வெளிநாடுகளை சேர்ந்த பணக்காரர்கள் தங்களின் கறுப்பு பணத்தை சுவிஸ் வங்கிகளில் வைப்பு நிதியாக பதுக்கி வைப்பது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஆனால் தற்போது பல நாடுகளும் தங்கள் நாட்டினரின் கறுப்பு பணத்தை சுவிஸ் வங்கியில் இருந்து மீட்டு, மீண்டும் தங்கள் நாடுகளுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதனால் சுவிஸ் வங்கிகளில் வைப்பு நிதி வைத்துள்ளவர்களின் எண்ணிக்கை குறைத்து கொண்டே போவதாக சமீப கால புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து சுவிஸ் வங்கிகளின் சங்கம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிபரத்தில் கூறியிருப்பதாவது,
கடந்த 4 ஆண்டுகளில் சுவிஸ் வங்கிகளில் முதலீடு செய்யும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பணத்தின் மதிப்பு ரூ.20 டிரில்லியனாக சரிந்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டின் முடிவில் சுவிஸ் வங்கிகளின் மொத்த சொத்து மதிப்பு 5,300 சுவிஸ் பிரான்ஸாக இருந்தது. (ஒரு சுவிஸ் பிரான்ஸ் என்பது இந்திய மதிப்பில் 57 ரூபாய்)
இதில் வெளிநாட்டு வாடியாளர்களின் வைப்பு நிதியாக 2,700 பில்லியன் சுவிஸ் பிரான்ஸூம்(51 சதவீதம்), உள்நாட்டு வாடியாளர்களின் வைப்பு நிதியாக 2,600 பில்லியன் சுவிஸ் பிரான்ஸூம்(49 சதவீதம்) முதலீடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் வெளிநாட்டு வாடியாளர்களின் பங்குகள் கடந்த 3 ஆண்டுளாக சரிந்து கொண்டே வருகிறது.
வெளிநாட்டு முதலீட்டாளர்களின் சுவிஸ் வங்கிகளின் பங்குகள் 2011ம் ஆண்டு கணக்கின்படி 51 சதவீதமாக இருந்தது. இது 2010ல் 52 சதவீதமாகவும், 2009ல் 55 சதவீதமாகவும் 2008ல் 56 சதவீதமாகவும் இருந்தது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள வெளிநாட்டு முதலீட்டாளர்களின் கறுப்பு பணத்தை மீட்பதற்காக பல நாட்டு அரசுகளிடம் இருந்து அதிக அளவில் புகார்கள் வருகின்றன. இதனால் தற்போது வெளிநாட்டு முதலீட்டாளர்களின் வைப்பு நிதியின் அளவு சரிந்து வருகிறது.
சுவிஸ் வங்கிகளில் அதிகளவில் கறுப்பு பணம் பதுக்கியிருப்பவர்கள் இந்தியர்கள் தானாம். இந்தியர்களால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணம், சுமார் ரூ.12,700 கோடி இருக்கலாம் என்று சுவிஸர்லாந்து சென்ட்ரல் வங்கி, சுவிஸ் தேசிய வங்கி ஆகியவற்றின் அதிகார பூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இது சுவிஸர்லாந்து நாட்டின் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் சேமிப்பில் உள்ள சொத்து மதிப்பில் 0.14 சதவீதமாகும்.
கடந்த 5 ஆண்டுகளில் சுவிஸ் வங்கிகளில் இந்திய முதலீட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அதிகார பூர்வமான புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. சுவிஸ் தேசிய வங்கியின் அதிகாரிகள் சிலர் கூறுகையில், சுவிஸ் வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ள வெளிநாட்டு வாடியாளர்களின் கறுப்பு பணத்தை குறித்த விபரங்கள் வெளியிட முடியாது என்றனர்.