கொரோனா 2வது அலை மிகவும் மோசமாக இந்தியாவைத் தாக்கியுள்ள நிலையில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் முழு லாக்டவுன் அறிவிக்கப்பட்ட, கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளது. இதனால் ஆட்டோமொபைல் துறை முதல் MSME நிறுவனங்கள் வரையில் அனைத்தும் உற்பத்தியைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
இந்தச் சூழ்நிலையில் இந்தியாவில் ஸ்மார்ட்போன் தயாரிக்கும் தைவான் நாட்டைச் சேர்ந்த பாக்ஸ்கான் நிறுவனம் ஊழியர்கள் மத்தியில் ஏற்பட்டு உள்ள கொரோனா தொற்றுக் காரணமாகத் தொழிற்சாலையை மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.
சென்னை பாக்ஸ்கான் தொழிற்சாலை
உலகின் 2வது ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான பாக்ஸ்கான் சென்னையில் அமைத்துள்ள தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களில் 100க்கும் அதிகமானோருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதாலும், முழு லாக்டவுன் அறிவிக்கப்பட்டு உள்ள இந்திய மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று என்பதால் பாக்ஸ்கான் சென்னை தொழிற்சாலையைக் கட்டாயம் மூடியாக வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.
பாக்ஸ்கான் தொழிற்சாலை
பாக்ஸ்கான் சென்னை தொழிற்சாலையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களைத் தயாரித்து வரும் பணிகள் முழுமையாக முடங்கியுள்ளது. மேலும் சென்னை தொழிற்சாலை முடங்கப்பட்டு உள்ள நிலையில் இந்திய உற்பத்தி அளவீட்டில் பாக்ஸ்கானின் உற்பத்தி 50 சதவீதம் வரையில் குறைந்துள்ளது.
உற்பத்தி சரிவு
நேற்று மாலை முதல் ஊழியர்கள் தொழிற்சாலைக்குள் வர அனுமதி அளிக்கப்படவில்லை, ஏற்கனவே இருக்கும் ஊழியர்கள் மட்டுமே பணியாற்ற அனுமதிக்கப்பட்டு இருக்கும் காரணத்தால் குறைந்த அளவிலான உற்பத்தி மட்டுமே வெளியே வருகிறது.
ஆப்பிள் உற்பத்தி கூட்டாளி
ஆப்பிள் நிறுவனத்தின் மிக முக்கியமான மற்றும் மிகப் பெரிய உற்பத்தி கூட்டாளியான பாக்ஸ்கான், இந்தியா சந்தைக்கு மட்டும் அல்லாமல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஸ்மார்ட்போன்களைச் சென்னை தொழிற்சாலையில் தயாரித்து வருகிறது.
பாக்ஸ்கான் பங்குகள் சரிவு
சென்னை தொழிற்சாலையில் உற்பத்தி முடங்கியதன் காரணமாகவும், தைவான் நாட்டிலும் கொரோனா தொற்று அதிகரித்துள்ள காரணத்தாலும் இந்நிறுவனப் பங்குகள் 6.2 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. வர்த்தக முடிவில் இதன் அளவு 5.31 சதவீதமாக இருந்தது.
ஆப்பிள் நிறுவனம்
ஆப்பிள் தனது சீன உற்பத்தி தளத்தை இந்தியாவிற்கு மாற்றியது மூலம் அதிகளவிலான வேலைவாய்ப்பு வர்த்தகம் ஆகியவை கிடைத்த நிலையிலும், கொரோனா தொற்று மூலம் இதன் பலனை முழுமையாக ஏற்க முடியாத நிலையில் இந்தியா உள்ளது.