பெங்களூருக்கு ஐடி நகரம் என்ற பெயர் இருப்பது போல் கான்கிரீட் காடுகள் என்ற பெயரும் உண்டு, திரும்பும் பக்கம் எல்லாம் வான் அளவு உயர்த்த அடுக்குமாடி குடியிருப்புகள், டெக் பார்க்குகள் என ஒட்டுமொத்த பெங்களூர் நகரமும் அடுக்குமாடி கட்டிடங்களாக மாறியுள்ளது.
மக்களும் அதிகளவில் அப்பார்ட்மென்ட் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளை தான் விரும்புகின்றனர். ஆனால் அப்படி கட்டப்படும் வீடுகள் சில தரம் குறைவாகவும், சரியாக திட்டமிடப்படாமல் இருப்பது பெரும் பிரச்சனையாக மாறி வருகிறது.

சில வருடங்களுக்கு முன்பு பெங்களூரில் ஹென்னூர் பகுதியில் கட்டுமானத்தில் இருந்த ஒரு அப்பார்ட்மென்ட் வீடு சீட்டுக்கட்டுப்போல் சரிந்து விழுந்ததில் பெரும் சேதம் ஏற்பட்டது, இதை தொடர்ந்து கோரமங்களாகவில் 5 மாடி கட்டிடம் சாய துவங்கிய நிலையில் பெங்களூர் நிர்வாக அதிகாரிகள் ஆய்வு செய்து கட்டுமானத்தை இடித்தனர்..
இதன் நீட்சியாக தற்போது ஹர்லூர் என்னும் பகுதியில் 18 மாடி கொண்ட ஆடம்பர அப்பார்ட்மென்ட் கட்டிடத்தில் 49 வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டு தற்போது மக்கள் குடியேற தயராக இருக்கும் வேளையில் கட்டிடம் சாய துங்கியுள்ளது. இது வீட்டை வாங்கிய உரிமையாளர்களுக்கு மட்டும் அல்லாமல் மக்கள் குடியேற அனுமதி கொடுத்த அரசுக்கும் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
இந்த நிலையில், பெங்களூர் நிர்வாகம் GBA இக்கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்டு உள்ளது.
தெற்கு பெங்களூர் பகுதியில் ஹரலூர் - கூட்லு பகுதியில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் அப்பார்ட்மென்ட் வீட்டு திட்டம் தான் இந்த SNN Raj Etternia, 15 டவர்களில் சுமார் 970 வீடுகள் கட்டப்பட்டும் மாபெரும் திட்டமாகும்.
இந்த நிலையில் இத்திட்டத்தின் பிளாக் E-3 என்ற 49 ஆடம்பர வீடுகளை கொண்ட கட்டிடத்தின் கட்டமைப்பு பாதிக்கப்பட்டு சாய துவங்கியுள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் 3 மாதங்களுக்கு முன்பே இந்த கட்டிடத்தில் மக்கள் குடியேறலாம் என கிரேட்டர் பெங்களூர் அத்தாரிட்டி (GBA) Occupancy Certificate (OC) கொடுத்துள்ளது.
இதன் பின்பு இந்த டவரில் இருக்கும் 49 வீடுகளும் விற்கப்பட்டு உள்ளது, ஒவ்வொரு வீடும் 1-5 கோடி ரூபாய் மதிப்பில் விற்கப்பட்டு, Occupancy Certificate (OC) கிடைத்தால் மக்கள் குடியேற தயாராகினர். இந்த நிலையில் தான் இக்கட்டிடம் சாய துவங்கியுள்ளது, அதை ஆய்வு GBA நிர்வாக கமிஷ்னர் மகேஷ்வர் ராவ் கூறுகையில் இக்கட்டிடம் SNN Raj நிர்வாகமே இடிக்க உள்ளது. இதற்கான பணிகள் அடுத்த 2 வாரத்தில் துவங்கும் என தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து SNN Raj குரூப் நிர்வாகம் கூறுகையில், கட்டிடத்தை உள்நிர்வாகம் ஆய்வு செய்தது கட்டமைப்பில் பிரச்சனை இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும் எங்களுடைய உள்நிர்வாக ஆய்வில் மண் பரிசோதனை செய்யப்பட்ட நிறுவனம் தவறான முடிவுகளை கொடுத்துள்ளது.
இதன் அடிப்படையில் திட்டமிடப்பட்ட கட்டுமானத்தின் கட்டமைப்பு பாதிக்கப்பட்டு தற்போது சாய துவங்கியுள்ளது, எனவே கட்டிடத்தை முழுமையாக இடித்து திரும்பவும் புதிய கட்டிடத்தை கட்ட உள்ளோம் என தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications