இந்தியாவில் கொரோனா தொற்று முதல் அலையில் ஏற்பட்ட பாதிப்புகளைக் குறைப்பதற்காக மத்திய நிதியமைச்சகம் பல்வேறு சிறப்புத் திட்டங்களை அறிவித்தது, ஆனால் 2வது தொற்று அலை இந்த அறிவிப்புகள் மூலம் உருவான வளர்ச்சி மொத்தையும் விழுங்கியது.
இந்தச் சூழ்நிலையில் 2வது கொரோனா அலையின் தாக்கத்தைக் குறைக்கவும் அதன் மூலம் ஏற்பட்டும் வர்த்தகப் பாதிப்புகளைக் களையவும் இன்று கொரோனா மூலம் அதிகம் பாதிக்கப்பட்ட துறைகளை மீட்டு எடுக்கும் விதமாக மத்திய நிதியமைச்சகம் பல்வேறு முக்கியப் பொருளாதார ஊக்கத் திட்டத்தை அறிவித்துள்ளது.
8 பெரும் அறிவிப்புகள்
சுமார் 8 பெரும் அறிவிப்புகள் அறிவிக்கப்பட்ட இந்தப் பொருளாதார ஊக்கத் திட்டத்தில் விவசாயிகளுக்கும், நிறுவனங்களுக்கும் சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தாலும் சாமானிய கிராமம், டவுன் பகுதி மக்களுக்குப் பயன்படும் வகையில் முக்கியமான திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
கிராமம், டவுன் பகுதி மக்கள்
கிராமம், டவுன் பகுதியில் இருக்கும் மக்களுக்கு நிதியுதவி அளித்து அதன் மூலம் வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என முடிவு செய்துள்ள மத்திய நிதியமைச்சகம் மைக்ரோ பைனான்ஸ் அமைப்பு அல்லது NBFC-MFI மூலம் சுமார் 25 லட்சம் பேருக்குக் கடன் உதவி அளிக்கத் திட்டமிட்டுள்ளது.
மைக்ரோ பைனான்ஸ் அமைப்பு
மைக்ரோ பைனான்ஸ் அமைப்பு மூலம் சுமார் 25 லட்சம் பேருக்கு அதிகப்படியாகத் தலா 1.25 லட்சம் ரூபாய் அளவிலான தொகையைக் கடனாக அளிக்க முடிவு செய்துள்ளது. இந்தக் கடனுக்கு அதிகப்படியாக மைக்ரோ பைனான்ஸ் அமைப்புகள் MCLR விகிதத்தில் இருந்து 2 சதவீதம் மட்டுமே கூடுதலாக விதிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டையும் விதித்துள்ளது.
25 லட்சம் பேருக்கு நல்ல வாய்ப்பு
மேலும் இத்திட்டத்தில் புதிதாகக் கடன் வாங்குவோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் 80 சதவீத தொகையை incremental lending சேவைக்காகப் பயன்படுத்த வேண்டும். மேலும் 89 நாட்கள் வரையில் கடனை செலுத்த முடியாதவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் கடன் பெற அனுமதி அளித்துள்ளது நிதியமைச்சகம்.
1.25 லட்சம் ரூபாய்க் கடன்
இத்திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் 1.25 லட்சம் ரூபாய் அளவிலான கடன் 3 வருட காலம் மட்டுமே, இதேபோல் இத்திட்டம் மார்ச் 31, 2022 வரையில் அல்லது அரசு நிர்ணயம் செய்துள்ள 7,500 கோடி ரூபாய் அளவிலான தொகை எது விரைவாக அடைகிறதோ, அப்போது இத்திட்டம் மூடப்படும்.
கொரோனா தொற்று
கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு இத்திட்டம் மூலம் எளிதாக 1.25 லட்சம் ரூபாய் அளவிலான கடனை பெற்று மக்கள் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடியும். மேலும் வாங்கப்படும் கடன் வெறும் 3 வருடம் மட்டுமே என்பதால் ஈஎம்ஐ அளவீடு சிலருக்கு அதிகமாக இருக்கலாம்.