கடந்த மார்ச் 25, 2020 அன்று அதிகாலை 12.00 மணி முதல் பிரதமர் மோடி சொன்ன 21 நாள் ஷக் டவுன் தொடங்கிவிட்டது.
அத்தியாவசியத் தேவைகள் மற்றும் சேவைகள் கிடைக்கும் எனச் சொல்லி இருந்தது மத்திய அரசு.
ஆனால் எதார்த்தத்தில் பல மாநிலங்களில் மளிகை, உணவு, மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது.
பாஸ்
டெல்லி, குருகிராம் நொய்டா, அஹமதாபாத் போன்ற நகரங்களில் அத்தியாவசியப் பொருட்களை டெலிவரி செய்யும் அமேசான், ஃப்ளிப்கார்ட், பிக் பாஸ்கெட் குரோஃபர்ஸ், ஸ்விக்கி, சொமேட்டோ போன்ற டெலிவரி பாய்களுக்கு தனி பாஸ் கொடுப்பது போல சில யோசனைகளைச் செயல்படுத்தி ஹோம் டெலிவரிகளைச் செய்ய வைத்திருக்கிறார்களாம். ஆனால் பெரும்பாலான மற்ற நகரங்களில் கதையே வேறு..!
டெலிவரி சிக்கல்
மத்திய அரசு அத்தியாவசியப் பொருட்களை டெலிவரி செய்யலாம் எனச் சொன்ன பின்னும், நடைமுறையில் எல்லாமே தலை கீழாக இருக்கிறது. பிக் பசார் ஊழியர்கள் தங்கள் கடைகளுக்குச் சென்று கொண்டு இருந்த போது, ஊழியர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து வைத்து, ஊழியர்களை அடித்து தொல்லை கொடுத்ததாக எல்லாம் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
பிக் பாஸ்கெட்
பிக் பசாரில் பிரச்சனை இப்படி வந்தது என்றால், பிக் பாஸ்கெட்டில் தெளிவான வழிகாட்டுதல் இல்லாததால், தன் சேவையை முற்றிலும் நிறுத்திக் கொண்டது. அதன் பின், லோக்கல் அதிகாரிகள் மற்றும் அரசு தரப்பினர்களுடன் பேசி ஒரு சுமூக முடிவுக்கு வந்த பின், இந்தியாவின் சில பகுதிகளில் மட்டும் தன் டெலிவரி சேவையைத் தொடங்கியது. இன்னும் சென்னை போன்ற நகரங்களில் டெலிவரி சேவையைத் தொடங்கவில்லை.
மில்க் பாஸ்கெட்
அதே போல மில்க் பாஸ்கெட் (MIlk Basket) என்கிற நிறுவனம் தன் பால் மற்றும் பழங்களை டெலிவரி செய்ய ஆள் இல்லாமல், சுமாராக 15,0000 லிட்டர் பால் மற்றும் 10,000 கிலோ பழங்களை குப்பைத் தொட்டியில் கொட்டியதாம். காரணம் சுமாராக 50 பகுதிகளில் (Community), மில்க் பாஸ்கெட்டின் டெலிவரி பாய்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாம்.
ஃப்ளிப்கார்ட்
சில தினங்களுக்கு முன்பே ஃப்ளிப்கார்ட் தன் டெலிவரி சேவைகளை நிறுத்திக் கொண்டதாகச் சொன்னது. தன் சப்ளை செயின் சரியாக இருக்கும், டெலிவரி பாய்கள் அதிகாரிகளால் எந்த சிக்கலுக்கும் உள்ளாக மாட்டார்கள் என அரசு தரப்பில் இருந்து உறுதிப்படுத்திக் கொண்ட பின், அத்தியாவசியப் பொருட்களுக்கு தன் டெலிவரி சேவைகளை தொடங்க இருப்பதாகச் சொன்னது.
நடவடிக்கை
இப்படி அத்தியாவசியப் பொருட்களை டெலிவரி செய்து உதவுபவர்களை காவலர்கள் தாக்காமல் இருக்க, மத்திய உள் துறை அமைச்சகம், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் டெரிட்டரிகளில் ஒரு
நிலையான இயக்க நெறிமுறை (Standard Operating Protocol) கொண்டு வரச் சொல்லி இருக்கிறார்கள். அதோடு அத்தியாவசியப் பொருட்களை டெலிவரி செய்வதற்கு உதவி எண்கள், அத்தியாவசியப் பொருட்கள் டெலிவரி விவகாரங்களை ஒருங்கிணைக்க நோடல் அதிகாரிகளை எல்லாம் நியமிக்கச் சொல்லி இருக்கிறார்களாம்.
ரயில்வே
25-ம் தேதி, ஷட் டவுனின் முதல் நாளிலேயே, ரயிவேஸில் சுமாராக 3-ல் ஒரு பகுதி சரக்கு குறைவாகத் தான் போக்குவரத்து ஆகி இருக்கிறதாம். காரணம் சரக்குகளை ஏற்ற இறக்க போதுமான கூலித் தொழிலாளர்கள் இல்லையாம். அதற்கு முந்தைய நாள் 45,000 பெட்டிகள் சரக்கு போக்குவரத்து ஆனது என்றால், ஷட் டவுன் முதல் நாளன்று 32,000 பெட்டிகள் தான் போக்குவரத்து ஆகி இருக்கிறதாம்.
விதி விலக்கு
ரயில்வேஸில் சரக்கு போக்குவரத்து பாதிக்கபடாமல் இருக்க, ரயில்வே சரக்கு போக்குவரத்தை விதி விலக்காக மத்திய அரசு குறிப்பிட்டு இருந்தார்கள். இருப்பினும் ரயில்வேஸ் வழியாக, சரக்கு பெரிய அளவில் நகரவில்லை என்பது தான் எதார்த்த உண்மையாக இருக்கிறது.
அரசு தலையீடு
மக்களுக்குத் தேவையான அடிப்படை மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகள் கிடைப்பதை உறுதி செய்யுமாறு மத்திய உள் துறை அமைச்சகம், மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறதாம். இப்படி ஒவ்வொன்றுக்கும் மத்திய அரசு தலையிட்டு தான், அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றால் நிலைமை எப்படி இருக்கிறது என பார்த்துக் கொள்ளுங்கள்.
மத்திய மாநில அரசுகள்
கூடிய விரைவில் மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை, மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒருங்கிணைந்து உறுதி செய்ய வேண்டும். மத்திய அரசு ஒரு பக்கமும், மாநில அரசு ஒரு பக்கமும் மக்களை அலைக்கழித்தால், பிறகு மக்கள் அரசை மதிக்காமல் வெளியில் நடமாடத் தொடங்கி விடுவார்கள். தயவு செய்து அரசு இதை சீரியஸாக பார்கக் வேண்டும்.