நாட்டில் நிலவி வரும் இன்றைய காலகட்டத்தில் இருக்கும் வேலை நிலைக்குமா? வேலை பறிபோனவர்கல் எப்போது மீண்டும் வேலை கிடைக்கும்? ஏதாவது புதிய சிறு தொழில் தொடங்கலாமா என சிந்திப்பது உண்டு.
இதற்கிடையில் லாக்டவுன் நீட்டிக்கப்பட்டிருந்தாலும் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சிறு வணிகர்கள், எம்எஸ்எம்இ-க்கள் என பலரும் பல கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் தற்போது மீண்டும் தங்களது வர்த்தகத்தினை தொடங்கியுள்ளனர். சரி இப்படி நாமும் ஒரு சிறு தொழிலை தொடங்குவதற்கு முன்பு எந்த மாதிரியான விஷயங்களை கவனிக்க வேண்டும்.
முதலில் ஒரு தொழிலை தொடங்குவதற்கு முன்பு சந்தையில் போட்டியாளர்கள் அதிகம் இல்லாத ஒரு தொழிலை தேர்தெடுக்க வேண்டும். அது சிறிய சந்தையாக இருந்தாலும் பரவாயில்லை. அப்போது தான் அதில் நீங்கள் தனிக்காட்டு ராஜவாக வலம் வர முடியும். உதாரணத்திற்கு உங்களது கடைத் தெருவில் ஏற்கனவே 4 உணவகங்கள் உள்ள நிலையில், நீங்கள் 5-வதாக திறந்தால், அது எப்படி போகும். ஆக அதனை போன்று ஒரு போதும் முயற்சிக்காதீர்கள்.
எந்த தொழிலை தொடங்கினாலும் ஆரம்பத்திலேயே அகல கால் வைக்க வேண்டாம். முதலில் சிறியதாக தொடங்குங்கள். அதே போல் அழியப்போகும் ஒரு பொருளாகவும், ஆனால் அடிக்கடி தேவைப்படும் ஓரு பொருளாகவும் இருக்க வேண்டும். அப்போது தான் நீங்கள் உற்பத்தி செய்யும் ஒரு பொருள் அடிக்கடி வாங்குவார்கள்.
உங்கள் தொழிலை பற்றிய முழு அறிவினையும் நீங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். உங்களது தொழிலை பற்றிய சிறு நுணுக்கங்களை கூட நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் இருக்கும் இடத்தினை பொருத்து ஒரு பொருளை தேர்வு செய்ய வேண்டும்.
அதோடு தேவையற்ற செலவுகளையும் தவிர்க்க வேண்டும். உங்களுடைய தொழில் சரியாக போகவில்லையென்றால் அது குறித்து ஆராயவும், உங்களால் சரி செய்ய இயலவில்லை என்றால், தோல்வியை ஏற்றுக்கொள்ளத் தயங்காதீர்கள். தோல்வியே வெற்றிக்கு முதற்படி என்று மீண்டும் மீண்டும் பணத்தை விரயம் செய்ய வேண்டாம். மேலும் இரண்டாவது திட்டம் ஒன்றை நீங்கள் முன்கூட்டியே திட்டமிட வேண்டும்.
முடிந்த மட்டில் கூட்டுத் தொழில் துவங்குவதை தவிர்க்கவும். அப்படியே கூட்டாக சேர்ந்தாலும், உங்கள் தொழிலை பற்றி தெரிந்தவருடன் தொழிலை தொடங்க வேண்டும். இல்லையேல் கூட்டு சேர்வதை தவிர்க்க வேண்டும்.