இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓ என அறிமுகம் செய்யப்பட்ட எல்ஐசியின் பங்குகள் படிப்படியாக வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் உணவு டெலிவரி நிறுவனங்களான டெல்லிவரி மற்றும் ஜொமைட்டா நிறுவனத்தின் பங்குகள் படிப்படியாக அதிகரித்து வருவது, அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கியவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் டெல்லிவரி நிறுவனத்தின் ஐபிஓ பங்குகள் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் நேற்று இந்த பங்குகள் சந்தையில் பட்டியல் இடப்பட்டன. பட்டியல் இடப்பட்ட முதல் நாளிலேயே இந்த பங்குகளின் விலைகள் 10.11 சதவீதம் உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ஜொமைட்டோவின் பங்குகள் நேற்றைய இண்ட்ராடே வர்த்தகத்தில் நல்ல லாபத்தை அந்நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்குக் கொடுத்துள்ளது.
டெல்லிவரி ஐபிஓ
டெல்லிவரி ஐபிஓவின் ஒரு பங்கின் விலை ரூபாய் 487 என்ற நிலையில் வர்த்தகம் செய்யப்பட்ட நிலையில் நேற்று பட்டியலிடப்பட்ட ஒரே நாளில் தேசிய பங்குச் சந்தையில் 1.7% உயர்ந்து ரூ.536. 25 என வர்த்தகம் முடிந்தது. ஐபிஓ மூலம் உணவு டெலிவரி செய்யும் டெல்லிவரி ஸ்டார்ட் அப் நிறுவனம் ரூ.5,655 கோடி திரட்டியது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் டெல்லிவரி ஐபிஓ பங்குகளை வாங்கியவர்களுக்கு ஒரே நாளில் 10 சதவிகிதத்திற்கும் அதிகமான லாபம் கிடைத்துள்ளது.
ஜாக்பாட்
அதேபோல் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பங்குச்சந்தையில் அறிமுகமான இன்னொரு உணவு டெலிவரி நிறுவனமான ஜொமைட்டோ நிறுவனத்தின் பங்குகளும் நேற்று மிகப்பெரிய அளவில் உயர்ந்தது. இதனை அடுத்து இந்த பங்குகளை வாங்கியவர்களுக்கு ஜாக்பாட் கிடைத்துள்ளது.
ஜொமைட்டோ
நேற்றைய வர்த்தகத்தில் ஒரே நாளில் ஜொமைட்டோவின் பங்குகள் தேசிய பங்குச்சந்தையில்18 சதவீதம் உயர்ந்தது. நான்காவது காலாண்டில் இந்நிறுவனத்திற்கு ரூ.359.70 கோடி நஷ்டம் ஏற்பட்டாலும், தற்போது ஜொமைட்டோவின் பங்குகள் மீண்டு, லாபத்தை நோக்கி செல்வது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது.
முதலீடு செய்யலாமா?
ஜொமைட்டோ, டெலிவரி மட்டுமின்றி இந்தியாவில் உள்ள அனைத்து உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் அடுத்த சில ஆண்டுகளில் மிகப்பெரிய லாபத்தை பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால், முதலீட்டாளர்கள் இது போன்ற நிறுவனங்களில் தாராளமாக முதலீடு செய்யலாம் என பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.