தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிகள் திறந்து ஒன்றரை மாதங்கள் ஆகியும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் இதுவரை முழுமையாக கிடைக்கவில்லை. 2011-12ம் கல்வியாண்டு மாணவர்கள் பலருக்கு இலவச லேப்டாப் கிடைக்கவில்லை. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச காலணி, 4 செட் சீருடை, கலர் பென்சில், ஜியோமெடரி பாக்ஸ், அட்லஸ், இலவச நோட்டு புத்தகம் உள்பட மொத்தம் 14 வகையான உதவித் திட்டங்கள் அரசால் அறிவிக்கப்பட்டன.
இதன் வினியோகத்தை கண்காணிக்க மூன்று மாவட்டத்திற்கு ஒருவர் என்ற கணக்கில் உதவி இயக்குனர் நிலையில் இருக்கும் அரசு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இதற்கிடையே இலவச பஸ் பாஸ் பலருக்கு கிடைக்கவில்லை. அரசு புதிய சீருடை அறிவித்தும் அதையும் பெற்றோர்கள் செலவு செய்து ஏற்கனவே வாங்கி கொடுத்துள்ளனர்.
அரசின் இலவசத் திட்டங்கள் மாணவ, மாணவியருக்கு கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது மக்களை அதிருப்தியடைய வைத்துள்ளது.