சென்னை: பொதுவாக இன்றைய காலத்தில் பெண்கள் படித்து முடித்துவிட்டு வேலைக்கு சென்றாலும், திருமணத்திற்கு பிறகு பல காரணங்களால் தங்களால் வேலைக்கு செல்ல முடிவதில்லை.
இதனால் வீட்டில் இருந்தே ஏதேனும் வருமானத்துக்கு வழி செய்ய முடியாதா? அதுவும் முதலீடு இல்லாமல்? அல்லது குறைஞ்ச முதலீட்டில் ஏதேனும் செய்ய முடியாதா? அதன் மூலம் தங்களது குடும்ப பாரத்தினை கொஞ்சமேனும் தங்களால் தீர்க்க முடியாதா என்று ஏங்கும் பெண்கள் இங்கு ஏராளம்.
அதிலும் படித்து முடித்து விட்டு வேலைக்கு சென்ற பெண்கள் என்றாலே, திருமணத்திற்கு பின்பு வேலைக்கு செல்லாமல் வருமானம் இல்லாமல் இருப்பது மிகவும் கடினமாக ஒன்றாக உணர்வார்கள். அது மன ரீதியாகவும் சரி, பொருளாதார ரீதியாகவும் சரி.
சிறு வர்த்தகம் செய்யலாம்
ஏதாவது வர்த்தகம் செய்யலாம் என்று பல பெண்கள் நினைப்பதுண்டு. ஆனால் அதை எப்படி தேர்தெடுப்பது? எப்படி முதலீடு செய்வது? என்பது தான் இங்கு பெரும்பாலானவர்களின் பிரச்சனையே. ஆனால் அவர்களுக்கெல்லாம் சிறந்த உதாரணம் தான் சென்னையை சேர்ந்த குடும்ப தலைவி ஆனந்தி, எம்எஸ்சி ஐடி படித்து விட்டு வேலைக்கு சென்று கொண்டிருந்த நிலையில், திருமணம் குழந்தை என குடும்பம் என்னும் பந்தத்துக்குள் நுழைந்தவரால் வேலைக்கு செல்ல இயலாத நிலை. ஆனால் சம்பாதித்த கைகள் சும்மா இருக்க அனுமதிக்கவில்லை.
வீட்டில் இருந்து என்ன செய்யலாம்?
என்ன செய்யலாம் என்று தீவிரமாக யோசித்தவருக்கு தனது கல்லூரி காலங்களில் விதவிதமாய் அழகாய், அணிந்து செல்லும் ஆபரணங்களை தோழிகள் முதல் தெரிந்தவர், உறவினர் வரை, இதை எங்கே வாங்கினாய், மிக அழாகாக இருக்கிறது என்பார்களாம். அப்போது தான் அது ஆனந்திக்கு தோன்றியதாம். இதையே ஏன் நாம் வர்த்தகமாய் செய்யக்கூடாது என்று யோசித்திருக்கிறார்.
இது தான் என் முதலீடு!
இன்று சமூக வலைதளங்களில் இதுபோன்ற விளம்பரங்களை நாம் ஏராளமாகக் காணக்கூடும். ஆனால் அவர்களில் பலராலும் ஒரு கட்டத்திற்கு மேல் செல்வதில்லை. ஆனால் தனது விடா முயற்சியாலும், நம்பிக்கையாலும் இன்று கணிசமான உயரத்தினை எட்டியுள்ளார் ஆனந்தி. அவரின் ஆரம்பகால முதலீடு என்பது அவரின் ஸ்மார்ட்போனும், விடா முயற்சியும் தான்.அப்படி விடா முயற்சியின் பலனாக தோன்றியதே ASA Boutique.
டிரெண்ட்டுக்கு ஏற்றவாறு வர்த்தகம்
அதிலும் சமூக வலைதளங்களில் இன்றைய இளைய தலைமுறையினர் வீணான நேரத்தினை வீணடித்து வரும் நிலையில், அதனை தனக்கு சாதகமாக எப்படி பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதற்கு ஆனந்தி தான் உதாரணம். இன்றைய காலத்திலும் சரி, அந்த காலத்திலும் சரி பெண்கள் ஆபரணங்களை அணிவதில் மிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் இன்றைய காலகட்டத்தில் உடைகளுக்கு ஏற்றவாறு ஆபரணங்களை தேடி அணிவது இன்றைய பெண்களின் வழக்கம்.
இது தான் வளர்ச்சிக்கு கைகொடுத்துள்ளது?
பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது இமிடேஷன் ஜூவல்லரிஸ் தான். இதைத்தான் ஆனந்தியும் பயன்படுத்திக் கொண்டுள்ளார். இன்றைய பெண்களின் விருப்பம் என்ன? அதனை எப்படி அவர்களிடம் கொண்டு சேர்ப்பது? எப்படி வீட்டில் இருந்தபடியே வர்த்தகம் செய்வது? இப்படி பல விதமான கேள்விக்களுக்கு கிடைத்த பதில் தான் இந்த வர்த்தகம். இத்தகைய அனுமானமே இன்று அவரின் வளர்ச்சிக்கு கைகொடுத்துள்ளது எனலாம்.
பிரண்மான்ட வளர்ச்சி
ஆரம்பத்தில் வாட்ஸ் அப்பில் தனக்கு தெரிந்த நண்பர்கள், உறவினர்கள் என குறிப்பிட்ட சிலரை கொண்டு ஆரம்பித்த நிலையில், இன்று பிரமாண்ட வளர்ச்சி கண்டுள்ளார் என்று தான் கூற வேண்டும். கிட்டதட்ட 2,000க்கும் மேற்பட்ட ரீசெல்லர் மற்றும் 35 வாட்ஸ்ஆப் குழுக்களுடன் தொடர்பில் உள்ளதாகவும் கூறுகிறார் ஆனந்தி.
மற்றவர்களுக்கு வாய்ப்பு
மேலும் தனது சமூக வலைதளங்களில் இவரின் பதிவினை பார்த்து சில வெளிநாட்டவர்கள் கூட இவரிடம் ஆர்டர் கேட்க தொடங்கியுள்ளனராம். ஏற்கனவே வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய தொடங்கியுள்ளாராம். இதற்காக ஏற்றுமதி பதிவும் செய்துள்ளார். இந்த ஆன்லைன் வர்த்தகத்தில் ஆனந்தி வளர்ச்சி கண்டுள்ளதோடு, இவரை சுற்றியுள்ளவர்களும் தற்போது இவரால் சம்பாதிக்க தொடங்கியுள்ளார்கள் என்பது தான் இதில் உள்ள மற்றொரு நல்ல விஷயமே.
கல்லூரி பெண்களுக்கு வாய்ப்பு
இவரின் வளர்ச்சியினைக் கண்ட இவரின் உறவினர்கள் தோழிகள் என பலர் இந்த வர்த்தகத்தினை தற்போது தொடங்கியுள்ளனராம். அதோடு கல்லூரியில் படிக்கும் பல பெண்கள் இதனைப் பயன்படுத்திக் கொண்டு, இந்த வர்த்தகத்தினை செய்ய ஆரம்பித்துள்ளனராம். இதன் மூலம் மாதம் சுமார் 10,000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை சம்பாதித்து வருகின்றனராம்.
யார் வாடிக்கையாளர்கள்?
வாட்ஸ் அப், பேஸ்புக், இஸ்டாகிராம் என அனைத்திலும் வலம் வரும் திருமதி ஆனந்தி, தினசரி 50 ஆர்டர்கள் வரை பெறுகிறாராம். மும்பை சென்னை பெங்களூரு என பல இடங்களில் உள்ள மொத்த விற்பனையாளர்களிடத்தில் இருந்து வாங்கி அதனை விற்பனை செய்து வரும் இவர், தமிழகத்தில் மட்டும் அல்ல, நாடு முழுவதும் ஆர்டர்களை பெற்று வருகிறாராம். இவரது வாடிக்கையாளர்களில் பலரும் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தான்.
எந்த மாதிரியான பிரச்சனைகள் வரும்?
சரி இதிலும் ஏதேனும் பிரச்சனைகள் வருமா? என்றால் நிச்சயம் சில பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். சில நேரங்கள் கிடைத்த ஆர்டர்களுக்கு சரியான நேரத்தில் கொரியர்கள் சென்று சேராது. இன்னும் சில நேரங்களில் கொரியர்களில் அனுப்பும் ஜூவல்லரிகள் சேதமாக வாய்ப்புள்ளது. ஆக அவற்றை நாம் மாற்றிக் கொடுக்க வேண்டியிருக்கும். அதனை வாடிக்கையாளர்களிடம் பேசி சமாதானப்படுத்தி புதிய ஆபரணங்களை வைத்தால் இது போன்ற பிரச்சனைகளை சமாளிக்கலாம் என்றும் கூறுகிறார்.
இப்படியும் நடக்கலாம்
அதோடு பேஸ்புக்கில் விளம்பரங்களை அதிகம் கொடுக்கும் பட்சத்தில் பேஸ்புக் ஐடிகள் முடக்கம், வாட்ஸ் அப் குழுக்கள் முடக்கம் என பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறதாம். பொதுவாக வாடிக்கையாளர்கள் எந்த மாதிரியான பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள் என்றும் கூறியுளார். நம்மை விட, மற்றவர்களிடம் விலை குறைவாக இருக்கிறது என்று மற்றவர்களிடம் பணத்தினை வாங்கிவிட்டு, பொருட்களை அனுப்பாமல் குழுக்களை பிளாக் செய்துவிட்டு முடக்கி விடுவர். ஆக அவர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்கிறார்.
ஜிஎஸ்டியும் உண்டு
ஒரு கட்டத்திற்கு மேல் வரி பிரச்சனை எழவே, ஜிஎஸ்டியை முறையாக பதிவு செய்து, முறையாக வர்த்தகம் செய்து வருகிறார். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையே இந்த வர்த்தகத்தில் முக்கிய அம்சம் என்றும் கூறுகிறார் ஆனந்தி. வருமானத்தினை பொருத்தவரையில் 50,000 ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை சம்பாதித்து வருவதாகவும் கூறுகிறார்.
குடும்பத்தினருக்கு நன்றி
தனது வர்த்தகத்திற்கு கணவரும் பெரும் உதவியாக இருப்பதால் தால், தன்னால் இந்த அளவுக்கு வளர முடிந்தது என்று கூறும் ஆனந்தி, தனது அம்மா அப்பாவும் தனக்கு மிகுந்த உதவியாக இருக்கிறார்கள். அவர்களுக்கும் நன்றி என்றும் கூறுகிறார். வீட்டில் வெட்டியாய் சீரியல், அரட்டை அரங்கம் என இல்லாமல் இருக்கும் நேரத்தினை சரியாய் பயன்படுத்திக் கொண்டு, தான் மட்டும் வளர்ந்ததோடு, மற்றவர்களுக்கும் அந்த வாய்ப்பை அளித்து வரும் ஆனந்தி இன்னும் மேன்மேலும் வளர வாழ்த்துவோமே.. வாழ்த்துகள் ஆனந்தி மேடம்..!