முன்னணி ஆன்லைன் உணவு டெலிவரி வணிகத்தில் இருக்கும் சோமேட்டோ நிறுவனம், பல வருடங்களாகவே பொது பங்கு வெளியீடு குறித்து திட்டமிட்டு வந்தது. இதற்காக செபியிடம் விண்ணபித்திருந்த நிலையில், கடந்த வாரத்தில் தான் செபியும் ஒப்புதல் அளித்தது.
செபி ஒப்புதலையடுத்து சோமேட்டோ இந்த மாதத்தில் எப்போது வேண்டுமானாலும், தனது பொதுப் பங்கினை வெளிடலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜூலை 14 அன்று அதன் பொது பங்கு வெளியீட்டினை தொடங்குவதாக அறிவித்துள்ளது. இது உண்மையில் சிறு முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.
27வது பொது பங்கு வெளியீடு
நடப்பு ஆண்டில் இதுவரையில் பொது பங்கு வெளியீடு செய்யவுள்ள 27வது நிறுவனமாக சோமேட்டோ உள்ளது. கடந்த 16 மாதங்களில் எஸ்பிஐ கார்டு ஐபிஓ மிகப்பெரிய பங்கு வெளியீடாக பார்க்கப்பட்டது. சீனாவின் ஆண்ட் குழுமத்தின் ஆதரவுடன் செயல்பட்ட சோமேட்டோ நிறுவனம், அதன் பொது பங்கு வெளியீடு மூலமாக 8,250 கோடி ரூபாய் நிதியினை திட்டமிட்டுள்ளது. இதற்காக கடந்த ஏப்ரல் மாதமே விண்ணப்பித்தும் இருந்தது. இது கடந்த ஒரு வருடத்தில் மிகப்பெரிய பொது பங்கு வெளியீடாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
கடுமையான போட்டி
வளர்ந்து வரும் ஆன்லைன் சந்தையில் சோமேட்டோ உள்ளிட்ட பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அதிலும் ஆன்லைன் சந்தையில் தங்களது நிறுவனம் முதன்மை இடத்தினை பிடிக்க, இந்த நிறுவனங்கள் கடுமையான போட்டி போட்டு கொண்டு சலுகைகள், ஆஃபர்கள் என பல வகையிலும் தங்களது வியாபாரத்தினை துரிதப்படுத்தி வருகின்றன.
எவ்வளவு மதிப்பு?
இந்த ஐபிஓ முலம் அதன் ஆரம்பகால முதலீட்டாளரான Info Edge India Ltd நிறுவனம் 375 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளையும், சோமேட்டோ நிறுவனம் புதிய வெளியீடாக 9,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளையும் வெளியிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களுக்காக 6.5 மில்லியன் பங்குகள் ஓதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எப்போது ஐபிஓ?
ஐபிஓ மூலமாக நீண்டகால நோக்கில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு தான். சோமேட்டோ நிறுவனம் ஏற்கனவே மிகப்பெரிய அளவில் தனது நிறுவனத்தை மேம்படுத்த நிதியினை திரட்டியுள்ள நிலையில், இந்த பங்கு வெளியீட்டின் மூலம் மிகப்பெரிய அளவிலான நிதியினை திரட்ட முடிவு செய்துள்ளது. இந்த பங்கு வெளியீட்டினை ஜூலை 14 அன்று வெளியிடவுள்ளது. ஜூலை 16 அன்று இந்த பங்கு வெளியீடு முடிவடையவுள்ளது.
விலை நிர்ணயம்
இந்த பங்கு வெளியீட்டில் விலை 72 - 76 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 195 பங்குகளையும், அதற்கு அதிகமாக வேண்டுமெனில் 195ன் மடங்கில் ஏலம் எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக ஒரு லாட்டுக்கு 14,820 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். ஒரு சில்லறை முதலீட்டாளர்கள் அதிகபட்சம் 1,92,660 ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கிக் கொள்ளலாம். அதாவது அதிகபட்சம் 13 லாட்டுகளை வாங்கிக் கொள்ளலாம்.
யாருக்கு எவ்வளவு?
இந்த மொத்த வெளியீட்டில் 75% வரை தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கும், 10% சில்லறை முதலீட்டாளர்களுக்கும், மீதமுள்ள 15% நிறுவனமல்லாத முதலீட்டாளர்களுக்கும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு திரட்டப்படும் நிதியானது அதன் வணிக மேம்பாட்டிற்காக பயன்படுத்தலாம் எனவும் கூறப்படுகிறது.