இந்தியாவில் அடுத்த 5 வருடத்தில் 100 கோடி மொபைல் போன், 5 கோடி டிவி, 5 கோடி லேப்டாப் மற்றும் டேப்லெட் கருவிகளை உருவாக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது என எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் துறை அமைச்சரான ரவி ஷங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
இதுமட்டும் அல்லாமல் இந்தியாவில் 4ஜி சேவை பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் கூடிய விரைவில் 5ஜி சேவையை அறிமுகம் செய்ய உள்ளதாகவும் ரவி ஷங்கர் பிரசாத் CII மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
உற்பத்தித் துறையில் கவனம்
இந்தியா சேவையைத் துறையைத் தாண்டி தற்போது உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்குப் பல துறைகளில் தனது உற்பத்தித் திறனை அதிகரித்து வருகிறது. இதில் முக்கியமான ஸ்மார்ட்போன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தியில் பெரிய அளவிலான வளர்ச்சியை அடையத் திட்டமிட்டுள்ளது.
சீன உற்பத்தி நிறுவனங்கள்
சீனாவில் இருந்து வெளியேறிய பல ஸ்மார்ட்போன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களுக்கு இந்தியா முதன்மை தேர்வாக விளங்குகிறது. இதனால் சாம்சங், ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தி கூட்டணிகள் நிறுவனங்கள், சியோமி உற்பத்தி கூட்டணிகள் நிறுவனங்கள், கடந்த ஒரு வருடத்தில் இந்தியாவில் தொழிற்சாலையை அமைத்தும், உற்பத்தியை விரிவாக்கம் செய்தும் வருகிறது.
ரவி ஷங்கர் பிரசாத்
இந்நிலையில் மத்திய அரசு எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தியில் மிகப்பெரிய இலக்கை நிர்ணயம் செய்துள்ளது. அடுத்த 5 வருடத்தில் இந்தியாவில் 100 கோடி மொபைல் போன், 5 கோடி டிவி, 5 கோடி லேப்டாப் மற்றும் டேப்லெட் கருவிகளை உருவாக்கத் திட்டமிட்டு உள்ளதாக எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் துறை அமைச்சரான ரவி ஷங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் பொருளாதாரம்
இதேகாலகட்டத்தில் இந்தியாவில் டிஜிட்டல் பொருளாதாரம் அடுத்த 5 வருடத்தில் 1 டிரில்லியன் டாலர் வரையிலான வளர்ச்சியை அடைய வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளது மத்திய அரசு.
இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை அதிகரிக்க ஸ்மார்ட்போன் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிடும் அரசு, இதன் மூலம் டிஜிட்டல் பொருளாதாரத்தையும் உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.
லேப்டாப் மற்றும் டேப்லெட் உற்பத்தி
இந்தப் புதிய உற்பத்தி இலக்கு மூலம் லேப்டாப் மற்றும் டேப்லெட் உற்பத்தி சந்தையில் இந்தியாவின் பங்கு தற்போது வெறும் 1 சதவீதமாக இருக்கும் நிலையில் அடுத்த 5 வருடத்தில் இதன் அளவு 26 சதவீதமாக இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது.
5 லட்சம் வேலைவாய்ப்புகள்
மேலும் தற்போது மத்திய அரசு வகுத்துள்ள எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி இலக்கு மூலம் அடுத்த 5 வருடத்தில் 5 லட்சம் வேலைவாய்ப்புகளையும், 75 பில்லியன் டாலர் அளவிலான பாரின் எக்ஸ்சேஞ்ச் மற்றும் 1 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டையும் இந்தியா பெற முடியும் என ICEA அமைப்பு தெரிவித்துள்ளது.