டெக் நிறுவனங்கள் கொத்து கொத்தாக ஊழியர்களை பணிநீக்கம் செய்கின்றன. அமேசானில் தொடங்கி கூகுள், மைக்ரோசாப்ட், ஆராக்கிள் என பெரிய நிறுவனங்கள் தொடங்கி சிறு நிறுவனங்கள் வரை ஆயிரக்கணக்கில் ஊழியர்களை பணிநீக்கம் செய்கின்றன.
திடீரென ஒரு மின்னஞ்சல் அனுப்புவது, மீட்டிங் வைப்பது, மனித வள துறை அதிகாரிகளுடனான சந்திப்பு என எப்போது ஒருவரது வேலை பறி போகிறது என்பதை கணிக்க முடியாத சூழல் தான் டெக் நிறுவனங்களில் காணப்படுகிறது. அந்த் ஒரு மின்னஞ்சல் வரும் வரை தான் வேலைக்கு உத்தரவாதம். அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த Hy-Vee என்ற நிறுவனம், இந்தியாவில் இருந்த தனது பொறியியல் பிரிவையே திடீரென மூடியுள்ளது. இதனால் அந்த பிரிவில் பணிபுரிந்த 150 ஊழியர்கள் ஒரே மீட்டிங்கில் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இந்நிறுவனத்தில் வேலை செய்து வந்த ஊழியர் ஒருவர் ரெட்டிட் பக்கத்தில் இந்த தகவலை பகிர்ந்துள்ளார். இரவு 9 மணிக்கு மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் வழியாக மீட்டிங் நடந்துள்ளது. அப்போது இந்தியாவில் செயல்படும் பிரிவை மூடுவதாகவும் அனைவரும் வேலையை விட்டு நீக்கப்படுவதாகவும் அறிவித்து நிறுவனம் அதிர்ச்சியை தந்துள்ளது. எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது ஊழியர்களை பேரதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
இவ்வாறு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டால் அந்த ஊழியர்களுக்கு இழப்பீட்டு தொகையோ (severance package) அல்லது நோட்டீஸ் காலத்திற்கான ஊதியமோ வழங்கப்படும். ஆனால் இந்த நிறுவனம் 150 ஊழியர்களுக்கும் எந்த ஒரு நிதி இழப்பீடு வழங்கவில்லை என பாதிக்கப்பட்ட ஊழியர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிறுவனத்தின் இந்திய பிரிவு பொறியியல் இயக்குனர் அமித் கோயல், இந்த தகவல் உண்மையானது என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். அவர் தனது குழுவில் திறமையான பொறியாளர்கள் வேலை செய்து வந்தனர் என்றும், அவர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை பெற்றுத்தர உதவுவதாகவும் தெரிவித்துள்ளார்.
சுமார் இரண்டு ஆண்டுகளாக நிறுவனத்தில் பணியாற்றியவர்கள் கூட எவ்வித முன்னறிவிப்புமின்றி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் நோட்டீஸ் பீரியட் ஊதியமாவது தந்திருக்க வேண்டும், சட்டப்படி அணுகுங்கள் என அறிவுரை தந்துள்ளனர்.
கார்ப்பரேட் நிறுவனங்கள் மனிதாபிமானமே இல்லாமல் திடீரென ஆயிரக்கணக்கான ஊழியர்களை இப்படி பணிநீக்கம் செய்கின்றன. அவர்களுக்கு கிடைக்க வேண்டிய குறைந்த பட்ச நிதி இழப்பீடு வழங்க கூட இந்நிறுவனம் முன் வராதது டெக் துறையில் பணிபுரியும் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications

