இந்தியாவில் பல நிறுவனங்கள் குவிக் டெலிவரி சேவையில் இறங்க திட்டமிட்டுக் களத்தில் இறங்கி வரும் நிலையில் சோமேட்டோ பல முறை முயற்சி செய்து தோல்வி அடைந்த காரணத்தால் இத்துறையில் வளர்ந்து வரும் Blinkit நிறுவனத்தை 4,447.48 கோடி ரூபாய்-க்கு வாங்கியது.
இந்தக் கைப்பற்றல் திட்டத்தைப் பல முன்னணி சந்தை வல்லுனர்கள் பாராட்டினாலும் பங்குச்சந்தையில் இதன் தாக்கம் தலைகீழாக உள்ளது. இதற்கு முதலும் முக்கியக் காரணம் லாபம் மட்டுமே..
சோமேட்டோ
இந்திய ஸ்டார்ட்அப் சந்தையில் இருந்து முதல் நிறுவனமாக மிகப்பெரிய தொகையைத் திரட்ட ஐபிஓ வெளியிட்ட சோமேட்டோ நிறுவனத்திற்கு ஆரம்பம் முதலே சரிவு தான். அதிலும் குறிப்பாக ஐபிஓ வெளியிட்டு முதல் காலாண்டு முடிவுகளை வெளியிடும் போது அதிகப்படியான சரிவு பதிவாகி சந்தை மதிப்பில் பெரிய ஓட்டை விழுந்தது.
மார்ச் காலாண்டு முடிவுகள்
இதற்கிடையில் மார்ச் காலாண்டில் 300 நகரங்களில் வர்த்தக விரிவாக்கம் செய்யப்பட்ட காரணத்தால் சோமேட்டோ மீது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை வந்து பங்குகள் உயர துவங்கியது, ஆனால் Blinkit நிறுவன கைப்பற்றல் மூலம் சோமேட்டோ நிறுவனத்தின் வர்த்தகம், வருமானம் அதிகரித்தாலும் லாபம் என்பது இருக்காது தொடர்ந்து நஷ்டத்தை எதிர்கொள்ளும் நிலை தான் இருக்கும்.
லாபம்
இதனால் சோமேட்டோ மீண்டும் லாபத்தைப் பெற பல காலாண்டுகள் ஆகும் என்பதை உணர்ந்த முதலீட்டாளர்கள் திங்கட்கிழமை வர்த்தகத்தில் சோமேட்டோ பங்குகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டதால் 6.40 சதவீதம் சரிந்து 65.85 ரூபாயாகச் சரிந்துள்ளது.
அதிகப்படியான மதிப்பீடு
இன்றைய சரிவுக்கு லாபகரமான நிறுவனமாகச் சோமேட்டோவிற்கு நீண்ட காலம் தேவைப்படும் என்பதைத் தாண்டி Blinkit அதிகப்படியான மதிப்பீட்டில் வாங்கப்பட்டு உள்ளதாகக் கருத்து நிலவுகிறது. Blinkit நிறுவனத்தைக் கைப்பற்றப் பேச்சுவார்த்தை நடந்த போது சுமார் 1 பில்லியன் டாலர் அளவிலான மதிப்பிடப்பட்டது.
சோமேட்டோ - Blinkit ஒப்பந்தம்
ஆனால் தற்போது Blinkit நிறுவனத்தை 700 முதல் 750 மில்லியன் டாலர் அளவில் மட்டுமே மதிப்பிடப்பட்டு உள்ளது. சோமேட்டோ - Blinkit ஒப்பந்தம் மூலம் Blinkit நிறுவன முதலீட்டாளர்கள் சோமேட்டோ-வின் 7 சதவீத பங்குகளை 70.76 ரூபாய் விலையில் பெறுவார்கள் எனத் தெரிகிறது.