டெல்லி: இந்தியாவிலும் தனது வேலையை காட்ட ஆரம்பித்துள்ள கொரோனாவின் கோரத்தாண்டவத்திற்கு பல நூறு பேர் பலியாகியுள்ள நிலையில், கிடுகிடுவென இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
அதிலும் மகாராஷ்டிரா மற்றும் குஜராத், டெல்லி என பல மாநிலங்களிலும் படு வேகமாக பரவ ஆரம்பித்துள்ள நிலையில், இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ள லாக்டவுன் இதோடு முடிவதாகவும் தெரியவில்லை.
இன்னும் நீட்டிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
பசியால் செத்து விடுவோமோ?
இந்த நிலையில் மக்கள் தங்கள் வேலைகளை இழந்து, அத்தியாவசிய தேவைக்கு கூட தள்ளாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு,முன்பு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பங்கேற்ற மக்கள், தாங்கள் கொரோனாவினால் பாதிக்கப்படுகிறோமோ இல்லையோ, பசியால் செத்துவிடுவோம் போல் இருக்கிறது என்றதோடு, அரசின் உதவியை எதிர்பார்த்து வருவதாகவும் கூறினர்.
இறுதி கட்ட ஆலோசனை
இதற்கிடையில் தான் இரண்டாவது கட்ட ஊக்குவிப்பு நடவடிக்கை குறித்த, இறுதி கட்ட ஆலோசனையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று கலந்து ஆலோசிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த இறுதிகட்ட ஆலோசனைக்கு பின்பே, இறுதி முடிவுகள் எடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
விரைவில் வெளியாகலாம்
ஆக விரைவில் பொருளாதார ஊக்குவிப்பு 2-வது கட்ட நடவடிக்கையில் முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே முதல் முறை லாக்டவுன் அறிவிக்கப்பட்ட நிலையில், 1.76 லட்சம் கோடிக்கு உண்டான சலுகைகளை அறிவித்தார். எனினும் தற்போது மே 3 வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், இது இன்னும் நீட்டிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
தொழில்துறை குறித்த அறிவிப்பு வருமா?
இந்த இரண்டாவது கட்ட ஊக்குவிப்பு நடவடிக்கை ,குறித்தான ஆலோசனையை கடந்த பல நாட்களாகவே அதிகாரிகளுடன் நிதியமைச்சர் ஆலோசித்து வருவதாகவும் கூறப்பட்டது. தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள லாக்டவுன் தொழில்துறை முற்றிலும் முடங்கிபோயுள்ள நிலையில், தொழில் துறை குறித்தான அறிவிப்புகள் இந்த முறை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யாருக்கு என்ன சலுகை?
மேலும் இந்த இறுதி கட்ட ஆலோசனையில் எந்தெந்த துறைக்கு எந்த மாதிரியான சலுகை அளிக்கப்படலாம். பெரிய பெரிய நிறுவனங்களுக்கு ஏதேனும் வரி சலுகைகள் உண்டா? முக்கியமாக சாமானிய மக்களுக்கு ஏதேனும் சலுகைகள் உண்டா என பல திட்டங்கள் பற்றி விவாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.