டெல்லி : இந்தியாவில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் (MSME) வளர்ச்சிகளுக்காக இந்திய அரசால் உருவாக்கப்பட்டது தான் இந்த பிரதான் மந்திரி Mudra யோஜனா திட்டம். இது குறுந்தொழில் மேம்பாட்டு மற்றும் மறுநிதி நிறுவனம் Micro Units Development and Refinance Agency (MUDRA) மூலமாக செயல்படுத்தபடுகிறது. இந்த முத்ரா திட்டம் மத்திய அரசின் ஒரு திட்டமாகும்.
இந்த Mudra திட்டத்தில் மூன்று பிரிவுகளில் தற்போது வங்கிகள் கடன் வழங்கி வருகின்றன. அதோடு இந்த முத்ரா திட்டத்தின் கீழ் சுயதொழிலில் ஈடுபடுவோருக்கு ரூ. 50,000 முதல் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது ரூ.20 லட்சம் வரை பிணையமில்லா இந்த கடனை உயர்த்த பரிந்துரை செய்துள்ளது ரிசர்வ் வங்கியின் பரிந்துரை குழு.
குறிப்பாக குறுந்தொழில் முனைவோருக்கு தங்களின் தொழிலை மேம்படுத்தவும், விரிவுபடுத்தி கொள்ளவும் கடன்களை வழங்குகிறது. அதில் சிசு, கிஷோர் மட்டும் தருண் ஆகிய மூன்று திட்டங்களின் மூலம் கடன் வழங்கப்பட்டு வருகிறது.
சிசு (SHISHU) - இத்திட்டம் மூலமாக ரூ.50,000 வரை கடன் பெறலாம்.
கிஷோர் (KISHOR) - இத்திட்டம் மூலமாக ரூ.50,000 - 5 லட்சம் வரை கடன் பெறலாம்.
தருண் (TARUN) - இத்திட்டம் மூலமாக ரூ.5 லட்சம் - 10 லட்சம் வரை கடன் பெறலாம் என முன்னர் வந்தது. ஆனால் இது தற்போது அதிகரிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாம்.
இந்த முத்ரா திட்டம் அனைத்து வகையான உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் செய்யும் அனைவரும் இத்திட்டத்தில் பயன் பெறலாம். உதாரணமாக சரக்குகளை எடுத்து செல்ல வாகனம் வாங்கவும், முடிதிருத்தும் நிலையம் மேம்படுத்த, பியூட்டி பார்லர் மேம்படுத்த, மோட்டார் சைக்கிள் சர்வீஸ் விரிவுபடுத்துதல், சிற்றுண்டி உணவு கடைகள், தள்ளுவண்டி காய்கறி பழ கடைகள், துணி கடைகள், பேக்கரி கடைகள் விரிபடுத்துதல், எஜென்சீஸ் வைத்தல், வாகனம் ஓட்டுபவர், கைவினை கலைஞர் உற்பத்தி என அனைத்து புதிய மற்றும் ஏற்கனவே நடைபெறும் தொழிலுக்காகவும் இதில் கடன் பெறலாம்.
இவ்வாறு வழங்கப்படும் முத்ரா கடனை பெற எந்தவித சொத்து பிணையமும் தேவை இல்லை. அதோடு தனிநபர் ஜாமீனும் தேவையில்லை. அதோடு ஒரு வங்கியின் கிளை ஆண்டுக்கு குறைந்த பட்சம் 25 நபர்களுக்கு இத்திட்டத்தில் கடன் வழங்க வேண்டும். அதிகபட்சம் எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் வழங்கலாம் என்ற நிலை இருந்து வருகிறது.
இந்த நிலையில் முன்னர் அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை மட்டுமே வழங்கப்பட்டு வந்த இந்த பிணையமில்லா கடன் தொகையை, தற்போது ரூ.20 லட்சம் வரை உயர்த்த பரிந்துரை செய்துள்ளது ரிசர்வ் வங்கியின் பரிந்துரை குழு. நல்ல விஷயம் தானே நடக்கட்டும்.