இந்தியாவில் சிறு குறு தொழில்முனைவோர்கள் கொரோனா காலத்தில், பணம் இல்லாமல் சிரமப்படக் கூடாது என்கிற நோக்கில், மத்திய அரசு Emergency Credit Line Guarantee Scheme (ECLGS) என்கிற திட்டத்தைக் கொண்டு வந்தது.
இந்த திட்டத்தின் வழியாக, 3 லட்சம் கோடி ரூபாய் கடன் கொடுக்க, மத்திய அரசு அனுமதித்து இருக்கிறது. கடந்த 23 ஜூலை 2020 வியாழக்கிழமை கணக்குப் படி, 1,30,491 கோடி ரூபாய் கடன் கொடுக்க அனுமதி வழங்கி இருக்கிறார்களாம்.
இந்த 1,30,491 கோடி ரூபாயில், 82,065 கோடி ரூபாய் மட்டுமே கடன் தொகை வழங்கப்பட்டு (Disburse) இருக்கிறதாம். இந்த விவரங்களை மத்திய நிதி அமைச்சகம் நேற்று 24 ஜூலை 2020 அன்று உறுதி செய்து இருக்கிறார்கள்.
இந்த 1,30,491 கோடி ரூபாய் என்பது இந்தியாவின் 12 பொதுத் துறை வங்கிகள், 22 தனியார் துறை வங்கிகள் மற்றும் 23 வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் என அனைத்தும் சேர்த்து அனுமதி கொடுத்த தொகையாம்.
பொதுத் துறை வங்கிகள் மட்டும் 71,818 கோடி ரூபாய் கடன் கொடுக்க அனுமதி வழங்கி இருக்கிறார்கள். அதில் 47,631 கோடி ரூபாய் பணம் கடனாக வழங்கப்பட்டு (Disburse) இருக்கிறது.
பொதுத் துறை வங்கிகளில் எஸ் பி ஐ வங்கி தான் அதிகபட்சமாக 21,027 கோடி ரூபாய் கடனுக்கு அனுமதி வழங்கி, 15,112 கோடி ரூபாய் கடனைக் டிஸ்பர்ஸ் செய்து இருக்கிறது. 23 ஜூலை 2020 கணக்குப் படி, எஸ் பி ஐ வங்கியைத் தொடர்ந்து பஞ்சாப் நேஷனல் பேங்க் 9,463 கோடி ரூபாய் கடனுக்கு அனுமதி வழங்கி 5,295 கோடி ரூபாய் கடனை டிஸ்பர்ஸ் செய்து இருக்கிறது.
தனியார் வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் எல்லாம் சேர்த்து, மொத்தம் 58,673 கோடி ரூபாய் கடனுக்கு அனுமதி கொடுத்து இருக்கிறார்களாம். அதில் 34,433 கோடி ரூபாய் கடன் டிஸ்பர்ஸ் செய்யப்பட்டு இருக்கிறது.