பிரதமர் நரேந்திர மோடி, மே 12, 2020 அன்று இரவு, கொரோனா வைரஸ் லாக் டவுன் தொடர்பாக மக்களிடம் பேசினார்.
அப்போது, இந்தியப் பொருளாதாரத்தை மீட்டு எடுக்க, சுமாராக 20 லட்சம் கோடி ரூபாய்க்கு திட்டங்கள் வகுக்கப்பட்டு இருப்பதாகச் சொன்னார்.
அதில் ஏற்கனவே அறிவித்து இருக்கும் திட்டங்கள் மற்றும் ஆர்பிஐ கொடுத்த லிக்விடிட்டி பணம் + இனி அறிவிக்க இருக்கும் திட்டங்கள் எல்லாம் சேர்த்து தான் இந்த 20 லட்சம் கோடி என ஏ என் ஐ செய்தி நிறுவனம் சொன்னது.
10 % ஜிடிபி
உலக வங்கியின் தரவுகள் படி இந்தியாவின் மொத்த ஜிடிபி 2.7 ட்ரில்லியன் டாலர். இதை இந்திய ரூபாய் மதிப்பில் கணக்கிட்டால் சுமாராக 202 லட்சம் கோடி ரூபாய் வருகிறது. இந்தியா, 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு பல வழிகளில் பல திட்டங்களை அறிவித்து இருப்பது, இனி அறிவிக்க இருக்கிறது. எனவே இந்தியா தன் மொத்த ஜிடிபியில் 10 %-த்தை கொரோனா திட்டங்களுக்கு ஒதுக்கி இருப்பதாகச் சொல்கிறார்கள்.
எப்படி வருகிறது
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சொன்னது போல, இந்த 20 லட்சம் கோடி ரூபாய் எப்படி வருகிறது என்பதை இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை விரிவாக விளக்கி இருக்கிறது. அதை நாமும் இங்கு விரிவாகப் பார்ப்போம். முதலில் பழைய கணக்கில் இருந்து தொடங்குவோம்.
1.7 லட்சம் கோடி
கொரோனா வைரஸ் லாக் டவுன் அறிவித்த உடனேயே, மார்ச் 27, 2020 அன்று, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 1.7 லட்சம் கோடிக்கு பல நலத் திட்டங்களை அறிவித்தார். ஆக முதலில் இதை 20 லட்சம் கோடியில் இருந்து கழித்துவிடுவோம். மீதி 18.3 லட்சம் கோடி ரூபாய் இருக்கிறது.
ஆர்பிஐ கணக்கு
மத்திய ரிசர்வ் வங்கி தன் Cash Reserve Ratio விகிதத்தை குறைத்தது, Marginal Standing facility-யை அதிகரித்தது, TLTRO 1 & 2 ஆபரேஷன் செய்தது, சிறப்பு லிக்விட்டி வசதிகளை மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு வழங்கியது, மற்ற லிக்விடிட்டி ஆபரேஷன்கள்... என எல்லாம் சேர்த்து மொத்தம் 8.04 லட்சம் கோடி ரூபாய் அறிவித்து இருக்கிறார்கள்.
10 லட்சம் கோடி தான்
ஆக 18.3 லட்சம் கோடி ரூபாயில், மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்த 8.04 லட்சம் கோடி ரூபாயை கழித்தால் மீதி 10.26 லட்சம் கோடி ரூபாய் தான் இருக்கின்றன. இந்த 10.26 லட்சம் கோடி ரூபாய்க்கு தான் இன்று மாலை நம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டங்களை அறிவிக்க வாய்ப்பு இருக்கிறது என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ்.
4.2 லட்சம் கோடி தான்
சில தினங்களுக்கு முன்பு தான் மத்திய அரசு, 12 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்க இருப்பதாகச் செய்திகள் வெளியாயின. அதில் 7.8 லட்சம் கோடி மற்ற இத்தியாதி செலவுகளுக்கு போக வாய்ப்பு இருக்கிறது. எனவே, மீதமுள்ள 4.2 லட்சம் கோடி ரூபாய் தான், அதிகபட்சமாக இந்த நிதி ஆண்டில், பண உதவியாக அரசிடம் இருந்து வர வாய்ப்பு இருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் சொல்கிறது.
விளக்கம்
அதாவது ஏழை மக்கள் மற்றும் கொரோனாவில் அதிகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மத்திய அரசு, வங்கிக் கணக்கில் பணத்தைப் போடுவது போன்ற பணம் சார்ந்த நடவடிக்கைகளை, அரசு 4.2 லட்சம் கோடி ரூபாய் வரை மட்டுமே செய்ய வாய்ப்பு இருக்கிறது என இந்திய எக்ஸ்பிரஸ் சொல்கிறது.
பயன்படுத்திக் கொள்ளலாம்
ஆனால், இந்த 4.2 லட்சம் கோடி ருபாயை, சரியான திட்டங்கள் வழியாக பயன்படுத்தினால், அது Multiplier Effect உடன் நம் இந்தியப் பொருளாதாரத்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் சொல்லி இருக்கிறார்கள். எது எப்படியோ இந்தியப் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தினால் சரி.
5-வது இடம்
Ceyhun Elgin Columbia பல்கலைக்கழகத்தின் கணக்குப் படி, உலகிலேயே ஜப்பான் தான், தன் நாட்டின் மொத்த ஜிடிபியில் 21.1 %-க்கு பணத்தை கொரோனா ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு அறிவித்து இருக்கிறார்கள். அமெரிக்கா, தன் மொத்த ஜிடிபியில் 13 %-த்தை அறிவித்து இருக்கிறார்கள். இந்தப் பட்டியலில் இந்தியா இந்த 20 லட்சம் கோடியை அறிவித்து (ஜிடிபியில் 10 %), 5-வது இடத்தைப் பிடித்து இருக்கிறது.