இந்தியா முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதன் பரவலை தடுக்க கடந்த வாரம் திங்கட்கிழமையன்று பிற்பகலுக்கு மத்தியில் 21 நாள் ஊரடங்கு பற்றி அறிவிக்கப்பட்டது.
இதனால் ஒட்டுமொத்த இந்தியாவும் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டது எனலாம். இந்த நிலையில் அனைத்து தொழில் துறையும் முடங்கியுள்ளது.
இதனையடுத்து ஆக்ராவில் சுற்று பயண ஆப்ரேட்டரான டிராவல் பீரோவின் தலைவரும் மற்றும் தலைமை நிர்வாக இயக்குனருமான சுனில் குப்தா, இது குறித்து லைவ் மிண்டுக்கு அளித்துள்ள அறிக்கை மற்றும் என் எஸ் எஸ் சர்வேயினை பற்றித் தான் பார்க்க போகிறோம்.
காற்று வாங்கும் சுற்றுலா தளம்
கடந்த 2019ம் ஆண்டில் 10 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் தாஜ்மஹாலை பார்வையிட்டனர். ஆனால் பிப்ரவரி 2020 முதல் கொரோனாவின் தாக்கம் படையெடுக்க தொடங்கியது. இதன் காரணமாக அனைத்து துறையும் காற்று வாங்கி கொண்டுள்ளன. இதனால் சுனில் குப்தாவின் 145 ஊழியர்களும் வீட்டில் உள்ளதாகவும், அவரது நிறுவனத்தின் 80 கார்களும், 36 பெட்டிகளும் தூசி படிந்து காற்று வாங்கி வருகின்றன என்றும் கூறியுள்ளார்.
வேலையில்லாவிட்டாலும் சம்பளம்
மேலும் நீடித்து வரும் கொரோனா தாக்கத்தினால் நிச்சயம் செப்டம்பர் வரையில், சுற்றுலா பயணிகள் யாரும் வர மாட்டார்கள் என்றும் குப்தா கூறியுள்ளார். எனினும் வேலை இல்லாவிட்டாலும் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு வருமானம் இல்லாமல், சம்பளத்தை நான் தொடர்ந்து தொழிலாளர்களுக்க் செலுத்த வேண்டும் என்றும் குப்தா கூறியுள்ளார்.
சம்பளம் செலுத்த முடியாது
Travel Bureau பயண நிறுவனங்களின் மிகப்பெரிய பயண நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நெருக்கடியான காலத்தில் குப்தா தனது ஊழியர்களுக்கு சம்பளத்தினை செலுத்த முடியும் என்றாலும், வேறு பல ஆப்ரேட்டர்களால் இது முடியாது என்றும் கூறியுள்ளார். ஏற்கனவே ஆக்ராவில் உள்ள சுற்றுலா ஏஜென்சிகள் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளன.
மோசமான பாதிப்பு
ஆக இது சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் ஓட்டுனர்களுக்கு இது மிக மோசமான காலம் தான். இவர்கள் மட்டும் அல்ல, சுற்றுலா வழிகாட்டிகள், பார்க்கிங் ஒப்பந்தகாரர்கள், கடைகளில் பணி புரியும் ஊழியர்கள், கிளீனர்கள், உணவக பணியாளர்கள், காய்கறிகள் மற்றும் இறைச்சி, பூ விற்பனையாளர்கள் என பல கடை நிலை ஊழியர்கள் பலர் உள்ளனர். இவர்கள் வழக்கமான நிலை இல்லாததால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
வாழ்வாதாரம் இழப்பு
மேற்கண்ட இந்த தொழிலாளர்கள் இந்த வைரஸின் தாக்கத்தினால், தங்களது வாழ்வாதாரத்தினை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அக்டோபர் 2020க்கும் அப்பால் தொழில் துறையில் பிரச்சனை நீடித்தால், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் 20 மில்லியனுக்கும் அதிகமான வேலைகளை இழக்க நேரிடும் என்றும் தொழில்துறை அமைப்பு சிஐஐ தெரிவித்துள்ளது.
ஆபத்தில் பல மில்லியன் வேலை
மேலும் பல சேவைத் துறை, உற்பத்தி துறை, உற்பத்தி அல்லாத கட்டுமான துறை போன்ற துறைகளும் இதனுடன் ஒத்திருக்கிறது. தேவை மற்றும் வினியோகத் தடைகள் காரணமாக குறைந்த வளர்ச்சி உருவாகும். இதனால் வேலை வாய்ப்பினை அதிகரிப்பதும் கடினமாகும். இது தற்போது நீடித்து வரும் நிலையில் தற்போது பணி புரியும் ஊழியர்களையும் இது பாதிக்கும். ஆக மொத்தம் 136 மில்லியன் வேலைகள் ஆபத்தில் உள்ளன.
விவசாயம் சாரா வேலைகள்
குறிப்பாக விவசாயம் சாரா வேலைகள் ஆபத்தில் உள்ளன. அதிலும் இந்தியாவில் மிகக் கடினமான மக்கள் தொகை இருக்கும் இந்த நிலையில் கொரோனாவின் தாக்கம் இருந்து வருகிறது. இது வேலைவாய்ப்பு நெருக்கடியை அதிகரிக்கும். இதே Adecco Group India நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜவுளி, மூலதன பொருட்கள், சிமெண்ட், உணவு பொருட்கள், உலோகம், பிளாஸ்டிக் ரப்பர் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட துறைகளில் 9 மில்லியன் வேலைகளை குறைக்க இது வழிவகுக்கும் என்று கூறியுள்ளது.
வாகனத்துறையில் பணி நீக்கம்
இது தவிர வாகனத் துறையிலும் பணி நீக்கம் தொடர்ந்து வருகிறது. ஆட்டொமொபைல் துறையில் மட்டும் ஒரு மில்லியன் வேலைகளைக் இழக்கக்கூடும். இது தவிர விமானத் துறையில் மட்டும் 6,00,000 வேலைகள் ஆபத்தில் உள்ளன. இதனால் ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் உள்ளவர்கள் மேலும் பிரச்சனைகளை சந்திக்கக் கூடும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஜவுளித்துறையில் பணி நீக்கம்
திருப்பூர் போன்ற ஜவுளித் துறைகளில் பல லட்சம் பேர் வேலையிழக்கக்கூடும். அதிலும் பெரும்பாலானவர்கள் அங்கு தினக்கூலிகளாக இருக்ககூடும். மேலும் இங்கு ஆயிரணக்கனக்கான ஏற்றுமதி நிறுவனங்களும் சிறு நிறுவனங்களும் உள்ளன. ஆக கொரோனாவால் இங்கு ஏற்றுமதி ஆர்டர்கள் குறையும் போது அவர்களில் பல ஆயிரம் பேர் வேலை இழக்கும் நிலை உள்ளது. இந்தியாவின் ஜவுளித்துறையில் ஒட்டுமொத்தமாக 18 மில்லியன் பேர் பணியாற்றி வருகின்றனர். ஆக இவர்களில் பெரும்பாலானோர் வேலை இழக்கும் அபாயம் உள்ளது.
ஏற்றுமதி துறை
இதே போல் தோல் துறை, காலணி ஏற்றுமதியார்கள் அதை சார்ந்த குடிசை தொழிலாளர்கள் என அரை மில்லியனுக்கும் அதிகமான வேலைகள் அபாயத்தில் உள்ளன. உற்பத்தி துறையினை பொறுத்த வரையில் இந்தியாவில் 56.4 மில்லியன் பேர் பணியாற்றி வருவதாகவும், இதே உற்பத்தி அல்லாத துறைகளான கட்டுமானம், சுரங்கம், மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட துறைகளில் 59 மில்லியன் பேர் பணியாற்றியும் வருகின்றனர்.
சேவைத் துறை
இதே சேவைத் துறை தான் இந்தியாவின் மிகப்பெரிய தொழிலாளர்களை கொண்டுள்ள துறையாக கருதப்படுகிறது. இங்கு சுமார் 144.4 மில்லியன் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆக கொரோனாவின் தாக்கத்தினால் மொத்தம் 136 மில்லியன் வேலைகள் ஆபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. ஆக மக்களை இந்த கொரோனாவின் பிடியில் இருந்தும், அதன் பின் வரவிருக்கும் நெருக்கடியில் இருந்தும் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.