உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த காரணத்திற்காக ரஷ்யா மீது தடை விதித்த பல நாடுகளில் நெதர்லாந்து-ம் ஒன்று. ரஷ்ய பணக்காரர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு ஐரோப்பிய நாடுகள் மிகவும் முக்கிய வர்த்தகப் பகுதிகளாக இருக்கும் நிலையில் பல நாடுகளில் வீட்டு, கார், கப்பல், முதலீடு, நிறுவனங்கள் எனப் பல சொத்துகளை வைத்துள்ளனர்.
போர் மூலம் விதித்த தடையைப் பயன்படுத்திப் பல நாடுகள் தத்தம் நாடுகளில் இருக்கும் ரஷ்ய மக்கள் மற்றும் நிறுவனங்களின் சொத்துக்களைக் கைப்பற்றியுள்ளனர். இதில் நெதர்லாந்து முக்கியமான நாடாக விளங்குகிறது.
14 ஆடம்பர கப்பல்
ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளின் ஒரு பகுதியாக மொத்தம் 14 ஆடம்பர கப்பல்களை நெதர்லாந்து சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டதாக நெதர்லாந்து அரசாங்கம் புதன்கிழமை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தது உள்ளது.
நெதர்லாந்து
நெதர்லாந்து சுங்க அதிகாரிகள் கைப்பற்றிய இந்த 14 கப்பல்களில், 12 கப்பல்கள் ஐந்து கப்பல் கட்டும் தளங்களில் கட்டுமானத்தில் உள்ளன என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் Wopke Hoekstra நெதர்லாந்து பாராளுமன்றத்திற்கு எழுதிய 10 பக்க கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளதாக AFP தெரிவித்துள்ளது.
ரஷ்ய பணக்காரர்கள்
14 கப்பல்களில் மீதமுள்ள இரண்டு ஆடம்பர கப்பல்கள் பராமரிப்பில் உள்ள கப்பல்கள் என்றும் நெதர்லாந்து பாராளுமன்றத்தில் விளக்கம் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த 14 கப்பல்கள் ரஷ்ய பணக்காரர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்குச் சொந்தமானவை.
ஏற்றுமதி
நெதர்லாந்து அரசு கைப்பற்றிய இந்த 14 ஆடம்பர கப்பல்கள் திரும்ப அளிக்கப்படமாட்டாது, ஏற்றுமதி செய்யப்படமாட்டாது என அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் Wopke Hoekstra தெரிவித்துள்ளார். மேலும் இந்த 14 கப்பல்களின் உரிமையாளர்கள் யார் என்பதற்கான விபரத்தை நெதர்லாந்து அரசு வெளியிடவில்லை.