டெல்லி: கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தால் விமான போக்குவரத்து இயக்குநரகம் பெரும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது.
விமானப் போக்குவரத்து இயக்குநர் பொறுப்பில் இருந்து கடந்த வாரம் திடீரென நீக்கப்பட்டார் பரத் பூஷன். அதுவும் பிரதமர் தலைமையிலான அமைச்சரவைக் குழு அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கிய நிலையிலும் அவர் நீக்கபப்ட்டிருக்கிறார்.
அவருக்கு அடுத்து பொறுப்பேற்றவர் பிரசாந்த் சுகுல். அவர் ஊடகவியலாளர்களிடம் பேசுகையில், கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் மீது பரத் பூஷன் காலத்தில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று குற்றம்சாட்டியிருந்தார்.
இதில் கடுப்பாகிப் போன பரத் பூஷன், பிரசாந்த் சுகுலுக்கு ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார். அதில் கிங்பிஷர் ஏர்லைன்ஸூக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான நோட்டீசை தாம் தயாரித்திருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் பிரசாந்த் சுகுல் அப்படி ஒரு கோப்பே "கிங்பிஷர் ஏர்லைன்ஸ்" பைலில் இல்லை என்று விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் விளக்கம் அளித்திருக்கிறார். மேலும் பரத் பூஷன் கூறுவது போல் அப்படி ஒரு கோப்பே விமான போக்குவரத்து இயக்குநரகத்தில் இல்லை என்று திட்டவட்டமாக தொடர்ந்தும் மறுத்து வருகிறார் பிரசாந்த் சுகுல்.
ஆனால் உண்மையில் நடந்தது என்ன?
பரத் பூஷன் பொறுப்பில் இருந்தபோது கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்புவதற்கான நோட் தயாரித்திருக்கிறார். அதில் கடந்த நவம்பர் மாதம் 2011-ம் ஆண்டிலிருந்து கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் செயல்பாட்டை கவனித்து வருவதாகவும் தொடர்ந்து விமான சேவையைத் தொடருவதற்கு உரிய நிதியை திரட்டிக் கொள்ளாவிட்டால் இந்த நோட்டீஸ் கிடைத்த 15 நாட்களுக்குள் கிங்பிஷர் விமான சேவைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த விவரத்தை விரிவாக பிரசாந்த் சுகுலுக்கு எழுதிய கடிதத்திலும் பரத் பூஷன் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆனால் இந்த நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்பே யாரோ சில ஆசாமிகள் போட்டுக் கொடுக்க வேண்டிய போட்டுக் கொடுத்துவிட நோட்டீஸ் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு போய் சேரும் முன்பே பரத் பூஷன் பொறுப்பிலிருந்து தூக்கியடிக்கப்பட்டிருக்கிறார்.
ஆனால் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் பரத்பூஷன் நீக்கப்பட்டதில் தமக்கு எந்தத் தொடர்புமே இல்லை என திட்டவட்டமாக மறுத்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.