மும்பை: அமெரிக்காவின் சிறு நிறுவனங்கள் முதலீடு திரட்டுவதை எளிமையாக்குவதற்காக அமெரிக்க அதிபர் ஒபாமா கையெழுத்திட்ட புதிய சட்டம் இந்திய நிறுவனங்களுக்கு கை கொடுக்கக் கூடியதாக இருக்கிறது. இந்த சட்டத்தின் மூலம் அமெரிக்க பங்குச் சந்தையில் இந்திய நிறுவனங்கள் பட்டியலிடப்படுவதும் எளிமையாகியிருக்கிறது.
ஒபாமாவின் இந்த புதிய சட்டத்துக்கு ஜனநாயகக் கட்சியும் குடியரசுக் கட்சியும் இணைந்து ஆதரவு தெரிவித்திருக்கின்றன. இந்த சட்டமானது அமெரிக்க பங்குச் சந்தையில் பட்டியிலிடுவதற்கான சில கட்டண தளர்வுகள், எளிய வழிமுறைகளைக் கொண்டிருப்பதுடன் முக்கிய விவரங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது. இதனால் இந்திய நிறுவனங்களின் கவனத்தை இது ஈர்த்திருக்கிறது. இந்த சட்டம் இந்திய நிறுவனங்கள் கூட்டு முயற்சி மூலம் நிதி திரட்டுவதற்கு வாய்ப்பாகவும் இருக்கும்.
சிறிய நிறுவனங்கள் 500 பங்குதாரர்களைக் கொண்டிருக்க வேண்டும் என்ற முந்தைய விதியை மாற்றி 2000 வரையிலான தனியார் பங்குதாரர்களைக் கொண்டிருக்கவும் அனுமதிக்கிறது.
ஆன்லைன் டிராவல் ஏஜென்சியான ww.yatra.com. நிறுவனர் துருவ் சிரிங்கியின் பார்வையில் இந்த சட்டமானது நாம் அமெரிக்க பங்குச் சந்தையில் பட்டியலிடும்போது நாம் அளிக்கும் தகவல்களை மிகவும் நம்பகத்தன்மையோடு பாதுகாப்பாக வைத்திருக்கும் என்கிறார்.
இதுபோல் பல்வேறு இந்திய நிறுவனங்களும் அமெரிக்காவின் இந்த புதிய சட்டத்தை வரவேற்றுள்ளன.