இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
சிறுபான்மை மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள முதல்வர் ஜெயலலிதா, இஸ்லாமிய மக்கள் ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்குவதற்கு தேவையான மொத்த அனுமதியை வழங்க தனது முந்தைய ஆட்சி காலத்தில், அதாவது 9.11.2001 அன்று உத்தரவிட்டார். அதன்படி பள்ளிவாசல்களுக்கு அரிசிக்கான மொத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இஸ்லாமிய மக்களின் கோரிக்கையை கனிவுடன் ஏற்று, இந்த ஆண்டும் ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்கள் சிரமமின்றி அரிசி பெறுவதற்கு ஏதுவாக மொத்த அனுமதி வழங்க முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.
ஆவணங்களை உரிய முறையில் ஆய்வு செய்து பள்ளிவாசல்களுக்குத் தேவையான அரிசிக்கான மொத்த அனுமதியை வழங்க மாவட்ட கலெக்டர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் மாநிலம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் பயன் அடைவதுடன், 3800 மெட்ரிக் டன்கள் அரிசி மொத்த அனுமதி மூலம் பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.