நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக இருக்கும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா சமீபத்தில் ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியை வெளியிட்டது. அதன்படி நாட்டிலுள்ள சிறு, குறு தொழில் முனைவோர் மற்றும் வியாபாரிகளுக்காக ஒரு மாபெரும் கடன் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. நீண்ட காலமாகவே நாட்டில் பொருளாதார நிச்சயமற்ற தன்மை நிலவி வருகிறது, காரணம் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம்.
இத்தகைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு எஸ்பிஐ பேங்க் உள்நாட்டில் உள்ள MSMEகளை கை தூக்கிவிடும் விதமாக இந்த முடிவை எடுத்துள்ளது. மத்திய அரசின் எமர்ஜென்சி கிரெடிட் லைன் கேரன்டி ஸ்கீம் 5.0 (ECLGS 5.0) என்ற திட்டத்தின் கீழ் ரூ. 75,000 கோடி முதல் ரூ. 80,000 கோடி வரையிலான கடன்களை வழங்க இருப்பதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
MSME என்பது மைக்ரோ, ஸ்மால் & மீடியம் என்டர்பிரைசஸ் என்பதன் சுருக்கம். அதாவது சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் செய்யும் நிறுவனங்கள் என்று பொருள். ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதில் MSME துறைக்கு பெரும் பங்கு உண்டு. இதனால் எஸ்பிஐ எடுத்திருக்கும் இந்த முயற்சி பாராட்டத்தக்கதாகவே பார்க்கப்படுகிறது.

புதிய கடன் வழங்கும் திட்டத்தின் மூலம் சுமார் 1 கோடிக்கும் அதிகமான பயனாளர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து பேசிய ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தலைவர் சி.எஸ். ஷெட்டி, "தற்போதய சூழலை வைத்து பார்க்கும் போது 30 முதல் 40 சதவீதம் வரையிலான சிறு, குறு தொழில் நிறுவனங்கள் இந்த திட்டத்தினை பயன்படுத்துவார்கள்" என்று கூறியுள்ளார்.
அனால் இதுவரையில் கடன் கோரி வங்கிக்கு வந்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் இன்னும் அரசு சார்பில் கடன் வழங்குவது குறித்த முழுமையான விதிகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதனால் தகுதி உள்ள நிறுவனங்கள் கடன் பெற விண்ணப்பிக்க தொடங்கவில்லை. ஆனால் இதே போன்று நாட்டின் பொருளாதாரச் சூழல் மோசமாக இருக்கும் பட்சத்தில், நாடு முழுவதும் உள்ள தொழில் முனைவோர் சுமார் 2.55 லட்சம் கோடி வரையில் நிதி உதவி பெறுவார்கள் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அப்படி நடந்தால் எஸ்பிஐ வழங்கும் லோன் மேளா மூலம் லட்சக்கணக்கான நபர்கள் பயனடைவார்கள்.
கூடுதலாக ஷெட்டி வங்கியின் பாதுகாப்பை அதிகரிக்க சில நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிகரிக்கத் தொடங்கியதிலிருந்து சைபர் குற்றங்களும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. எனவே இவற்றை எதிர்கொண்டு வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அதிக முக்கியத்துவம் அளிக்க இருப்பதாகவும், இதற்காக தொழில்நுட்ப முதலீடுகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறிருந்தார்.
மேலும் மக்களிடையே தற்போது தனிநபர் கடன், தங்க கடன் மற்றும் வீட்டு கடனுக்கான தேவை அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டிய அவர், 2027-ஆம் நிதியாண்டில் கடன் வழங்கும் விகிதத்தை 13 முதல் 15 சதவீதம் வரை உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும், வங்கியின் டெபாசிட் விகிதத்தை 11 முதல் 12 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications