பொதுத்துறை வங்கிகள் அடுத்தடுத்து தனியார்மயமாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில் வங்கி ஊழியர்கள் தங்களது வேலைக்கான உத்தரவாதம் மற்றும் அரசு வேலையில் கிடைக்கும் இதர பலன்களை இழக்க நேரிடம் என்ற அச்சத்தில் வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இன்று (டிசம்பர் 16) துவங்கியுள்ள வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் நாளையும் நீட்டிக்க உள்ள காரணத்தால், நாடு முழுவதும் வங்கி சேவைகள் பாதிக்கப்படும்.
UFBU அமைப்பு
இந்தியா முழுவதும் நடக்கும் இந்த மாபெரும் வங்கி ஊழியர்கள் போராட்டத்தை United Forum of Bank Unions (UFBU) தலைமையிலும், அதன் கீழ் இருக்கும் 7 வங்கி அமைப்புகளும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளது. இதோடு இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஊழியர்களும் ஈடுபட்டு உள்ளனர்.
9 லட்சம் வங்கி ஊழியர்கள்
மத்திய அரசின் வங்கி தனியார்மயமாக்கல் திட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் சுமார் 9 லட்சம் வங்கி ஊழியர்கள் இன்று 2 நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் நாட்டின் அனைத்து வங்கிகளும் முழுமையாக இயங்காத நிலை ஏற்பட உள்ளது.
திமுக கட்சி
தமிழ்நாட்டின் திமுக கட்சி வங்கி ஊழியர்களின் போராட்டத்திற்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளது. திமுகப் பொதுச் செயலாளரான துரைமுருகன் வங்கி ஊழியர்களின் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக் கூறியும், போராட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க உள்ளதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்குப் பொதுத்துறை வங்கிகள் உருவாகி வரும் வாராக் கடன் பெரும் சுமையை உருவாக்கியுள்ளது. இந்தப் பிரச்சனையைக் குறைக்க ஏற்கனவே வங்கிகள் மறுசீரமைக்கப்பட்டு இணைக்கப்பட்டது, இதைத் தொடர்ந்து தற்போது வங்கிகளைத் தனியார்மயமாக்கும் பணியில் மத்திய அரசு தீவிரம் காட்டத் துவங்கியுள்ளது. இதற்கான அறிவிப்பை பட்ஜெட் 2021-22 கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
7 வங்கி அமைப்புகள்
இன்று வங்கி தனியார்மயமாக்கல்-ஐ எதிர்த்து நாடு முழுவதும் UFBU அமைப்பின் கீழ் இருக்கும் AIBEA, AIBOC, NCBE, AIBOA, BEFI, INBEF மற்றும் INBOC ஆகிய 7 அமைப்புகளைச் சேர்ந்த 9 லட்சம் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
2 நாள் வங்கி மூடல்
இரண்டு நாள் வங்கி மூடப்பட்டாலும் அனைத்து டிஜிட்டல் வங்கி சேவைகளும், ஏடிஎம், தனியார் வங்கிகளும் முழுமையாக இயங்கும். இதனால் தினசரி வங்கி சேவைகள் எந்த விதத்திலும் பாதிக்காது, ஆனால் வங்கி சென்று பெற வேண்டிய சேவைகள் இதன் மூலம் பாதிக்கப்படும்.