டெல்லி: நாடுமுழுவதும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 3.32 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது என்று இந்திய தொழில்துறை கூட்டமைப்பு ( CII) வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுனங்களில் சுமார் 18210 புதிய வேலை வாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 28 மாநிலங்களில் உள்ள 1.05 லட்சம் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களில் இந்த ஆய்வு நடைபெற்றுள்ளது. பாஜக ஆட்சிக்கு வரும் முன்பு 2012 ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை 11.54 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்ட நிலையில் 2015ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை 3 லட்சத்து 32 ஆயிரத்து 394 வேலைவாய்ப்புகள் மட்டுமே பாஜக ஆட்சியில் உருவாக்கப்பட்டு இருக்கிறது என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படித்த பட்டதாரிகள் லட்சக்கணக்கான பேர் ஆண்டுக்காண்டு கல்லூரிகளில் இருந்து வெளி வந்து கொண்டுதான் இருக்கின்றனர்.
அவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என்றும் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது என்றும் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதுவே பிரதான பிரச்சாரமாகவும் இருக்கப் போகிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களில் ஆய்வு நடத்திய சிஐஐ இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
எந்த மாநிலத்தில் எத்தனை சதவிகிதம்
கடந்த 4 ஆண்டுகளில் அதாவது 2015-16 நிதியாண்டு முதல் 2018-19 நிதியாண்டு வரை உருவான புதிய வேலை வாய்ப்புகளில் 54 சதவிகிதம் மகராஷ்டிரா, குஜராத், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் உருவாக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 29.27 சதவிகிதம், குஜராத்தில்14.40 சதவிகிதம், தெலுங்கானாவில் 9.92 சதவிகிதம் உருவாக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் வெறும் 5.48 சதவிகிதம் வேலை வாய்ப்புகள் மட்டும் உருவாக்கப்பட்டுள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக ஆட்சி காலம்
கடந்த 2012ஆம் ஆண்டு முதல் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டுவரை அதாவது 2015ஆம் ஆண்டுவரை சுமார் 11.54 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ள நிலையில், அதைக் காட்டிலும் 13.9 சதவிகிதம் கூடுதலாக அதாவது 3 லட்சத்து 32 ஆயிரத்து 394 வேலைவாய்ப்புகள் மட்டுமே மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
4 ஆண்டுகளில் வேலை எவ்வளவு
புதிய வேலை வாய்ப்புகளில் 73 சதவிகிதம் குறு தொழில் நிறுவனங்கள் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு உருவாக்கத்திலும், அதிகரிப்பிலும் 70 ஆயிரத்து 941 நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த ஆய்வில் பங்கேற்ற மூன்றில் இரு பங்கு தொழில் தொழில் நிறுவனங்கள், கடந்த 4 ஆண்டுகளில் அதிகமான ஆட்களை வேலைக்கு அமர்த்தியுள்ளன என்றாலும் கூட, 17 சதவிகிதம் பேர்களுக்கு எந்தவிதமான புதிய வேலைவாய்ப்பும் வழங்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
240713 வேலை வாய்ப்புகள்
இந்த ஆய்வின் முடிவின்படி கடந்த 4 ஆண்டுகளில் குறுந்தொழில்களில் அதிகமாக 73 சதவிகிதம், அதாவது 240713 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. சிறுதொழில்கள் மூலம் சுமார் 23 சதவிகிதம் நிகர வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன, நடுத்தர தொழில்கள் மூலம் 4 சதவிகிதம் வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாகியுள்ளன.
மகாராஷ்டிரா நம்பர் 1
பா.ஜ.க ஆளும் மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய 2 மாநிலங்களில் மட்டும் கடந்த 4ஆண்டுகளில் உருவாகிய வேலைவாய்ப்புகள் 44 சதவிகிதம். புதிய வேலை வாய்ப்பகளை உருவாக்குவதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 97286 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதற்கு அடுத்தார் போல குஜராத்தில் 47879 புதிய வேலைவாய்ப்புகளும், தெலங்கானாவில் 32982 வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் 18210 புதிய வேலை வாய்ப்பு
அண்டை மாநிலமான கர்நாடக மாநிலத்தில் 28542 புதிய வேலைவாய்ப்புகளும், தமிழகத்தில் 18210 புதிய வேலைவாய்ப்புகளும், மத்தியப்பிரதேசத்தில் 1874, ஆந்திராவில் 1634, கேரளாவில் 15206 புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன. நாட்டின் பிறமாநிலங்கள் சேர்ந்து 17.5 சதவிகிதம் அதாவது 58181 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறையில் புதிய வேலை
நாட்டின் 5 முக்கியத் துறைகள் மூலம் ஏறக்குறைய 50 சதவிகிதம் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. சுற்றுலாத்துறை, விருந்தோம்பல் துறை மூலம் 12 சதவிகிதம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஜவுளித்துறை, ஆடைதயாரிப்பு, உலோக தயாரிப்பு ஆகியவை மூலம் 8 சதவிகிதம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. இவற்றுக்கு அடுத்தாற்போல், இயந்திர பாகங்கள் உற்பத்தித் துறையில் 7 சதவிகிதம், போக்குவரத்து, சரக்குப்போக்குவரத்தில் 7 சதவிகிதம் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 சதவிகிதம் அதிகரிக்கும்
ஒட்டுமொத்த புதிய வேலைவாய்ப்புகளில் 80 சதவிகிதம் முதல் 8 இடங்களில் இருக்கும் மாநிலங்களிலிருந்து உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்த ஓர் ஆண்டில், 5 லட்சத்து 70 ஆயிரத்து 804 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக வாய்ப்புகள் இருக்கின்றன. இது தற்போதுள்ள வேலைவாய்ப்பு உருவாக்கத்திலிருந்து 21 சதவிகிதம் அதிகரிக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
வேலை வேலை வேலை
இந்த ஆய்வு குறித்து கருத்து கூறியுள்ள முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் , நடைபெற உள்ள லோக்சபா தேர்தல் 3 முக்கிய பிரச்சனைகளை எதிர்கொள்ள உள்ளது. அது, வேலை, வேலை, மற்றும் வேலை என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மோசமான பொய்
எது மோசமானது? வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவதாக பொய் கூறுவதா? அல்லது வேலைவாய்ப்பை ஏற்படுத்தாமல் இருப்பதா? தேசிய ஜனநாயக கூட்டணி அரசானது இந்த இரண்டு விஷயங்களிலும் குற்றம் செய்துள்ளது என்று பதிவிட்டுள்ளார்.
சிஐஐயின் குரல்
இந்திய தொழில்துறையின் கூட்டமைப்பு அதன் குரலைக் கொடுத்துள்ளது. இதன் மூலம் வேலை உருவாக்கும் அரசாங்கத்தின் போலித்தன கூற்றுக்களை அம்பலப்படுத்தியுள்ளது. இதே போல மற்ற அமைப்புகளும் வாய்திறக்கும் என நம்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.