ட்விட்டரில் இனியும் இருக்கலாமா? வேண்டாமா? என்ற பதற்றத்தின் மத்தியில் ஊழியர்களும், ட்விட்டர் சேவை இனி இருக்குமா? இருக்காதா? என்ற கேள்விக்கு மத்தியில் எலான் மஸ்கின் ட்வீட், பலருக்கும் குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இது பலரையும் சமாதான படுத்த போடப்பட்டதா? அல்லது உண்மை என்ன? அப்படி என்ன தான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்? வாருங்கள் பார்க்கலாம்.
பணி நீக்கம்
பில்லியனர் ஆன எலான் மஸ்க் 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டரை கையகப்படுத்தியதில் இருந்தே பற்பல அதிரடியான மாற்றங்களை செய்து வருகின்றார். ஆரம்பத்திலேயே ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரி உட்பட 4 முக்கிய தலைமை பொறுப்பு வகித்தவர்களை பணி நீக்கம் செய்தார். அதன் பிறகு மொத்த ஊழியர்களில் பாதிக்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்தார்.
ட்விட்டர் எதிர்காலம்?
அதன் பிறகு படிப்படியாக பல அதிரடியான மாற்றங்களை செய்து வருகின்றனர். ட்விட்டரை வாங்கிய சில நாட்களிலேயே இதுபோன்ற பல நடவடிக்கைகள் எடுக்கப்படும். அவை சரிபட்டு வந்தால் அப்படியே இருக்கும். இல்லையெனில் அவை மீண்டும் மாற்றப்படும் என கூறியிருந்தார். அதற்கேற்ப தான் ஒவ்வொரு நடவடிக்கையும் இருந்து வருகின்றது. இதற்கிடையில் தான் ட்விட்டரின் எதிர்காலம் என்ன? இருக்குமா? இருக்காதா? #RIPtwitter என பதிவிட்டு வந்தனர்.
இவ்வளவா?
இதற்கிடையில் பலவிதமாக பேசியவர்களின் வாயை அடைக்கும் விதமாக, எலான் மஸ்க் பதிவிட்டார். அதில் ஒரு நொடிக்கு 20,000 ட்வீட்டிகள் பகிரப்பட்டு சாதனை படைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதற்கு பிஃபா உலக கோப்பை கால்பந்து 2022 ட்விட்டரின் இந்த புதிய உச்சத்திற்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இது ட்விட்டர் பயன்பாட்டினை அதிகரிக்க வழிவகுத்துள்ளது.
சாதனை படைத்த ட்விட்டர் அணியினர்
ட்விட்டர் அணி ஒரு வரலாற்று சாதனையை படைத்துள்ளது. வரலாறு காணாத அளவு பயனர்களை நிர்வகித்துள்ளது. இது ட்விட்டர் அணி நன்றாக பணிபுரிந்துள்ளது என பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன் எலான் மஸ்கின் கடினமான மெயிலை பார்த்த பிறகு ஆயிரக்கணக்கான ஊழியர்கள் தாங்களாகவே முன் வந்து ராஜினாமா செய்து வந்தனர். இந்த நிலையில் ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ளும் விதமாக இத்தகைய அறிவிப்பினை எலான் மஸ்க் கொடுத்திருக்கலாமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
ஊழியர்களுக்கு பாராட்டு
மற்றொரு ட்வீட்டில் ட்விட்டர் குழுவின் வேலையினை பாராட்டியுள்ள எலான் மஸ்க், பல ஊழியர்களும் ட்விட்டரில் இரவு பணியாற்றி வருகின்றனர். அவர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு என தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க் முன்னதாக அனுப்பிய மெயில்களால் அப்செட் ஆன ஊழியர்களை, இயல்பு நிலைக்கு கொண்டு வர இப்படி செய்கிறாரா? அல்லது தனது பதிவினை மீண்டும் உறுதிபடுத்தும் விதமாக இத்தகைய பதிவினை போட்டுள்ளரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
சலுகைகள் நிறுத்தம்
சில தினங்களுக்கு முன்பு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சலுகைகளையும் இடை நிறுத்தம் செய்துள்ளார். இதனை ட்விட்டரின் நிதி நிலை மேம்படும்போது மீண்டும் வழங்கப்படும் என தெரிவித்தார். டெக் ஊழியர்களுக்கு வாரத்தில் இரு நாள் விடுமுறை, தினசரி எட்டு மணி நேரம் வேலை என கொடுத்து வரும் நிலையில், நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் கிளம்பிக் கொள்ளலாம் என கூறினார். இது ஊழியர்கள் மத்தியில் கடுப்பை கிளப்பி இருந்தாலும், ட்விட்டரின் இந்த வெற்றி நிலையானது அல்ல என ஒரு தரப்பு கூறுகின்றது.
இது தற்காலிகமானதா?
ஏனெனில் அதற்காக அடிப்படை கட்டமைப்பை இன்னும் ட்விட்டர் உருவாக்கவில்லை. தற்போது பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடந்து வரும் நிலையில், இது உலகெங்கிலும் கால்பந்து பிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆக உலகெங்கிலும் ட்விட்டர் பயன்பாடு என்பது கணிசமாக அதிகரித்துள்ளது என கூறப்படுகிறது. ஆக இந்த போட்டிக்கு பிறகு இந்த நிலை நீடித்தால் அது எலான் மஸ்கின் நடவடிக்கைக்கு வெற்றி தான் எனலாம்.