இந்திய பட்ஜெட் திருவிழாவில் மிக முக்கியமான விஷயம், இந்த இந்திய பொருளாதார சர்வே தான். இந்த சர்வே விவரங்களை வெறுமனே கடந்த காலத்தில் என்ன நடந்தது என்று மட்டும் பார்க்காமல், அடுத்த ஆண்டுகளில் வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடுபவைகள்.
இன்று முதன்மைப் பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியனால் தயார் செய்யப்பட்ட இந்திய பொருளாதார சர்வே பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு இருக்கிறது. இந்த இந்திய பொருளாதார சர்வேயில் கவனிக்க வேண்டிய, முக்கிய விஷயங்களைத் தான் இங்கு பார்க்க இருக்கிறோம்.

7.9% வளர்ச்சி
கடந்த ஐந்து ஆண்டு காலங்களில், லைவ் ஸ்டாக் செக்டார் என்று சொல்லப்படும், ஆடு, மாடு கோழி போன்ற உயிரினங்களின் மூலம் வரும் வருமானம், ஆண்டுக்கு 7.9 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறதாம். அதோடு கோடிக் கணக்கான விவசாயிகளுக்கு, இந்த உயிரினங்கள் வழியாக ஒரு இரண்டாவது வருமானம் வந்து கொண்டு இருக்கிறதாம்.
மரங்கள் மற்றும் வனம்
இந்தியா போன்ற ஒரு வளரும் நாட்டில் வளர்ச்சிக்கான வேலைகள் ஜரூராக நடந்து கொண்டு இருக்கும் போதும், இந்தியாவில் மரங்கள் மற்றும் வன அடர்த்தி அதிகரித்து இருப்பதாகச் சொல்கிறது இந்த இந்திய பொருளாதார சர்வே. தற்போது இந்தியாவில் 80.73 மில்லியன் ஹெக்டேர் நிலம் காடுகளாலும் மரங்களாலும் நிரம்பி இருக்கிறதாம். ஒட்டு மொத்த இந்திய நிலப்பரப்பில் 24.56 % நிலம் காடு மற்றும் மரங்களால் நிறைந்து இருக்கிறதாம்.
ஆயுஸ்மான் பாரத்
உலகின் மிகப் பெரிய ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டமான ஆயுஸ்மான் பாரத் மூலம், 14-01-2020 கணக்குப் படி, 28,005 சுகாதார மையங்கள் நாடு முழுக்க அமைக்கப்பட்டு இருக்கிறதாம். 2013 - 14-ம் ஆண்டு காலங்களில் மருத்துவத்துக்கு தங்கள் கை காசை செலவழிக்கும் தொகை 64.2 சதவிகிதத்தில் இருந்து கடந்த 2016 - 17-ல் 58.7 சதவிகிதமாக குறைந்து இருப்பதாகச் சொல்கிறது இந்திய பொருளாதார சர்வே.
புதிய வேலைகள்
2011 - 12 முதல் 2017 - 18 ஆண்டு காலத்துக்குள் சுமாராக 2.62 கோடி புதிய வேலை வாய்ப்புகள் கிராம புறங்கள் மற்றும் நகர் புறங்களில் உருவாக்கி இருப்பதாகச் சொல்கிறது இந்திய பொருளாதார சர்வே. முறையாக கூலி அல்லது சம்பளம் பெறும் ஊழியர்களின் அளவு கடந்த 2011 - 12 நிதி ஆண்டில் 18 சதவிகிதமாக இருந்ததாம். ஆனால் இந்த 2017 - 18 நிதி ஆண்டில் 23 சதவிகிதமாக அதிகரித்து இருக்கிறதாம். கிராம புறங்களில் 1.21 கோடி புதிய வேலைகளும், நகர் புறங்களில் 1.39 கோடி வேலைகளும் உருவாக்கப்பட்டு இருக்கிறதாம்.
திறந்த வெளியில் மலம் கழிப்பது
இந்தியாவின் இருக்கும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் டெரிட்டரிகள் எல்லாமே, திறந்த வெளியில் மலம் கழிக்கும் பழக்கம் அறவே இல்லை (Open Defecation Free) எனச் சொல்லி இருக்கிறது இந்திய பொருளாதார சர்வே.


Click it and Unblock the Notifications