரெய்ட் டைம்ஸ், ஹாங்காங்கின் ஹேங்செங், தவிர மற்ற எல்லா பங்குச் சந்தைகளும் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதிகபட்சமாக தென் கொரியாவின் கோஸ்பி 1.31 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.