இந்தியாவில், முறை சார் கம்பெனிகள் மற்றும் நிறுவனங்களில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை சுமாராக 25 சதவிகிதம் பேர் இருப்பார்கள் என வைத்துக் கொள்ளுங்கள். மீதமுள்ள 75 சதவிகித மக்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்து, அவர்கள் குடும்பத்தையும் வாழ வைப்பது அமைப்பு சாரா தொழில்கள் தான்.
அப்படி அமைப்பு சாரா தொழில்கள் மற்றும் வேலை வாய்ப்புகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் உருவாக்குவதில், MSME என்று சொல்லப்படும் சிறு குறு தொழில்முனைவோர்களுக்கு என்று தனி பங்கு உண்டு.
இந்த சிறு குறு தொழில்முனைவோர்கள் கொரோனா காலத்தில், பணம் இல்லாமல் சிரமப்படக் கூடாது என்கிற நோக்கில், மத்திய அரசு Guaranteed Emergency Credit Line என்கிற திட்டத்தைக் கொண்டு வந்தது.
இந்த திட்டத்தின் வழியாக, 3 லட்சம் கோடி ரூபாய் கடன் கொடுக்க, மத்திய அரசு அனுமதித்து இருக்கிறது. கடந்த 18 ஜூன், 2020 வியாழக்கிழமை கணக்குப் படி, அரசு வங்கிகள் மொத்தம் 40,416 கோடி ரூபாய் கடன் கொடுக்க அனுமதி வழங்கி இருக்கிறார்களாம்.
12.43 லட்சம் சிறு குறு தொழில்முனைவோர்கள் கணக்குக்கு இந்த 40,416 கோடி ரூபாய் கடன் கொடுக்க அனுமதி கொடுத்து இருக்கிறார்களாம். ஆனால் அதில் 21,029 கோடி ரூபாயைத் தான் 5.81 லட்சம் சிறு குறு தொழில்முனைவோர் வங்கி கணக்குகளுக்கு கொடுத்து இருக்கிறார்களாம்.
இந்த 21,029 கோடி ரூபாய் கேரண்டி கடனில், ஒரு கணிசமான பகுதியை தமிழகம் தான் பெற்று இருக்கிறதாம். தமிழகத்துக்கு மட்டும் 4,156 கோடி ரூபாய் கடன் தொகையைக் கொடுத்து இருக்கிறார்களாம். தமிழகத்தைத் தொடர்ந்து, குஜராத் மாநிலத்துக்கு 4,012 கோடி ரூபாய் கடன் தொகையைக் கொடுத்து இருக்கிறார்களாம்.
அரசு வங்கிகளிலேயே ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 15,950 கோடி ரூபாய் கடன் கொடுக்க அனுமதித்து 10,667 கோடி ரூபாய் கடன் தொகையைக் கொடுத்து இருக்கிறார்களாம். எஸ்பிஐ வங்கியைத் தொடர்ந்து பேங்க் ஆஃப் பரோடா, பஞ்சாப் நேஷனல் பேங்க், கனரா வங்கி போன்றவர்கள் அதிகம் கடன் கொடுத்து இருக்கிறார்களாம்.