இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி மீண்டும் கார்கள் விலையை உயர்த்துவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நடப்பாண்டில் மட்டும் மூன்றாவது முறையாக மாருதி சுசுகி கார்களின் விலையை உயர்த்தியுள்ளது.
இந்தியாவின் கார் சந்தையில் மாருதி சுசுகி நிறுவனம் பெரும் பங்களிப்பை கொண்டுள்ளது. கார் வாங்க வேண்டும் என்றாலே பெரும்பாலான இந்தியர்கள் மாருதி சுசுகி ஷோரூமுக்கு தான் முதலில் செல்வார்கள். அந்த அளவில் மக்கள் நம்பிக்கை பெற்ற மாருதி சுசுகி திடீரென கார் விலையை உயர்த்தியுள்ளது. இதன்படி குறிப்பிட்ட கார் மாடல்களின் விலையை உயர்த்த போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கார் உற்பத்திக்கான மூலப்பொருட்களின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதை காரணம்காட்டி இந்த விலை உயர்வு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம், கார்களின் வகையை பொறுத்து அவற்றின் விலை 20,000 ரூபாய் வரை அதிகரிக்கப்படவுள்ளது.
2026-ஆம் ஆண்டில் மாருதி சுசூகி அறிவிக்கும் மூன்றாவது விலை உயர்வு இதுவாகும். முதலில் ஜூன் மாதம் ஒரு கார் விலை உயர்வு அமலுக்கு வந்தது. அப்போது 30,000 ரூபாய் வரை உயர்த்தப்பட்டது. அதை தொடர்ந்து, ஆகஸ்ட் மாதம் இரண்டாவது முறையாக அனைத்து வகையான மாடல்களிலும் 30,000 ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டது.
தற்போதைய செப்டம்பர் மாத விலை உயர்வானது, முந்தைய முறைபோல் அனைத்து கார்களுக்கும் பொதுவானது அல்ல; மாறாக, சில குறிப்பிட்ட மாடல்களுக்கு மட்டும் பொருந்தும் என்றும், அதிகபட்ச விலை உயர்வு 20,000 ரூபாய் வரை இருக்கும் என்றும் அறிவித்துள்ளது.
பங்கு சந்தை ஒழுங்குமுறை ஆணையத்திற்கு மாருதி சுசூகி அளித்துள்ள தகவலின்படி, நிறுவனத்தின் கார் தயாரிப்பு செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பணவீக்க அழுத்தங்கள் மற்றும் சாதகமற்ற பொருளாதார சூழல் தொடர்வதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே, சிக்கன நடவடிக்கை மூலம் இந்த விலை உயர்வின் தாக்கத்தை வாடிக்கையாளர்கள் மீது திணிக்காமல் இருக்க நிறுவனம் முயன்றது. இருப்பினும், செலவு அழுத்தம் தொடர்ந்து அதிகமாக இருப்பதால், தவிர்க்க முடியாத சூழ்நிலையில் அந்த கூடுதல் சுமையின் ஒரு பகுதியை வாடிக்கையாளர்களிடம் பகிர்ந்து கொள்ள முடிவு செய்துள்ளதாக மாருதி சுசுகி தெரிவித்துள்ளது.ஈரான் போர் , உலகளாவிய வர்த்தக பாதைகள் மற்றும் எரிசக்தி சந்தைகளில் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளும் கார் தயாரிப்புக்கான மூலப்பொருள் செலவுகளை உயர்த்தியுள்ளன என கூறியுள்ளது.
இந்தியவில் அடுத்த வாரம் முதல் பண்டிகை காலம் தொடங்க உள்ள நிலையில், இந்த விலை உயர்வு வாடிக்கையாளர்களுக்கு சற்று கூடுதல் சுமையாக மாறும். வழக்கமாக பண்டிகை காலத்தில் கார்களின் தேவையும் விற்பனையும் அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில் மாருதியின் இந்த அறிவிப்பு பண்டிகை காலத்தில் கார் வாங்க காத்திருந்தவர்களுக்கு ஒரு அதிர்ச்சி தான்.
ஆனால் எந்தெந்த மாடல்களுக்கு எவ்வளவு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறித்த முழுமையான மாடல் வாரியான பட்டியலை நிறுவனம் உடனடியாக வெளியிடவில்லை. எனவே, புதிய காரை வாங்க விரும்புபவர்கள் தாங்கள் விரும்பும் குறிப்பிட்ட மாடலின் தற்போதைய விலையை சரிபார்த்து கொள்வது அவசியமாகும். முன்னதாக ஹூண்டார், டாடா மோட்டார்ஸ் நிறுவனங்கள் கூட கார்களின் விலையை உயர்த்தின.


Click it and Unblock the Notifications


