சென்னை: பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பஸ் பாஸ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், பாஸ் கிடைக்கும் வரை மாணவர்கள் பஸ்சில் இலவசமாக பயணிக்கலாம் என்று போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் ஒன்று முதல் +2 வரை படிக்கும் மாணவ, மாணவியர், பள்ளிகளுக்கு சென்று வர ஆண்டுதோறும் இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு முதல் இலவச பஸ் பாஸ், 'ஸ்மார்ட் கார்டு' வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான பணி தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சில இடங்களில் இன்னும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படவில்லை. இதனால் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ, மாணவியர், பஸ்சில் டிக்கெட் எடுத்து சென்று வருகின்றனர். மாணவ, மாணவியரின் சிரமத்தை கருத்தில் கொண்டு, இலவச பஸ் பாஸ் கிடைக்கும் வரை பஸ்சில் இலவசமாக சென்று வர போக்குவரத்து அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர்.
இதற்காக அரசு பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களிடம், சீருடையில் உள்ள மாணவர்களை இலவசமாக பயணிக்க அனுமதிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தமிழக போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறியதாவது,
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளது. சில பள்ளிகள் தாமதமாக விண்ணப்பங்களை அனுப்பியதால், இலவச பஸ் பாஸ் (ஸ்மார்ட் கார்டு) வழங்கும் பணி தாமதமாகி உள்ளது. இலவச பஸ் பாஸ் கிடைக்காதவர்களுக்கு விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Click it and Unblock the Notifications