நம் நாட்டில் இருந்து ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பேர் வேலைக்காக அமெரிக்கா, அரபு நாடுகள் உள்பட பல்வேறு நாடுகளுக்கு செல்கின்றனர். அங்கு நல்ல சம்பளம் மற்றும் வசதி வாய்ப்புகள் கிடைத்தால் அந்நாட்டு குடியுரிமை பெற்று அங்கேயே செட்டிலாகி விடுகின்றனர். இது வழக்கமான நிகழ்வுதான்.
அதேசமயம் ஒரு நபர் இந்திய குடியுரிமை கொண்டு இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கும் சூழ்நிலையில், வேறொரு நாட்டின் குடியுரிமை பெற்று அந்நாட்டின் பாஸ்போர்ட்டைப் பெற்றிருந்தால் அவர்கள் உடனடியாக இந்திய பாஸ்போர்ட்டை அரசிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். இந்திய குடியுரிமையை துறந்த பிறகு, பாஸ்போர்ட் சரண்டர் அல்லது திரும்ப அளித்தல் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க வேண்டியது கட்டாயம்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் அண்மையில் பா.ஜ.க. எம்.பி. சுஷில் குமார் மோடி, கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் தானாக முன்வந்து பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைத்தவர்களின் எண்ணிக்கை குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். இதனையடுத்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் இது தொடர்பான புள்ளிவிவரங்களை அளித்துள்ளது.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகள் படி, 2014 முதல் 2022ம் ஆண்டு வரையிலான 9 ஆண்டுகளில் பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைத்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் டெல்லி சேர்ந்தவர்கள் என்றும், டெல்லியை சேர்ந்த 60,414 பேர் தங்கள் பாஸ்போர்ட்டை சரண்டர் செய்து விட்டு வெளிநாட்டில் செட்டிலாகி விட்டனர்.
டெல்லிக்கு அடுத்ததாக பஞ்சாப்பை சேர்ந்த 28,117 பேர் பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைத்துள்ளனர். இதேபோல் 22,300 குஜராத்திகள் தங்களது பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைத்ததால் அந்த மாநிலம் மூன்றாவது இடத்தில் உள்ளது.
அதேசமயம் கடந்த பத்தாண்டுகளில் குறைந்தபட்சமாக அந்தமான் அண்ட் நிக்கோபார் பகுதியை சேர்ந்த 16 பேர் மட்டுமே இந்திய பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைத்துள்ளனர். அடுத்ததாக லட்சத்தீவு மற்றும் டாமன் டையூ, சிக்கிம் ஆகியவை உள்ளன. இந்த பகுதியை சேர்ந்தவர்கள் முறையே 33 மற்றும் 34 பேர் வெளிநாட்டு பாஸ்போர்ட்டை பெற்றதையடுத்து இந்திய பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைத்துள்ளனர்.
பாஸ்போர்ட் சரண்டர் செய்தல் அதிகரித்துள்ள அதேவேளையில், கடந்த 11 ஆண்டுகளில் இந்திய குடியுரிமையை துறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. 2011ல் 1,22,819 பேர் இந்திய குடியுரிமையை துறந்து இருந்தனர். இது 2022ல் 2,25,620ஆக அதிகரித்துள்ளது. 2011 முதல் இதுவரை 17.50 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications