இந்தியாவில் கொரோனா தொற்றுக் காரணமாக நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் நிறுவனங்கள் வர்த்தகம் இல்லாமலும், உற்பத்தி பணிகள் செய்ய முடியாமலும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது. இதனால் லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்பும் பல நிறுவனங்களால் மீண்டு வர முடியாமல் தவித்து வந்தது.
இதன் எதிரொலியாகத் தமிழ்நாட்டில் மட்டும் லாக்டவுன் அறிவிப்புச் செய்யப்பட்ட பின்பு 1000த்திற்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் முழுமையாக மூடப்பட்டு, வர்த்தகத்தை விட்டு வெளியேறியுள்ளது.
லாக்டவுன் எதிரொலி
லாக்டவுன் பாதிப்புகளில் இருந்து இன்று வரையில் மீள முடியாமல் பல கோடி நிறுவனங்கள் தவித்து வரும் நிலையில், வர்த்தகச் சரிவை எதிர்கொள்ள முடியாமல் நிறுவனங்களை மொத்தமாக மூடப்பட்டு, வர்த்தகத்தை விட்டு வெளியேறிய நிறுவனங்கள் குறித்து முக்கியமான ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.
10,113 நிறுவனங்கள் மூடல்
லோக் சபாவில் லாக்டவுன் பாதிப்புகள் மற்றும் நிறுவன மூடல் குறித்து எழுந்த கேள்விக்கு மத்திய கார்ப்பரேட் விவகாரத் துறை விளக்கம் அளித்துள்ளது. இந்த விளக்கத்தில் லாக்வுடன் அறிவிக்கப்பட்டத்தில் இருந்து அதாவது ஏப்ரல் 2020 முதல் பிப்ரவரி 2021 வரையில் நாடு முழுவதும் சுமார் 10,113 பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு ரொம்ப மோசம்
இதுமட்டும் அல்லாமல் பதிவு செய்யப்படாத சிறு, குறு, கைத்தொழில், குடிசை தொழில் எனப் பல ஆயிரம் நிறுவனங்கள் முடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் அதிகம் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மூடப்பட்ட மாநிலத்தில் தமிழ்நாடு 3வது இடத்தில் இருப்பது மிகவும் வருத்தம் அளிக்கும் விஷயமாக உள்ளது.
3வது இடத்தில் தமிழ்நாடு
ஏப்ரல் 2020 முதல் பிப்ரவரி 2021 வரையிலான காலகட்டத்தில் டெல்லியில் 2,394 நிறுவனங்களும், உத்திர பிரதேசத்தில் 1,936 நிறுவனங்களும், தமிழ்நாட்டில் 1,322 நிறுவனங்களும் மூடப்பட்டு முதல் 3 இடத்தைப் பிடித்துள்ளது. கடைசி இரண்டு இடத்தில் அந்தமான் & நிகோபர், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் உள்ளது.