இந்தியாவில் கடந்த சில வாரங்கள் எந்தச் செய்தி வந்தாலும் அது கொரோனா பற்றியோ அல்லது அதன் தக்கத்தால் ஏற்படும் பிரச்சனைகளின் செய்தியாகவே உள்ளது என்றால் மிகையில்லை. அந்த வகையில் இந்தச் செய்தியும் அப்படித் தான், இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் நிலையில் நாட்டின் ஒட்டுமொத்த சந்தையும் முடங்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் பிஎஸ்4 ரக வாகனங்களை விற்பனை செய்ய 10 நாட்கள் கால நீட்டிப்புச் செய்யச் சுப்ரீம் கோர்ட் அனுமதி கொடுத்துள்ளது.
நாடு முழுவதும் 21 நாட்கள் லாக்டவுன் செய்யப்பட்டுள்ள இந்த நேரத்தில் ஆட்டோமொபைல் துறைக்கு நல்லது நடந்துள்ளது என்றாலும் இதனால் எவ்விதமான பயனும் இல்லை எனக் கூறப்படுகிறது.
10 நாட்கள் நீட்டிப்பு
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தற்போது விற்பனைக்கு உள்ள அனைத்துப் பிஎஸ்4 ரக வாகனங்கள் அனைத்தும் பிஎஸ்6 ரகக் கட்டுப்பாடுகளைப் பூர்த்தி செய்யும் வாகனங்களாக மாற்றப்பட வேண்டும். ஆனாலும் கொரோனா தாக்கத்தைக் காரணம் காட்டி 10 நாட்கள், அதாவது லாக்டவுன் காலம் முடிவடைந்த அடுத்த 10 நாட்களுக்குப் பழைய பிஎஸ்4 ரக வாகனங்களை விற்பனை செய்யச் சுப்ரீம் கோர்ட் அனுமதி கொடுத்துள்ளது.
ஆனால் பிஎஸ்4 ரக வாகனங்களை டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் விற்பனை செய்யக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.
ஊரடங்கு
தற்போது கொடுக்கப்பட்டுள்ள அனுமதி Federation of Automobile Dealers Association (FADA) அமைப்புப் பிஎஸ்4 ரக வாகனங்களை 2 மாதங்களுக்கு விற்பனை செய்யும் வகையில் கால நீட்டிப்புச் செய்யக் கோரியது. ஆனால் அதற்குள் மார்ச் 24ஆம் தேதி முதல் மார்ச் 14ஆம் தேதி வரையில் நாடு முழுவதும் 144 தடை உத்தரவிடப்பட்டது.
FADA கோரிக்கையை விசாரித்த நீதிமன்றம் லாக்டவுன் காலம் முடிந்த பின்பு 10 நாட்கள் மட்டும் கால அவகாசம் கொடுத்துள்ளது.
எந்த நன்மையும் இல்லை
ஆட்டோமொபைல் நிறுவனங்கள் குறைந்தது 3 மாத கால அவகாசம் கேட்டு வரும் நிலையில், சுப்ரீம் கோர்ட்டின் 10 நாள் கால அவகாசம் ஆட்டோமொபைல் துறைக்கு எவ்விதமான பயனும் அளிக்காது என CARE ரேட்டிங்ஸ் ஆய்வறிக்கை கூறுகிறது.
மந்தமான விற்பனை
லாக்டவுன் காலத்திற்குப் பின்பு விற்பனை அளவு குறைவாகத் தான் இருக்கும், அதிலும் 10 நாட்கள் மட்டுமே கொடுத்துள்ளதால் எவ்விதமான பயனுமில்லை என CARE அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மக்கள் மனநிலை
அதேபோல் மக்கல் லாக்டவுன் காலத்திற்குப் பின் பணத்தைச் சம்பாதிப்பதிலும், சேமிப்பதிலும், முக்கியமான தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் தான் அதிகளவிலான கவனத்தைச் செலுத்தும். இப்படியிருக்கும் ஆடம்பர பொருட்கள் சந்தையில் பெரிய அளவிலான முதலீட்டைச் செய்யமாட்டார்கள்.
இதனால் குறைந்தது 3 மாத காலம் வேண்டும் என வாகன உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.