திருச்சி, புத்தூர் நால் ரோடு பகுதியில் அரேபியன் தந்தூர் சாய் (Tandoori Tea) என ஒரு டீ கடை போட்டிருக்கிறார் நம், மெக்கானிக்கல் இன்ஜினியர் முகம்மது அஸ்லாம்.
"என்னைய்யா இன்ஜினியரிங் படிச்சிட்டு டீ கடை போட்டிருக்க, போய் ஆகற வேலையைப் பாரு" எனச் சொல்லியவர்களை எல்லாம் அசால்டாக புறம் தள்ளிவிட்டு டீ கடை போட்டு பல ஜீனியர்களுக்கு பார்ட் டைம் வேலை கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
"படிச்ச படிப்புக்கு வேலை கிடச்சிருக்காது போல, அதான் டீ கடை போட்டிருக்காரு" என இவரை ஏளனம் பேச வேண்டாம். இவர் திருச்சி BHEL-ல் தற்காலிக வேலை பார்த்துவிட்டு, எதையாவது செய்ய வேண்டும் எனச் சொல்லி வெளியே வந்தவர்.
திருச்சியில் முதன் முறையாக
பிசினஸ் என்றாலே எதையாவது புதிதாக செய்ய வேண்டும் என்கிற ஐடியா இருக்கும். ஆனால் என்ன செய்வது என தெரியாது. நம் அஸ்லாமுக்கு தெரிந்திருந்தது. வட இந்தியாவில் கொடூரமாக டிரெண்டாகிக் கொண்டிருக்கும் Tandoori Tea-ஐ கையில் எடுத்தார். சென்னையில் இந்த ஸ்மோக்கி சுவை Tandoori Tea கிடைக்கிறது. திருச்சியில் யாராவது இந்த Tandoori Tea-ஐப் போட்டிருக்கிறார்களா எனப் பார்த்தால் "அட நாம தான் மொதல்ல" என புத்தூர் நால்ரோடு பகுதியில் கடை போட்டுவிட்டார்.
இரண்டு மாதம் தான்
இவர் கிறிஸ்து பிறப்பு முன் எல்லாம் கடை போடவில்லை. கடை போட்டு வெறும் 66 நாட்கள் தான் ஆகிறது. 01 ஏப்ரல் 2019-ல் தான் கடைக்கு பூஜை போட்டு முதல் Tandoori Tea போட்டிருக்கிறார். இந்த இரண்டு மாதத்திலேயே பயங்கரமான ரீச் கிடைக்க, பிசினஸும் நன்றாக வளர்ந்திருக்கிறதாம். முதலில் தயங்கிய பெற்றோர்கள் 60 நாட்களில் கடை நடத்திய திறனைப் பார்த்து "என்னங்க பையன் பொழச்சிக்குவான் போலருக்கே..!" என கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார்களாம். அதற்கு அஸ்லாமும் "அதான் நல்ல பேர் வாங்கிட்டோம்ல, அதான் நம்மள கண்டுக்குறதில்ல" என கண் அடிக்கிறார்.
நண்பர்கள்
கடையில் எப்போதுமே ஒரு கலகல யூத் கூட்டம் இருந்து கொண்டே இருக்கிறது. காலேஜில் சீனியராக இருந்த அஸ்லம் கடையில், பார்ட் டைம் பார்க்கும் ஜீனியர்களும் அதிகம் உண்டு. வெறும் 10 ரூபாய்க்கு ஒரு கப் Tandoori Tea கொடுத்தே என்னால் இரண்டு மாதம் கடையை நடத்த முடிந்திருக்கிறது. வேலை பார்ப்பவர்களுக்கு கொஞ்சம் சம்பளம் கொடுக்க முடிந்திருக்கிறது, இன்னும் விரிவாக்கம் செய்யப் போகிறேன் என உற்சாகம் பீரிட பெருமைப் படுகிறார் அஸ்லாம். ஆனால் லாப நஷ்டங்களைப் பற்றிப் பேசவில்லை. ஆக இவரால் ஒரு டீ கடையை நடத்தி தன் வாழ்க்கையை நடத்திக் கொள்ள முடிந்திருக்கிறது என்பது மட்டும் தெளிவாக புரிகிறது.
மெல்லிய சிரிப்பு
ஸ்ஸ்..ப்ப்ப்... தலைவா டேஸ்ட் ரொம்ப நல்லா இருக்கே... இந்த டீய எப்புடி பண்றாய்ங்க..? என முதல் முறை ஸ்மோக்கி சுவை கொண்ட Tandoori Tea குடிக்கும் பலரும் கேள்வி கேட்பதுண்டு. ஆனால் அஸ்லாம் அதற்கு பதில் சொல்லாமல் செய்து காட்டுகிறார். ஆக நாம் இணையத்தில் இந்த Tandoori Tea ரெசிப்பியை தேடிப் பிடித்திருக்கிறோம்.
மண் குவளை
2019-ல் இருந்து தான் இந்த Tandoori Tea வட இந்தியாவில் பெரிய அளவில் பரவி வருகிறது. ஆனால் தென்னிந்தியாவுக்கு இப்போது தான் எட்டிப் பார்க்கத் தொடங்கி இருக்கிறது. இந்த Tandoori Tea-ன் சுவைக்கு குடிக்கும் டீயை விட, மண் குவளை ரொம்ப முக்கியம். அந்த மண் குவளையால் தான் டீயின் டேஸ்ட் வேறு லெவலைத் தொடுகிறது.
மண் குவளை
Tandoori Tea-க்கான முக்கிய பொருட்களில் ஒன்றான மண் குவளையை Tandoori அடுப்பில் போட்டு வைத்திருப்பார்கள். எவ்வளவு நேரம்..? மண் குவளை ரத்தச் சிவப்புக்கு சூடாகி, இரும்பு தொழிற்சாலைகளில் இரும்பு எப்படி தங்கம் போல் ஜொலிக்கும்..! அப்படி இந்த மண் குவளை நெருப்புப் பிழம்பாக ஜொலிக்கும் வரை, தந்தூர் அடுப்பில் வைத்திருப்பார்கள். மிக முக்கியமான விஷயம் தந்தூர் அடுப்பில் நெருப்போடு கங்கு இருக்கிறது. கிட்டதட்ட மண் குவளையை நெருப்பால் மீண்டும் உருக்க முயற்சிப்பது போல நெருப்பில் போட்டு வைக்கிறார்கள்.
ரெகுலர் டீ தயாரிப்பு
மறு பக்கம் டீ போட்டுக் கொண்டிருப்பார்கள். பிரியாணியை எப்படி நூற்றுக்கணக்கான வழியில் தயாரிக்க முடியுமோ அப்படி டீ போடுவதற்கும் பல ரெசிப்பிகள் இருக்கின்றன. பொதுவாக ஒரு பக்கம் தண்ணீரில் டீத் தூள் போட்டு கொதிக்க வைத்து டீக்கான டிகாஷனை தயாரிப்பார்கள். மறு பக்கம் பாலை கொதிக்க வைப்பார்கள். பால் உடன் சர்க்கரை டீ டிகாஷன் சேர்த்தால் டீ ரெடி..... ஆனால் நம் Tandoori Tea-யை அப்படிப் போடுவதில்லை.
பொருட்கள்
Tandoori Tea-க்கு மிக ஏலக்காய் பொடி முதல் கரம் மசாலா வரை பலவற்றையும் சேர்க்கிறார்கள். பொதுவாக இணையத்தில் கிடைக்கும் செய்திகளில் மசாலா டீக்கு போடுவது போல ஏலக்காய், கிராம்பு, சுக்கு அல்லது இஞ்சி, பட்டை என லிஸ்ட் நீள்கிறது. இவைகளை எல்லாம் அவர்களுக்கு உரிய ரகசிய அளவுகளில் நன்றாக வறுத்து பொடியாக்கி வைத்துக் கொள்கிறார்கள்.
டீ தயாரிப்பு
டீக்கு தேவையான விகிதத்தில் தண்ணீரை பாலுடன் ஏற்கனவே சேர்த்து விடுகிறார்கள். இப்போது பாலை கொதிக்க வைக்கும் போதே, மேலே சொன்ன பொடியை சேர்த்து விடுகிறார்கள். அதனால் பாலில் சுவையும் மணமும் நிறைந்து விடுகிறது. அதன் பின் பாலிலேயே டீத் தூள் மற்றும் சர்க்கரை போட்டு கொதிக்க வைத்து அடுத்த சில மணி நேரங்களுக்குத் தேவையான டீயை தயாரித்து கேனில் சேமித்து வைத்துக் கொள்கிறார்கள்.
Tandoori Tea
இப்போது கஸ்டமர் வந்து Tandoori Tea கேட்டால், இந்த தங்க நிறத்தில் ஜொலிக்கும் மண் குவளையை எடுக்கிறார்கள். கேனில் சேமித்து வைத்திருக்கும் டீயை இந்த ஜொலிக்கும் மண் குவளையில் ஊற்ற டீ மீண்டும் துள்ளிக் குதிக்கிறது. ஆகையால் வெப்பத்தில் ஜொலிக்கும் இந்த மண் குவளையை ஒரு பெரிய பாத்திரத்தில் வைத்து டீயை ஊற்றுகிறார்கள். எனவே வெப்பத்தில் ஜொலிக்கும் மண் குவளையின் முழு வெப்பத்தையும், டீ மீண்டும் எடுத்துக் கொள்கிறது. ஒரு கட்டத்தில் ஜொலிக்கும் மண் குவளையின் சூடு குறைந்து விடுகிறது. மண் குவளையின் ஸ்மோக்கி சுவை நிறைந்த அந்த தந்தூர் டீயின் ஆவி பறக்கிறது. ஸ்பெஷல் Tandoori Tea ரெடி.
சுவை
ஏற்கனவே ஏலக்காய், க்ராம்பு, பட்டை, சுக்கு எல்லாம் போட்டு சுவை ஏத்தப் பட்டு வைத்திருக்கும் டீயை மீண்டும் மண் பாணையில் சுட வைப்பதால், ஏதோ ஒரு இனம் புரியாத சுவை கூடுகிறது. மண் பாண்டங்களில் சமைத்த உணவுகளை சுவை பார்க்காத 90-ஸ் கிட்ஸ்களுக்கு இந்த Tandoori Tea வேறு ஒரு புது பரவசத்தைக் கொடுக்கிறது. இவ்வளவு பெரிய பிராசஸ் கொண்ட டீயை வெறும் 10 ரூபாய்க்கு அஸ்லாம் கண் முன் போட்டுக் கொடுத்தால் குடிக்காமல் என்ன செய்வோம்..?
வேறு என்ன..?
நம் அஸ்லாமின் அரேபியன் தந்தூர் சாய் கடையில்... பச்சை மிளகாய் போட்ட குல்கி சர்பத், குல்கி பூஸ்ட், குல்கி ரோஸ்மில்ஸ் என வித்தியாசமான ஐட்டங்களாக அள்ளி விடுகிறார். அதோடு "இன்ஜினியரிங் படித்த விஐபி-க்களுக்கு வேலை இல்லையா... வாங்க சார்... வந்து கடைய போடுங்க பாத்துக்குவோம்" என உளமாற அழைக்கிறார். மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அஸ்லாம்.