படித்து முடித்த பிறகு எல்லோருக்குமே நல்லதொரு சம்பளத்தில் வேலைக்கு போக வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் படிக்கும் அனைவருக்குமே நல்ல சம்பளத்தில் பணி கிடைக்கிறதா? என்றால் அது சந்தேகம் தான். ஏன் பலரும் படித்த படிப்புக்கு வேலை கிடைக்காமல், கிடைத்த வேலைக்கு செல்வதை பார்க்க முடிகிறது.
ஆக படிக்கும்போதே எந்த துறையில் வேலை வாய்ப்புகள் அதிகம். எந்த துறையில் தேவை அதிகம், சம்பளம் எங்கு அதிகம்? என்பது உள்ளிட்ட பலவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
அப்படி நடப்பு ஆண்டில் நல்ல சம்பளம் கொடுக்கும் வேலைகள், இந்தியாவில் என்னென்ன? என்பதை பற்றித் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம். இது நிச்சயம் பலருக்கும் பயனுள்ள ஒன்றாக இருக்கும்.
சாப்ட்வேர் ஆர்கிடெக்
பொதுவாக ஐடி துறையில் தேவையானது அதிகரித்து வருகின்றது. இந்த துறையில் வாய்ப்புகள் அதிகம் பெருகலாம் என ஏராளமான அறிக்கைகள் கூறுகின்றன. ஐடி துறையில் குறிப்பாக சாப்ட்வேர் ஆர்கிடெக்-ன் தேவை அதிகரிக்கலாம். குறிப்பாக கோடிங், வெப் டிசைனிங், சாப்ட்வேர்களை தயாரித்தல் என்பது அதிகரிக்கலாம். நீங்கள் ஒரு சாப்ட்வேர் ஆர்கிடெக் ஆக கணினி அறிவியலோ அல்லது தொடர்புடைய துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இதற்காக HTML, Javascript, C++ பற்றிய திறன் இருக்க வேண்டும். இதற்கு தொடக்க சம்பளமாக 9 லட்சம் ரூபாய் முதல் வழங்கப்படுகின்றது. சராசரியாக ஆண்டுக்கு 24 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.
சொல்யூசன்ஸ் ஆர்கிடெக்
சொல்யூசன்ஸ் ஆர்கிடெக் என்பது வணிகங்களில் உள்ள சிக்கலை கண்டறிந்து அதற்கான தீர்வுகளை வழங்க உதவுகிறது. சொல்யூசன்ஸ் ஆர்கிடெக் ஆக நீங்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ், சாப்ட்வேர் இன்ஜினியர், தகவல் தொழில் நுட்பத்தில், இளங்கலை பட்டம் படித்திருக்க வேண்டும். இந்த பணிக்கு ஆரம்ப சம்பளம் வருடத்திற்கு 5 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதே சராசரி சம்பளம் 20 லட்சம் ரூபாய் கிடைக்கிறது. அதிகபட்சம் 26 லட்சம் ரூபாய் வரையில் பெறலாம்.
கமர்ஷியல் பைலட்
பைலட் என்பதே பலருக்கும் விருப்பமான ஒரு பணியாக இருக்கும். அதில் கமர்ஷியல் பைலட் என்பது புதுவிதமான அனுபவத்தினை கொடுக்கலாம். நீங்கள் ஒரு கமர்ஷியல் பைலட் ஆக விரும்பினால், அறிவியல் தொடர்பான இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இவற்றுடன் பைலட் லைசென்ஸ்-ம் இருக்க வேண்டும். இங்கு தொடக்க சம்பளம் 15 லட்சம் ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இதே வருடத்திற்கு 50 லட்சம் ரூபாய் வரை இருக்கலாம்.
மேனேஜ்மென்ட் கன்சல்டன்ட்
மேனேஜ்மென்ட் கன்சல்டன்ட்-கள் நிறுவனங்களின் செயல்திறனை மேம்படுத்த உதவுகிறார்கள். நிறுவனத்தின் இலக்கினை அடைய உதவுகிறார்கள். மேலாண்மை ஆலோசகராக ஆவதற்கு வணிகத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் (பொருளாதாரம், நிதி அல்லது கணக்கியலில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும்.
இவர்களின் ஆரம்ப சம்பளம் ஆண்டுக்கு 7 லட்சம் ரூபாயாக உள்ளது. இது அனுபவத்திற்கு பிறகு ஆண்டுக்கு 23 லட்சம் ரூபாய் வரையில் அதிகரிக்கிறது.
பொது அறுவை சிகிச்சை நிபுணர்
டாக்டர் என்பது பலருக்கும் கனவாகவே இருக்கும். எனினும் பொது அறுவை சிகிச்சை நிபுணர் என்பது அதிக சம்பளம் பெறும் வேலைகளில் ஒன்றாகவே உள்ளது. நீங்கள் பொது அறுவை சிகிச்சை நிபுணர் ஆக எம்பிபிஎஸ் உடன் போதிய பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும். இது தவிர எம்எஸ் -ம் படித்திருக்க வேண்டும்.
இவர்களின் தொடக்க சம்பளம் 11 லட்சம் ரூபாயாகும். இதே அனுபவத்திற்கு பிறகு ஆண்டுக்கு 24 லட்சம் ரூபாய் என்ற லெவலுக்கு அதிகரிக்கிறது.
டேட்டா சயின்டிஸ்ட்
தற்போதைய காலகட்டங்களில் அதிகரித்து வரும் துறைகளில் இதுவும் ஒன்று. டேட்டா சயின்டிஸ்ட் தொழில் நுட்பத்தின் போக்கினை கண்கானித்து, தரவினை நிர்வகிக்கும் நிபுணர்கள் இந்தியாவில் அதிக சம்பளம் பெறும் ஊழியர்களில் ஒன்றாக உள்ளனர். இந்தியாவில் ஐடி துறை அதிக சம்பளம் கொடுக்கும் வேலைகளில் இதுவும் ஒன்றாக உள்ளது. இந்த பணியில் ஆரம்ப சம்பளம் சுமார் 6 லட்சம் ரூபாயாகும். சராசரி சம்பளம் ஆண்டுக்கு 9 லட்சம் ரூபாயாகவும், அனுபவத்திற்கு பிறகு ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாய் வரையில் சம்பளம் இருக்கும்.
டேட்டா இன்ஜினியர்
டேட்டா இன்ஜினியர்கள், பிடெக் அல்லது டிகிரி (கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது தொடர்புடைய படிப்புகளை படித்திருக்க வேண்டும். இவர்களின் ஆரம்ப சம்பளம் 5 லட்சம் ரூபாயில் இருந்து ஆரம்பமாகிறது. இது அனுபவத்தினை பொறுத்து 20 லட்சம் ரூபாய் வரையில் செல்கிறது.
சார்ட்டர்டு அக்கவுண்டன்ட்
சார்ட்டர்டு அக்கவுண்டன்ட் கடினமான தேர்வுகளில் ஒன்றாகும். எனினும் சம்பளமும் அதிகம். இவர்களின் சம்பளம் ஆண்டுக்கு ஆரம்பத்தில் சுமார் 7 லட்சம் ரூபாயாக உள்ளது. இது அதிகபட்சமாக ஆண்டுக்கு சுமார் 20 லட்சம் ரூபாயாக உள்ளது.
முதலீட்டு ஆலோசகர்
முதலீட்டு ஆலோசகர்கள் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப கண்கானித்து, முதலீட்டாளர்களுக்கு உதவுகின்றனர். இதற்காக பொருளாதாரம், நிதி கணக்கியல் அல்லது பிற தொடர்புடைய துறைகளில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இவர்களின் சம்பளம் ஆரம்பத்தில் 6 லட்சம் ரூபாயாகவும், அனுபவத்திற்கு பிறகு 25 லட்சம் ரூபாயாகவும் உள்ளது.
கார்ப்பரேட் வழக்கறிஞர்
கார்ப்பரேட் வழக்கறிஞர் இன்றும் அதிக சம்பளம் பெறும் வேலைகளில் ஒன்றாக உள்ளது. இதற்கு நீங்கள் எல்எல்பி முடித்திருக்க வேண்டும். இதற்கும் சம்பளமாக மாதம் 6 லட்சம் ரூபாய் தொடக்கத்தில் வழங்கப்படுகின்றது. இதே இது வருடத்திற்கு 12 லட்சம் ரூபாய் வரை அனுபவத்திற்கு ஏற்ப கிடைக்கிறது.