
ஊட்டியில் முட்டைகோஸ், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பீட்ரூட், கேரட், ஊட்டி அவரை, பச்சை மிளகாய் உள்ளிட்ட காய்கறிகள் விளைவிக்கப்படுகிறது. தும்மனட்டி, கூக்கல் தொரை, முத்தொரை பாலாடா, பழைய ஊட்டி, பொரையரட்டி, நஞ்சநாடு, மணியட்டி உள்ளிட்ட கிராமங்களில் காய்கறிகள் விளைவிக்கப்படுகின்றன. இந்த காய்கறிகள் உள்ளூர் தேவைக்கு போக மேட்டுப்பாளையம் சந்தைக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து தமிழகத்தின் பிற மாவட்டங்கள், அண்டை மாநிலங்கள் ஆகிவயற்றுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
ஊட்டி மலைப்பகுயில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் பெய்யும் கோடை மழை காய்கறி விவசாயத்திற்கு பேருதவியாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு கோடை மழை போதுமான அளவு பெய்யவில்லை. மேலும் கடந்த ஏப்ரல் மாதம் சில கிராமங்களில் ஆலங்கட்டி மழை பெய்து பல ஏக்கர் விவசாயப் பயிர்கள் நாசமாகின. இதனால் உற்பத்தி குறைந்து மலைக் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.
இது குறித்து ஊட்டியைச் சேர்ந்த மொத்த வியாபாரி ரியாஸ் கூறுகையில்,
இந்த ஆண்டு ஊட்டியில் போதிய மழை இல்லை. அதனால் தண்ணீர் அதிகம் தேவைப்படும் பச்சை மிளகாய், அவரை ஆகியவற்றின் மகசூல் குறைந்துள்ளது. பச்சை மிளகாய் கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு பச்சை மிளகாயை ரூ.1க்கு விற்பனை செய்ய வேண்டியுள்ளது. கிராமங்களில் உள்ள பல ஏக்கர் விளை நிலங்களை அழித்து ரியல் எஸ்டேட் செய்கின்றனர். மழையும் சரியாகப் பெய்யவில்லை. இதனால் தான் காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது என்றார்.


Click it and Unblock the Notifications