டெல்லி: கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளிலிருந்து, நாட்டை மீட்கும் வகையில் 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சிறப்பு பொருளாதார திட்டங்கள் குறித்து புதன் கிழமையன்று சில அறிவிப்புகளை வெளியிட்டார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
இந்த நிலையில் இன்று மீண்டும் செய்தியாளர்களை சந்தித்து, மற்றொரு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
புதன் கிழமையன்று வெளியிடப்பட்ட அறிவிப்புக்கு பின்னர், பலர் புலம் பெயர் தொழிலாளர்கள், சாமானிய மக்கள் என பலருக்கும் எந்த வித அறிவிப்பும் இல்லை என குற்றம் சாட்டி வந்தனர். ஆனால் அப்படி எல்லாம் இல்லை என நிரூபித்து இருக்கிறார் நிர்மலா சீதாராமன்.
பல திட்டங்கள் அறிவிப்பு
இன்று வெளியிட்ட அறிவிப்பில் பல அறிவிப்புகள் சாமானியர்களுக்கு உதவும் வகையில் வந்தன என்றே கூறலாம். குறிப்பாக விவசாயிகள், புலம் பெயர் தொழிலாளர்கள், சிறு குறு தொழில் முனைவோர், சிறு சாலையோர வியாபாரிகள், குடிசை தொழிலாளிகள், சிறு குறு நடுத்தர தொழில் துறையினருக்கு பலனளிக்கும் வகையில் பல திட்டங்களை அறிவித்தார்.
100 நாள் வேலைத் திட்டம்
குறிப்பாக 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் இடம்பெயர் தொழிலாளர்களுக்கு ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. சொந்த ஊர்களுக்குத் திரும்பியுள்ள இடம்பெயர் தொழிலாளர்களைக் கொண்டு இத்திட்டத்தின் மூலமாக 42.62 கோடி நபர் வேலை நாட்கள் உருவாக்கப்பட்டுள்ளன.இதில் 40 -50% அதிகமானோர் கொரோனா லாக்டவுனுக்கு முன்பு உருவாக்கபட்டது. இதன் மூலம் 1.87 லட்சம் கிராமப் பஞ்சாயத்துகளில் 2.33 கோடிப் பேர் பயன்பெற்றுள்ளனர் என்று கூறிய நிதியமைச்சர், இதற்காக 10,000 கோடி ரூபாய் வரையில் செலவிடப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் நலத் திட்டங்கள்
அமைப்பு சாரா தொழிலாளர்கள் உட்பட அனைத்துப் பிரிவுத் தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியச் சட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. தற்போது குறைந்தபட்ச ஊதியச் சட்டமானது 30% தொழிலாளர்களுக்கு மட்டுமே பயனளிக்கிறது. மேலும் இது பகுதிகளுக்கு ஏற்றவாறு ஊதியத்தில் வேறுபாடு காணப்படும் நிலை மாற்றப்பட்டுள்ளது. இதற்காக தேசிய அளவிலான ஊதியத் திட்டம் நடை முறைப்படுத்தப்படுள்ளது.
முத்ரா திட்டத்தில் சலுகை
முத்ரா சிசு திட்டத்தின் மூலம் ஒருவர் 50,000 ரூபாய் வரையில் கடன் பெற்றுக் கொள்ள முடியும். இவர்களுக்கு 2 சதவீத வட்டி சலுகை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். மேலும் முத்ரா திட்டத்தின் கீழ் 1,500 கோடி ரூபாய் மதிப்பிலான உதவி தொகை வழங்கப்படும். இதன் மூலம் 3 கோடி பேர் பயன் அடைவார்கள் என்றும் அறிவித்துள்ளார். சிசு திட்டத்திற்கு வரி சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
பயன் அளிக்கும்
ஆனால் இதே முத்ரா திட்டத்தின் கீழ் உள்ள கிஷோர் (KISHOR) முத்ரா வங்கி திட்டம் - இத்திட்டம் மூலமாக Rs.50,000 முதல் ஐந்து லட்சம் வரை கடன் பெறலாம். தருண்(TARUN) முத்ரா வங்கி திட்டம் - இத்திட்டம் மூலமாக ஐந்து லட்சம் முதல் பத்து லட்சம் வரை கடன் பெறும் திட்டங்களுக்கு எந்த வட்டி சலுகையும் அறிவிக்கப்படவில்லை. எப்படி இருப்பினும் சிறு தொழில் முனைவோருக்கு இது சற்று நிவாரணத்தினை அளித்துள்ளது.