ரஷ்யா - உக்ரைன் போர் ஆரம்பித்து 100 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் உலக நாடுகளில் பொருளாதாரம் எந்த அளவுக்கு வீழ்ச்சி அடைந்தது என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.
குறிப்பாக இந்தியாவில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்தன.
அதுமட்டுமின்றி பணவீக்கமும் இந்த ஆண்டு ஏப்ரலில் 7.8 சதவீதமாக உயர்ந்தது.
பணவீக்கம்
கடந்த 2014ஆம் ஆண்டுக்கு பின் அதிகபட்சமாக பணவீக்கம் இருந்தது. மேலும் வனஸ்பதி எண்ணெய், கோதுமை, கடுகு எண்ணெய் மற்றும் சர்க்கரை ஆகியவை விலைகள் மிகப்பெரிய அளவில் உயர்ந்ததற்கு காரணமும் இந்த போர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
வனஸ்பதி
இந்த ஆண்டு மே 31 அன்று வனஸ்பதி எண்ணெயின் விலை 2021 ஆம் ஆண்டின் அதே நாள் விலையை விட 26.6 சதவீதம் அதிகம். அதேபோல் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கோதுமை விலையும் 14.3 சதவீதம் உயர்ந்துள்ளது. கடுகு எண்ணெய் மற்றும் சர்க்கரையின் விலைகள் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டும் 5.1 சதவீதம் மற்றும் 4.1 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
கச்சா எண்ணெய்
மேற்கண்ட பொருட்களின் விலையேற்றத்தைவிட கச்சா எண்ணெய் விலை உயர்வு தான் இந்தியாவின் பொருளாதாரத்திற்கு விழுந்த பலத்த அடி. 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு சுமார் $80 ஆக இருந்த நிலையில் ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு $128 ஆக உயர்ந்தது. மே 31 அன்று கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு $122.8 ஐ எட்டியதன் மூலம் புதிய உச்சத்தை தொட்டது.
வெளிநாட்டு முதலீடு
மேலும் இந்திய சந்தைகளில் முதலீடு செய்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக அளவில் வெளியேறியதற்கு முக்கிய காரணம் இந்த பணவீக்கம் தான். வெளிநாட்டு முதலீடுகள் திரும்பப் பெற்றதால் அதன் எதிரொலியாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிந்தது. போர் தொடங்கிய பிப்ரவரி 24 அன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 77.53 ஆக இருந்த நிலையில் மேலும் 4 சதவீதம் சரிந்து, மே 31 அன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.77.7 ஆக இருந்தது.
அதேபோல் இந்தியாவின் ஜிடிபி எண்களும் ரஷ்யா-உக்ரைன் போரால் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பணவீக்கம் இன்னும் சிறிது காலத்திற்கு ஒரு முக்கிய பிரச்சினையாக இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுவதால் விலைவாசி உயர்வும் தொடர்ந்து இருக்கும் என கருதப்படுகிறது.
இந்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி அனந்த நாகேஸ்வர ராவ் இதுகுறித்து கூறியபோது, 'பணவீக்கம் அதிகரித்திருப்பது உண்மை என்றாலும் பொருளாதார தேக்கநிலை இந்தியாவில் இல்லை' என்று கூறினார்.


Click it and Unblock the Notifications