நாட்டின் ஜிடிபியில் ஏற்கனவே முக்கிய பங்களிக்கும் MSME-களின் பங்கினை 40% ஆக உயர்த்துவதே, அரசின் இலக்கு என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
தற்போது MSME-களின் பங்கு விகிதம் சுமார் 30 சதவீதமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து மஹாராஷ்டிராவின் வர்தாவில் உள்ள மகாத்மா காந்தி இந்தி பல்கலைக் கழக்கத்தில் நடைபெற்ற பயிலரங்கில் பேசிய அமைச்சர், கிராமத்தினை அடிப்படையாகக் கொண்ட தொழில்கள் மற்றும் காதியும் ஆண்டுக்கு 88,000 கோடி ரூபாய் வருவாயினை ஈட்டுகின்றன.
கிராமப்புற தயாரிப்பு
ஆக இதுபோன்ற கொள்கைகள் நெகிழ்வானதாகவும், புதுமையாகவும் இருந்தால், இது இன்னும் அதிகரிக்கப்படலாம். மேலும் இது கிராமப்புறங்களில் வாழும் மக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்தும். அதோடு கிராமப்புறத்தில் தயாரிக்கப்படும் பொருட்கள் இருந்தால், அவற்றை சிறப்பாக விற்பனை செய்ய முடியும் என்று நிதின் கட்கரி கூறியுள்ளார். ஏனெனில் அவை சந்தையில் நன்கு விற்பனையாகின்றன.
தலைவர்களின் கனவு
மகாத்மா காந்தி, வினோபா பாவே, பண்டிட் தீனதயாள் உபாத்யாயா, ராம் மனோகர் லோஹியா, ஜெயபிரகாஷ் நாராயண் போன்ற தலைவர்களின் கனவுகள், கிராமப்புற மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது தான்.
அவர்களின் கனவை நிறைவேற்ற கிராமப்புறங்களில் உள்ள ஏழைகளின் வாழ்க்கையை மேம்படுத்த, கிராமபுறங்களில் வேலைவாய்ப்புகளை மேம்படுத்துவதற்கான தீர்வுகள் காணப்பட்டாலே அவற்றை நிறைவேற்ற முடியும்.
எம்எஸ்எம்இ-களை மேம்படுத்த வேண்டும்
கிராமப்புற பொருளாதாரத்தில் வளர்ச்சி இல்லாததால், சுதந்திரம் பெற்றதில் இருந்து, நாட்டின் மக்கள் தொகையில் 30 சதவீதம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்றும் சுட்டிகாட்டியுள்ளார்.
எம்எஸ்எம்இ-களினால் கிராமப்புற மக்கள் பயனடைகின்றனர். தற்போது 6.5 கோடி சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்ளன. இதனை இன்னும் மேம்படுத்த வேண்டும். இதனை 30 சதவீதத்தில் இருந்து, 40 சதவீதமாக அதிகரிக்க வேண்டும். இதுவே அரசின் நோக்கம். ஏழைகளுக்கும் அதிகாரம் அளிக்கும் வகையில் கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் கட்கரி கூறியுள்ளார்.
கிராமப்புற மக்களுக்கு ஆதரவு
நாங்கள் மேற்கத்திய மயமாக்கலுக்கு ஆதரவாக இல்லை. ஆனால் கிராமப்புறங்களுக்கு ஆதரவாக உள்ளோம். கிராமப்புற நவீன மயமாக்கலுக்கு ஆதரவாக உள்ளோம். இது சமூக மாற்றத்திற்கான நேரம் என்றும் கட்கரி கூறியுள்ளார்.
உண்மையில் இந்திய சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் என்பது அதிகரித்தால் பொருளாதாரம் மேம்படும். வேலை வாய்ப்புகள் பெருகும். வேலை தேடி அலையும் இளைஞர்களை நகரங்களை நோக்கி நகர்வது குறையும். எல்லாவற்றிற்கும் மேலாக கிராமப்புற பொருளாதாரம் மேம்படும்.