டெல்லி: இன்போசிஸ் நிறுவனம் இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்காவில் சுமார் 2,000 பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
நாட்டின் இரண்டாவது பெரிய ஐடி நிறுவனமான இன்போசிஸ் கடந்த 2011ம் ஆண்டு மட்டும் அமெரிக்காவில் 1,200 பேரை பணி அமர்த்தியது. இந்த ஆண்டு அங்கு 1,000க்கும் அதிகமானவர்களை வேலைக்கு எடுத்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்காவில் சுமார் 2,000 பேரை பணி அமர்த்த திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு புராஜெக்ட் வழங்குவதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த எதிர்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வேலைகளை இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்குவதற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் மற்றும் அரசுகளும் கடும் எதிரப்பு தெரிவித்து வருகின்றன.
வேலைகளை இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்காவிட்டால் உள்நாட்டு மக்களுக்கு வேலை கிடைக்கும் என்பதால் அவ்வாறு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் வெளிநாட்டவர்களின் வேலையை தாங்கள் ஒன்றும் தட்டிப் பறிக்கவில்லை என்று கூறுவது போன்று கடந்த சில ஆண்டுகளாக இந்திய ஐ.டி. நிறுவனங்கள் மேற்கத்திய நாடுகளில் ஏராளமானோரை வேலைக்கு எடுத்துள்ளன.
இதற்கிடையே அமெரிக்காவில் தனது செயல்பாடுகளை அதிகரிக்க 125 பேர் வேலைபார்க்கும் வசதி கொண்ட மையத்தை விஸ்கான்சினில் இன்போசி்ஸ் துவங்கவிருக்கிறது. மேலும் அங்கு பயிற்சி மையமும் அமைக்கப்படுகிறது.
இந்த மையத்தையும் சேர்த்து அமெரிக்காவில் இன்போசிஸ் நிறுவனத்திற்கு 18 அலுவலகங்கள் உள்ளன. விஸ்கான்சின் மையம் அமெரிக்க மோட்டார்சைக்கிள் தயாரிப்பாளரான ஹார்லி-டேவிட்சன் நிறுனவத்துடன் இணைந்து பணிபுரியும். இந்த மையம் இந்த ஆண்டில் துவங்கப்படும். மேலும் இந்த நிதியாண்டில் பி.பி.ஓ. வுக்கு 13,000 பேர் உள்பட உலகம் முழுவதும் 35,000 பேரை வேலைக்கு எடுக்க இன்போசிஸ் திட்டமிட்டுள்ளது.